![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Pramod Bhagat Wins Gold: இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம்....! பாரா பேட்மிண்டனில் உலக சாம்பியன் பிரமோத் பகத் அசத்தல் !
Pramod Bhagat Wins Gold: டோக்கியோ பாராலிம்பிக் பாரா பேட்மிண்டன் ஆடவர் எஸ்.எல் 3 பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத் இறுதி போட்டியில் பங்கேற்றார்.
![Pramod Bhagat Wins Gold: இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம்....! பாரா பேட்மிண்டனில் உலக சாம்பியன் பிரமோத் பகத் அசத்தல் ! Tokyo Paralympics Pramod Bhagat wins gold in badminton Pramod Bhagat Wins Gold: இந்தியாவுக்கு இன்னும் ஒரு தங்கம்....! பாரா பேட்மிண்டனில் உலக சாம்பியன் பிரமோத் பகத் அசத்தல் !](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/04/704f8feb76ff40f6c6ddfb4172adf66e_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளில் முதல் முறையாக பாரா பேட்மிண்டன் போட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் இந்தியா சார்பில் 7 பேர் பங்கேற்றனர். அதில் பிரமோத் பகத், மனோஜ் சர்கார், சுஹேஷ் யேத்திராஜ், தருண் தில்லான், கிருஷ்ண நாகர் ஆகிய 5 பேரும் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியிருந்தனர். அத்துடன் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரமோத் பகத்- பாலக் கோலி ஜோடியும் அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று காலை அரையிறுதி போட்டிகள் நடைபெற்றன. அதில் பிரமோத் பகத் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
இந்நிலையில் ஆடவர் எஸ்.எல் 3 பிரிவின் இறுதி போட்டியில் இந்தியாவின் பிரமோத் பகத் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த டேனியல் பெத்தேலை எதிர்த்து விளையாடினார். உலக தரவரிசையில் நம்பர் ஒன் வீரரான பிரமோத் பகத் மற்றும் இரண்டாம் நிலை வீரரான பெத்தேல் ஆகிய இருவருக்கும் இடையேயான போட்டி என்பதால் இந்தப் போட்டியில் கடும் எதிர்ப்பார்ப்பு இருந்து வந்தது. இதில் முதல் கேமில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரமோத் பகத் 21 நிமிடங்களில் 21-14 என்ற கணக்கில் வென்றார். இரண்டாவது போட்டியின் தொடக்கத்தில் பெத்தேல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனினும் பின்னர் பிரமோத் பகத் தன்னுடைய சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தி 21- 17 என்ற கணக்கில் வென்று தங்கப்பதக்கத்தை வென்றார்.
முன்னதாக இன்று காலை நடைபெற்ற ஆடவர் எஸ்.எல்.4 பிரிவு ஒற்றையர் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் சுஹேஷ் யேத்தி ராஜ் இந்தோனேஷியாவின் ஃபிரட்டியை எதிர்த்து விளையாடினார். இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய சுஹேஷ் யேத்திராஜ் 11 நிமிடங்களில் முதல் கேமை 21-9 என்ற கணக்கில் வென்றார். அதன்பின்னர் நடைபெற்ற இரண்டாவது கேமில் தொடக்கத்தில் இரு வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து வந்தனர். எனினும் இரண்டாவது கேமை 21-15 என்ற கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பாரா பேட்மிண்டனில் மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். அவர் நாளை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பிரான்சு வீரர் லூகாஸை எதிர்த்து விளையாட உள்ளார்.
அதேபோல் ஆடவர் எஸ்.ஹெச் 6 பிரிவு பாரா பேட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் இந்தியாவின் கிருஷ்ணா நாகர் பிரிட்டன் வீரர் கூம்ப்ஸை எதிர்த்து விளையாடினார். இதில் 21-10, 21-11 என்ற புள்ளிக்கணக்கில் இரண்டு கேம்களை கைப்பற்றி போட்டியை வென்றார். இதன் மூலம், இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அவர் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இவரும் நாளை காலை நடைபெற இறுதிப் போட்டியில் ஹாங்காங் சீன வீரர் சூ மான் கியை எதிர்த்து விளையாட உள்ளார்.
மேலும் படிக்க:
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)