Hyundai Hybrids: 18 புதிய ஹைப்ரிட் கார்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் முதல் EV - ஹுண்டாயின் மாஸ் ப்ளான்
Hyundai Road Map 2030: ஹுண்டாய் நிறுவனம் சார்பில் அடுத்த ஆண்டில் புதியதாக, 18 ஹைப்ரிட் கார்கள் சந்தைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hyundai Road Map 2030: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு புதிய மின்சார கார் ஒன்று விரைவில் சந்தைப்படுத்தப்படும் என ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது.
ஹூண்டாயின் 5 ஆண்டுகளுக்கான ப்ளான்:
அண்மையில் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்ற முதலீட்டாளர்களுக்கான நிகழ்ச்சியில், அடுத்த 5 ஆண்டுகளுக்கான தனது திட்டத்தை ஹுண்டாய் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி கார் மாடல்களின் விரிவாக்கம், உற்பத்தி மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப முறையில் அடுத்த கட்டத்திற்கு செல்வது ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள் 5.55 மில்லியன் அளவிலான கார் விற்பனையை எட்ட ஹுண்டாய் இலக்கு நிர்ணயித்துள்ளது. அதில் 60 சதவிகித விற்பனையை வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் கொரியா சந்தையில் மின்சார வாகனங்களின் மூலம் மட்டுமே எட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் ஹைப்ரிட் போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தும் விதமாக புதியதாக, 18 மாடல்களை அறிமுகப்படுத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
18 புதிய ஹைப்ரிட் கார்கள்
ஹுண்டாய் நிறுவனம் புதிய தலைமுறை க்ரேட்டாவை, தனது முதல் ஹைப்ரிட் கார் மாடலாக வரும் 2027ம் ஆண்டு சந்தைப்படுத்த உள்ளது. அதில் ஹைப்ரிட் அம்சம் சேர்க்கப்பட்ட 1.5 லிட்டர் நேட்சுரலி ஆஸ்பிரேடட் பெட்ரோல் இன்ஜின் வழங்கப்படலாம். இதுபோக அல்கசார் மற்றும் டக்சன் கார்களுக்கு இடையே பொருந்தும் வகையில், மூன்று வரிசை இருக்கை அமைப்பை கொண்ட ஹைப்ரிட் எஸ்யுவியையும் 2027ம் ஆண்டில் அறிமுகப்படுத்தக்கூடும். Ni1i என்ற கோட்நேமை கொண்ட இந்த காரானது, க்ரேட்டாவில் வழங்கப்படும் ஹைப்ரிட் இன்ஜின் அம்சத்தை அப்படியே தொடரும் என கூறப்படுகிறது. ஹுண்டாயின் முற்றிலும் புதிய பாலிசேட் ஹைப்ரிட் கார் மாடலானது, பிராண்டின் அடுத்த தலைமுறை TMED - II தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட உள்ளதையும் உறுதி செய்துள்ளது. இது செயல்பாடு மற்றும் செயல்திறனை மேம்படுத்துமாம். இது 2028ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாம். நிறுவனத்தின் சொகுசு கார் ப்ராண்டானா ஜெனிசிஸும் 2026ம் ஆண்டு முதல் ஹைப்ரிட் கார் மூலம் விரிவுபடுத்தப்பட உள்ளது.
இந்தியாவிற்கான பிரத்யேக மின்சார கார்
குறிப்பிட்ட சந்தைகளுக்கு பிராந்தியங்களுக்கு ஏற்ப பிரத்யேக கார்களை சந்தைப்படுத்த உள்ளதாகவும் ஹுண்டாய் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, உள்நாட்டு தேவைகளுக்கு ஏற்ப, உள்நாட்டு விநியோக சங்கிலிகளைச் சார்ந்து, இந்தியாவிற்கான மின்சார வாகனம் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு சந்தைக்கு என இங்கேயே தயாரிக்கப்பட உள்ள புதிய மின்சார காரானது, 2030ம் ஆண்டு விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்தியாவில் ஹுண்டாய் நிறுவனம் தரப்பில் தயாரிக்கப்பட உள்ள முதல் மின்சார காராகவும் இது உருப்பெற உள்ளது.
உற்பத்தியை அதிகரிக்க ஹுண்டாய் முடிவு
இதுபோக சர்வதேச சந்தையில் தனது உற்பத்தி திறனை 2030ம் ஆண்டிற்குள், கூடுதலாக 12 லட்சம் யூனிட்கள் அளவிற்கு அதிகரிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் இந்தியாவின் புனேவில் உள்ள மல்டி மாடல் எக்ஸ்போர்ட் ஹப்பில் மட்டும், கூடுதலாக 2.5 லட்சம் யூனிட்களை உற்பத்தி செய்யும் திட்டமும் அடங்கும். இதுபோக அமெரிக்காவில் உள்ள ஹுண்டாய் மோட்டார் க்ரூப் மெடாபிளாண்டில் கூடுதலாக 5 லட்சம் யூனிட்களும், உல்சனில் உள்ள மின்சார வாகனங்களுக்கான பிரத்யேக ஆலையில் கூடுதலாக 2 லட்சம் யூனிட்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளனவாம்.
ட்ரெண்டிங் செய்திகள்























