ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! 47 ரயில்களில் புதிய நிறுத்தங்கள்: உங்கள் ஊரில் ரயில்கள் நிற்குமா? உடனே தெரிந்து கொள்ளுங்கள்!
தமிழகம் மற்றும் கேரளா வழியாக செல்லும் 47 ரயில்களுக்கு பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் தற்காலிக நிறுத்தங்களை வழங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

திருச்சி:தமிழகம் மற்றும் கேரளா வழியாக செல்லும் முக்கிய விரைவு ரயில்களில் பயணிக்கும் பயணிகளின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, 47 ரயில்களுக்கு பல்வேறு முக்கிய ரயில் நிலையங்களில் கூடுதல் தற்காலிக நிறுத்தங்களை வழங்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான முறையான அறிவிப்பை தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி மண்டலம் வெளியிட்டுள்ளது.
இந்த புதிய நிறுத்தங்கள் பெரும்பாலும் வரும் ஜனவரி 26, 2026 முதல் அமலுக்கு வருகின்றன. குடியரசு தினத்தை முன்னிட்டு பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த சலுகை, சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற பயணிகளுக்கு பெரும் பயனாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கிய ரயில்கள் மற்றும் நிறுத்த விவரங்கள்
தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி மண்டலம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின்படி, சென்னை எழும்பூர், தாம்பரம், ராமேஸ்வரம் மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட வழித்தடங்களில் செல்லும் ரயில்களுக்கு புதிய நிறுத்தங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன் விரிவான விவரங்கள் பின்வருமாறு
1. சென்னை - தென் மாவட்ட ரயில்கள்
* சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (12633): ஜனவரி 26 முதல் கோவில்பட்டி நிலையத்தில் அதிகாலை 02.03 மணிக்கு நின்று செல்லும்.
* தூத்துக்குடி - சென்னை எழும்பூர் முத்துநகர் எக்ஸ்பிரஸ் (12694): தூதிமேலூர் நிலையத்தில் இரவு 21.10 மணிக்கு நின்று செல்லும்.
* தாம்பரம் - செங்கோட்டை சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20683): இந்த ரயிலுக்கு செங்கல்பட்டு (21.18 மணி), சிவகங்கை (05.13 மணி) மற்றும் பேராவூரணி (03.30 மணி) ஆகிய மூன்று நிலையங்களில் புதிய நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
* செங்கோட்டை - தாம்பரம் சூப்பர்ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் (20684): மறுமார்க்கத்தில் இந்த ரயில் சிவகங்கை மற்றும் பேராவூரணி நிலையங்களில் நிறுத்தப்படும்.
2. ராமேஸ்வரம் - சென்னை வழித்தடம்
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (16103) மற்றும் அதன் மறுமார்க்க ரயில் (16104) ஆகிய இரண்டு ரயில்களும் இனி அதிராமப்பட்டினம், முத்துப்பேட்டை மற்றும் பேராவூரணி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இது டெல்டா மாவட்ட மற்றும் கடலோர பகுதி பயணிகளுக்கு வரப்பிரசாதமாகும்.
3. அந்த்யோதயா மற்றும் இதர விரைவு ரயில்கள்
* தாம்பரம் - நாகர்கோவில் அந்த்யோதயா எக்ஸ்பிரஸ் (20691/20692): இரு மார்க்கங்களிலும் செல்லும் இந்த ரயில் இனி மணப்பாறை, திருமங்கலம் மற்றும் நாங்குநேரி ஆகிய நிலையங்களில் நிறுத்தப்படும்.
* காரைக்கால் - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (16187): ஜனவரி 27 முதல் கொடுமுடி நிலையத்தில் நின்று செல்லும்.
* புதுச்சேரி - திருப்பதி எக்ஸ்பிரஸ் (16111/16112): கருங்குழி, தக்கோலம், வில்லியம்பாக்கம் மற்றும் முண்டியம்பாக்கம் ஆகிய நிலையங்களில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்பட்டுள்ளன.
டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கூடுதல் வசதிகள்
திருச்சிராப்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களுக்காக சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
* திருச்சி - சென்னை எழும்பூர் (22675/22676) சோழன் எக்ஸ்பிரஸ்: இரு மார்க்கங்களிலும் திருவெறும்பூர் நிலையத்தில் நிறுத்தப்படும்.
* சென்னை - மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ் (16179/16180): இனி திருப்பாதிரிப்புலியூர் நிலையத்தில் நின்று செல்லும்.
* சென்னை - தஞ்சாவூர் உழவன் எக்ஸ்பிரஸ் (16865): அதிகாலை 03.13 மணிக்கு வைத்தீஸ்வரன்கோவில் நிலையத்தில் நிறுத்தப்படும்.
* விழுப்புரம் - திண்டுக்கல் எக்ஸ்பிரஸ் (16867/16868): பிச்சாண்டார் கோவில் நிலையத்தில் நின்று செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேரளா மற்றும் வெளிமாநில ரயில்கள்
தமிழகத்தை கடந்து கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களிலும் மாற்றங்கள் உள்ளன.
*சென்னை - குருவாயூர் எக்ஸ்பிரஸ் (16127/16128): கேரளாவின் அம்பலப்புழா நிலையத்தில் நிறுத்தப்படும்.
*புருலியா - திருநெல்வேலி சூப்பர்ஃபாஸ்ட் (22605/22606): ஆரணி ரோடு நிலையத்தில் நின்று செல்லும்.
*கச்சிகுடா - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (16353/16354): பிப்ரவரி 1 முதல் ராசிபுரம் நிலையத்தில் நிறுத்தப்படும்.
பயணிகள் கவனத்திற்கு
இந்த புதிய நிறுத்தங்களுக்கான கால அட்டவணை மற்றும் வருகை/புறப்பாடு நேரங்கள் குறித்த கூடுதல் விவரங்களை ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது அந்தந்த ரயில் நிலையங்களில் உள்ள தகவல் மையங்களில் சரிபார்த்துக்கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மண்டல மக்கள் தொடர்பு அலுவலர் வினோத்.R தெரிவித்துள்ளார்.
























