இந்திய வாழைப்பழத்துக்கு இவ்ளோ டிமாண்டா? ஆயிரம் கோடிகளில் நடக்கும் பிசினஸ்!
இந்தியாவில் இருந்து கடந்த 2024-25ம் நிதியாண்டில் ரூபாய் 3 ஆயிரத்து 209 கோடிக்கு மட்டும் வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியா மென்பொருள், தொழில்துறை என்று பல துறைகளில் முன்னேற்றம் கண்டிருந்தாலும் விவசாயம் பிரதான தொழிலாகவே தற்போதும் இருந்து வருகிறது. இந்தியாவில் இருந்து பல விளைபொருட்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதில் மிகவும் முக்கியமான விளை பொருளாக வாழைப்பழம் உள்ளது.
வாழைப்பழ ஏற்றுமதி:
இந்த நிலையில், இந்தியாவில் வாழைப்பழ ஏற்றுமதி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது இந்தியாவில் உள்ள வாழைப்பழ விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக இந்தியாவில் இருந்து திராட்சையே அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், அதை வாழைப்பழம் பின்னுக்குத் தள்ளியுள்ளது.
கடந்த 2023-24 நிதியாண்டில் 2 ஆயிரத்து 474 கோடி ரூபாய்க்கு வாழைப்பழம் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2024- 25 நிதியாண்டில் வாழைப்பழ ஏற்றுமதி ரூபாய் 3 ஆயிரத்து 209 கோடியாக அதிகரித்துள்ளது. இது 30 சதவீதம் அதிகம் ஆகும். இந்திய வாழைப்பழங்களுக்கு வெளிநாட்டு சந்தையில் எந்தளவு முக்கியத்துவம் இருக்கிறது என்பதை இது காட்டுகிறது.
இந்தியாவில் இருந்து ஈரான், ஈராக், உஸ்பெகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார் ஆகிய நாடுகளுக்கு அதிகளவு வாழைப்பழங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. 2024-25 நிதியாண்டில் ஈராக் நாட்டிற்கு மட்டும் 47 சதவீதம் வாழைப்பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதாவது, 2023-24 நிதியாண்டில் இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட வாழைப்பழத்தை காட்டிலும் இது 108 சதவீதம் அதிகம் ஆகும்.
பாதிக்கப்பட்ட தேயிலை ஏற்றுமதி:
தற்போது இஸ்ரேல்- ஈரான் தாக்குதல் நடந்து வருவதால் ஈரான் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து பொருட்களை ஏற்றுமதி செய்வதில் கடும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டிற்கு இந்தியாவில் இருந்து அதிகளவில் தேயிலை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போது இஸ்ரேல் - ஈரான் தாக்குதல் நடந்து வருவதால் இந்தியாவில் இருந்து அங்கு அனுப்புவதற்கு தயாராக உள்ள தேயிலை ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், இந்தியாவின் தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் ரூபாய் 100 கோடி முதல் ரூபாய் 150 கோடி வரை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்திய ஏற்றுமதி உணவுகள்:
இந்தியாவில் இருந்து தேயிலை, வாழைப்பழம் ஆகியவற்றுடன் முட்டை, பாஸ்மதி அரிசி, கோதுமை, முந்திரி, தேங்காய் எண்ணெய் உள்ளிட்ட எண்ணெய்கள், சர்க்கரை, காய்கறிகள், பழங்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.



















