சிகரெட் சூடு.. சித்திரவதை.. ஜாலியாக இருக்க முடியாததால் 2 மகன்களை டார்ச்சர் செய்த பெற்றோர்!
அடிக்கடி வீட்டில் இருந்து மகன்களின் அலறல் சத்தம் கேட்டதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் இரு குழந்தைகள் நிலையைப் பார்த்து ஷாக்காகினர்.

தெலங்கானா மாநிலத்தில் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு இடையூறாக மகன்கள் இருப்பதாக பெற்றோர் இரும்பு கம்பியால் அடித்து, சிகரெட்டால் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தெலங்கானா மாநிலத்தில் சூர்யபேட்டையில் தான் நடைபெற்றுள்ளது. அங்கு நகிரிகாந்தி ரவி என்பவர் தனது மனைவி இந்துவுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு 5 வயதில் தனுஷ் மற்றும் 2 வயதில் ரேவந்த் என இரு மகன்கள் உள்ளனர். நகிரிகாந்தி ரவி லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இப்படியான நிலையில் சமீபகாலமாக பெற்றோர்களின் நடவடிக்கைகள் சரியில்லாமல் இருந்துள்ளது.
அடிக்கடி வீட்டில் இருந்து மகன்களின் அலறல் சத்தம் கேட்டதை கேட்ட அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து காவல்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு மற்றும் சைல்ட்லைன் ஆகியோரோடு போலீசாரும் தீவிரமாக அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தி வந்த தகவல் உண்மை என்பதை உறுதி செய்தனர்.
உடனடியாக நகிரிகாந்தி ரவி வீட்டுக்கு சென்று பார்த்தபோது அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். அங்கு இரு குழந்தைகள் உடலில் தீயினால் சுட்ட காயங்கள், நகக்கீறல்கள், அடித்ததால் ஏற்பட்ட தழும்புகள் என இருந்துள்ளது. அதேசமயம் இளைய மகனுக்கு இடது கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இரு குழந்தைகளையும் மீட்ட போலீசார் அவர்களை மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து நகிரிகாந்தி ரவி மற்றும் இந்து ஆகியோரைப் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதாவது, “ரவி ஏற்கனவே திருமணமான நிலையில் தனது முதல் மனைவியிடமிருந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துள்ளார். பின்னர் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்றவரான இந்துவை மணந்துள்ளார். இரு மகன்களில் ஒருவர் கடந்த திருமண வாழ்வில் இந்துவுக்கு பிறந்தவன். இதனால் அந்த குழந்தை மட்டுமல்லாமல் தங்களுக்குப் பிறந்த இளைய குழந்தையும் தனிப்பட்ட சுதந்திரத்துக்கு தடையாக இருப்பதாக கருதியுள்ளனர்.
Also Read: Bengaluru: மனைவிக்கு கள்ளத்தொடர்பு.. கணவர் சண்டை.. கோபத்தில் குழந்தையை கொன்ற பெற்றோர்!
இதனால் விரக்தியில் குழந்தைகளை சரமாரியாக தாக்கியதாகவும், கரண்டியை பழுக்கக் காய்ச்சி மீண்டும் மீண்டும் சூடு போடுதல், சிகரெட்டால் சூடு வைத்தல், வார்த்தைகளால் காயப்படுத்துதல் போன்ற கொடூர செயல்களில் ஈடுபட்டனர் என தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிஎன்எஸ் சட்டத்தின்படி சிறார் நீதி மற்றும் குழந்தைகள் பரமாரிப்பு, பாதுகாப்பு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சிகிச்சை பெற்ற குழந்தைகள் சூர்யபேட்டையில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் சமூக வலைத்தளங்களில் கடும் கண்டனங்களைப் பெற்றுள்ளது. பலரும் குழந்தைகளுக்காக தவம் கிடக்கும் நிலையில் அற்ப சந்தோசத்திற்காவும், சுதந்திரத்துக்காவும் எப்படி இப்படியெல்லாம் கொடுமைப்படுத்த மனம் வருகிறது என கேள்வியெழுப்பியுள்ளனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















