பெண்ணின் ஆசனவாயில் தங்கச்செயின் ! சிங்கப்பெருமாள் கோயிலில் 5 பெண்கள் கைது - நடந்தது என்ன ?
"செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோயில் பகுதியில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது"

சிங்கபெருமாள் கோவிலில் மூதாட்டியிடம் செயின் திருடப்பட்ட சம்பவத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டு ஆசனவாயில் மறைத்து வைத்திருந்த தங்கச்செயின் பறிமுதல் செய்யப்பட்டது.
5 சவரன் தங்கச் சங்கிலி திருட்டு
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த ஆதனூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் என்பவரது மனைவி பாஞ்சாலி(62). இவர் நேற்று முன்தினம் காலை சிங்கபெருமாள் கோவிலில் பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவிலுக்கு சென்றிருந்தார். கோவில் பிரகாரத்தை சுற்றி முடித்து விட்டு நுழைவு பகுதி அருகில் வழங்கப்பட்ட அன்னதான பிரசாதத்தை வாங்கி சாப்பிட்ட பின் பார்த்த போது, தனது கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்க செயின் காணவில்லை என்பது தெரிய வந்தது. இதுகுறித்து மூதாட்டி கோவில் நிர்வாகிகளிடமும் போலீசாரிடமும் தகவல் தெரிவித்தார்.
சிசிடிவி காட்சிகள் சிக்கிய ஐந்து பெண்கள்
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மறைமலைநகர் போலீசார் கோவிலில் உள்ள 'சிசிடிவி' கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அன்னதானம் வழங்கும் இடத்தில் 5 பெண்கள் மூதாட்டியை சுற்றி நின்று ஒரு பெண் மட்டும் பாஞ்சாலி கழுத்தில் இருந்த தங்க செயினை கடித்து எடுக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகள் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் ரோந்து பணியில் இருந்த போலீசாருக்கு பகிரப்பட்டு அதனடிப்படையில் சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி. சாலையில் போலீசார் தேடிவந்தனர்.
கோயிலை மையமாக வைத்து திருட்டு சம்பவம்
அப்போது சிங்கபெருமாள் கோயில் பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த 5 பெண்களை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று நடத்திய விசாரணையில், பிடிபட்ட பெண்கள் திருச்சி மாவட்டம் சமயபுரம் பகுதியை சேர்ந்த மஞ்சுளா தேவி (42) சித்ரா (28) மீனா (31) முத்துமாரி (60) அஞ்சலி (30) என்பதும் இவர்கள் கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கும்பலாக சென்று தங்க நகைகள் அணிந்திருக்கும் பெண்களை குறி வைத்து நகைபறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவது தெரிய வந்தது.
ஆசனவாயில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள்
மேலும் திருடிய நகையை மறைத்து வைத்துவிட்டு நகை இல்லை என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், அவர்களை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ஸ்கேன் செய்ததில் ஆசனவாயில் பகுதியில் நகையை மறைத்து வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மகளிர் காவலர்களை வைத்து அந்த நகையை போலீசார் மீட்டனர். இதையடுத்து ஐந்து பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.






















