![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
International Olympic Day: சர்வதேச ஒலிம்பிக் தினம் இன்று… ஒலிம்பிக் குறித்து பலருக்கும் தெரியாத 7 விஷயங்கள்!
2023-ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் தினத்தன்று உலகம் ஒலிம்பிக் இயக்கத்தை கொண்டாடும் இந்த வேளையில், ஒலிம்பிக் பற்றி பலருக்கும் தெரியாத ஏழு சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே…
![International Olympic Day: சர்வதேச ஒலிம்பிக் தினம் இன்று… ஒலிம்பிக் குறித்து பலருக்கும் தெரியாத 7 விஷயங்கள்! International Olympic Day 2023 Interesting facts about Olympics First Game Gold Medals International Olympic Day: சர்வதேச ஒலிம்பிக் தினம் இன்று… ஒலிம்பிக் குறித்து பலருக்கும் தெரியாத 7 விஷயங்கள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/23/78a6f71af174880295089ce5b299dc641687496320080109_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விளையாட்டு உலகில் தவிர்க்க முடியாத ஒன்று ஒலிம்பிக். வெவ்வேறு விளையாட்டு வீரர்களை ஒன்று சேர்ப்பதில் இருந்து வழக்கத்திற்கு மாறான விளையாட்டுகளை அறிமுகப்படுத்துவது வரை, வீரர்களின் நட்பு மற்றும் ஒத்துழைப்பைக் கொண்டாடுவது முதல் கனவுகளை நிறைவேற்றும் மேடையாக மாறுவது வரை, ஒலிம்பிக் விளையாட்டின் உணர்வை மட்டுமல்ல, மனிதகுலத்தையும் உயர்த்தியுள்ளது என்றால் மிகையாகாது. 2023 ஆம் ஆண்டு சர்வதேச ஒலிம்பிக் தினத்தன்று உலகம் ஒலிம்பிக் இயக்கத்தை கொண்டாடும் இந்த வேளையில், ஒலிம்பிக் பற்றி பலருக்கும் தெரியாத ஏழு சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே…
- முதல் ஒலிம்பிக்
முதன்முதலில் ஒலிம்பிக் விளையாட்டு கிமு 776 இல் கிரேக்கத்தின் ஒலிம்பியாவில் நடத்தப்பட்டது. அந்தக் காலங்களில், கடவுள்களின் ராஜாவான ஜீயஸின் நினைவாக ஒலிம்பிக் போட்டிகள் நடத்தப்பட்டன. இது பண்டைய ஒலிம்பிக் என குறிப்பிடப்படுகிறது, இந்த பிரபலமான நிகழ்வின் சகாப்தம் கி.பி 393 இல் முடிவடைந்தது. 1500 ஆண்டுகளுக்குப் பிறகு 1894 இல் பரோன் பியர் டி கூபெர்டின் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியை உருவாக்கி நவீன ஒலிம்பிக்கின் முன்னோடியானார். முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகள் 1896 இல் கிரேக்கத்தின் ஏதென்ஸில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
- ஒலிம்பிக் சின்னம்
ஐந்து வளையங்களைக் கொண்ட ஒலிம்பிக் சின்னத்திற்கு ஒரு அர்த்தம் உண்டு. ஐந்து வளையங்கள் மக்கள் வசிக்கும் ஐந்து கண்டங்களையும், உலகின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களின் சந்திப்பையும் குறிக்கின்றன. அந்த வளையங்களில் உள்ள ஐந்து வண்ணங்கள் மற்றும் வெள்ளை பின்னணி நிறத்துடன் சேர்ந்து 1896 ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட அனைத்து நாடுகளின் கொடி வண்ணங்களையும் இணைத்துள்ளதகா பியர் டி கூபெர்டின் சின்னம் உருவாக்கும்போது பொருள் கூறியுள்ளார்.
- ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள்
பலருக்கும் இந்த செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தலாம்… இன்றைய காலத்தில் வழங்கப்படும் ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் முற்றிலும் தங்கத்தால் செய்யப்பட்டவை அல்ல. கடைசியாக 1912 ஆம் ஆண்டு ஸ்வீடனில் நடந்த கோடைகால விளையாட்டுப் போட்டியில் தங்கத்தால் செய்யப்பட்ட ஒலிம்பிக் தங்கப் பதக்கங்கள் வழங்கப்பட்டன. இப்போதெல்லாம், அவை வழக்கமாக 6 கிராம் தங்கத்தை மட்டுமே கொண்டிருக்கின்றன, மீதமுள்ள எடைக்கு வெள்ளி அல்லது பிற மறுசுழற்சி செய்யப்பட்ட உலோகங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
- பதக்கங்களை கடிக்கும் பாரம்பரியம்
ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்கள் அதனை தங்கள் பற்களுக்கு இடையே வைத்து கடிப்பதை நாம் பார்த்திருப்போம். பலரும் ஏன் அப்படி செய்கிறார்கள் என்று கூட சிந்தித்திருக்கலாம். அதற்கு காரணம், பண்டைய காலங்களில், மக்கள் உலோகத்தின் நம்பகத்தன்மையை சரிபார்க்க அதனை கடிப்பார்கள். இந்த நடைமுறை குறிப்பாக தங்க நாணயங்களை சோதனை செய்ய பயன்படுத்தப்பட்டது. முன்பு தங்கத்தில் தந்தபோது இந்த கலாச்சாரம் உருவாகி இருக்கலாம் என்று கூறப்படகிறது. இப்போது கொடுப்பவை தங்கம் இல்லை என்றாலும் வென்றவர்கள் தங்கள் பதக்கங்களைக் கடித்துக்கொள்வது ஒரு பாரம்பரியமாகிவிட்டது. சிலர் பாரம்பரியத்தைப் பின்பற்றுவதற்காக இதைச் செய்கிறார்கள், மற்றவர்கள் புகைப்படக்காரர்கள் கேட்பதால் அந்த போஸை செய்கிறார்கள். இந்த பழக்கத்தில் உண்மையான விளையாட்டு முக்கியத்துவம் எதுவும் இருப்பதாக கண்டறியப்படவில்லை.
- கலைக்கான பதக்கங்கள்
ஒரு காலத்தில், கலைஞர்கள் ஒலிம்பிக்கில் கலந்துகொண்டு தங்கள் கலைக்காக பதக்கங்களை வென்று வந்தனர். நவீன ஒலிம்பிக்கின் ஆரம்ப ஆண்டுகளில் (1912-1948), கலைப் போட்டிகள் ஒலிம்பிக் நிகழ்வின் ஒரு பகுதியாக அமைந்தன. அவை கட்டிடக்கலை, இலக்கியம், இசை, ஓவியம் மற்றும் சிற்பம் என ஐந்து வகைகளாகப் பிரிக்கப்பட்டன. கலைப் போட்டிகள் இப்போது இல்லை, ஆனால் கலாச்சார ஒலிம்பியாட் மூலம் கலையுடன் தொடர்ந்து இணைந்திருக்க IOA உறுதிபூண்டுள்ளது.
- ஒலிம்பிக்கில் பெண்கள்
1900 ஆம் ஆண்டு பாரிஸில் நடந்த ஒலிம்பிக்கில் பெண்கள் முதல் முறையாக ஒலிம்பிக்கில் போட்டியிட்டனர். 997 தடகள வீரர்களில் 22 பேர் பெண்கள் இருந்தனர். 2012 இல் லண்டன் விளையாட்டுப் போட்டியில் பெண்கள் முதல் முறையாக அனைத்து விளையாட்டுகளிலும் கலந்து கொண்டனர். அந்த ஆண்டில் தான், பங்கேற்ற அனைத்து நாடுகளும் முதல் முறையாக பெண் விளையாட்டு வீரர்களை அனுப்பியது என்பதும் குறிப்படத்தக்கது.
- ரத்து செய்யப்பட்ட ஒலிம்பிக் விளையாட்டுகள்
இதுவரை மூன்று ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன - 1916 (முதல் உலகப் போர்), 1940 மற்றும் 1944 (இரண்டாம் உலகப் போர்) ஆகும். இரண்டு பேரும் போர்களுக்கு பிறகு, உலகமே எதிர்கொண்ட தொற்றுநோய் உடனான போரின்போதுதான் ஒலிம்பிக் தடைபட்டது. 2020 இல் டோக்கியோவில் நடக்க இருந்த அந்த ஒலிம்பிக் அப்போது நடக்காவிட்டாலும், ஒத்திவைக்கப்பட்டு 2021 இல் நடைபெற்றது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)