Telangana | ஹாஸ்டலில் செக்ஸ் தொல்லை..! தற்கொலை செய்துகொண்ட 16 வயது மாணவன்..! விசாரணை தீவிரம்!
ஹைதராபாத் அருகே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய 16வயது மாணவன், தான் தங்கியிருந்த விடுதியிலே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது கவுலிடோட்டி. கச்சிபவுலி காவல் நிலையத்திற்கு உட்பட்ட இந்த பகுதியில் தெலுங்கானா சமூக நல சாகுபடி குடியிருப்பு கல்வி நிறுவனங்கள் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான தங்கும் விடுதி ஒன்று இயங்கி வருகிறது. இந்த நிலையில், இந்த மாணவர்கள் விடுதியில் படித்து வந்த 16 வயது மாணவன் தான் தங்கியிருந்த விடுதி அறையிலே தற்கொலை செய்துகொண்டுள்ளான்.
அந்த மாணவன் தங்கியிருந்த அறை வழக்கம்போல காலையில் திறக்கப்படும் நேரத்தில் திறக்கப்படாமல் இருந்துள்ளது. மாணவன் தூங்கிக்கொண்டிருக்கிறார் என்று எண்ணி கதவை திறக்குமாறு தட்டியுள்ளனர். ஆனால், நீண்ட நேரம் கதவைத் தட்டியும் திறக்காததால் விடுதி வார்டன் மற்றும் சக மாணவர்கள் அதிர்ச்சிடையந்துள்ளனர். இதையடுத்து, கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவன் அவனது அறையில் இருந்த சீலிங்கில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

உடனடியாக அவனை மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவன் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும், போலீசார் மாணவன் அறையில் நடத்திய சோதனையில் ஒரு கடிதத்தை கண்டுபிடித்துள்ளனர். அதில், தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய காரணத்தால் தற்கொலை செய்துகொள்வதாக எழுதியிருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.
மாணவனின் உயிரிழப்பு தொடர்பாக அவரது பெற்றோர்கள் கூறும்போது, மாணவர்கள் விடுதியில் செல்போன்களுக்கு அனுமதி கிடையாது. இருப்பினும், ஒரு குறிப்பிட்ட நாளில் விடுதி நிர்வாகமே செல்போன் ஏற்பாடு செய்து பெற்றோர்களிடம் பேச அனுமதிக்கும். கடந்த 14-ந் தேதி எங்களது மகன் பேசும்போது நன்றாகதான் பேசினான். ஏன் இத்தனை நாட்கள் பேசவில்லை என்று கேட்டபோது, படிப்பில் உன்னிப்பாக இருந்ததால் பேச முடியவில்லை என்றான். ஆனால், தற்போது இந்த அதிர்ச்சியான செய்தி கிடைத்துள்ளது என்றனர்.

மாணவன் உயிரிழந்தது தொடர்பாக மாணவனின் உறவினர்கள் விடுதி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
எந்த ஒரு பிரச்னைக்கு தற்கொலை தீர்வாகாது. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதில் இருந்து மீண்டு மாற்றம் ஏற்பட கீழ்காணும் சேவை எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும். மாநில உதவிமையம் : 104 சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Guduvanchery Pocso Case : 10 வயது சிறுமியிடம் அத்துமீறல்.. வடமாநில நபர் போக்சோவில் கைது
ட்ரெண்டிங் செய்திகள்






















