Dhoni Record: 11 வருட ஐபிஎல் ரெக்கார்டை உடைத்த தோனி.. என்ன சாதனை தெரியுமா.?
சாதனை என்று வந்துவிட்டால், எல்லா சாதனைகளையும் தானே உடைக்க வேண்டும். அப்படி, 11 வருடங்களாக இருந்துவந்த ஒரு சாதனையை முறியடித்துள்ளார் சிஎஸ்கே கேப்டன் தோனி. அது என்ன சாதனை தெரியுமா.?

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி மீண்டும் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் வெற்றியை சுவைத்துள்ளது சிஎஸ்கே. அதுவும், தோனியின் பழைய ஸ்டைல் பங்களிப்புடன் வெற்றியை ருசித்தது. இந்த பேட்டியின் மூலம், 11 வருடங்களாக இருந்துவந்த ஒரு சாதனையை தோனி முறியடித்துள்ளார்.
தோனி தலைமையில் முதல் வெற்றியை பதிவு செய்த சிஎஸ்கே
ஐபிஎல் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் நிலையில், நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது. கேப்டன் தோனி தலைமையில் முதல் வெற்றியை பதிவு செய்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த லக்னோ அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 166 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 63 ரன்களும், மிட்செல் மார்ஷ் 30 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா, பதிரனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதைத் தோடர்ந்து, 167 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், பவர் ப்ளேவில் அதிரடி காட்டினர். அறிமுக வீரரான ஷேக் ரஷீத் 19 பந்துகளில் 27 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். நேற்றைய சிறப்பான தொடக்கத்திற்கு ரச்சின் ரவீந்திராவும் கைகொடுத்தார். அவர் 22 பந்துகளில் 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து வந்த 3 வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். சிறப்பான தொடக்கம் கிடைத்தும் சிஎஸ்கே இப்படி சொதப்புகிறதே என ரசிகர்கள் நினைத்திருந்த நேரத்தில், ஒருபுறம் ஷிவம் தூபே சிறப்பாக ஆடிவந்த நிலையில், அவருடன் ஜோடி சேர்ந்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி.
பிறகு என்ன.. அவருடைய பழைய ஸ்டைலிலேயே ஆட்டத்தை முடித்துக் கொடுத்தார். இறுதியில், 19.3 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது. ஷிவம் தூபே 37 பந்துகளில் 43 ரன்களுடனும், தோனி 11 பந்துகளில் 26 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இதன் மூலம், சிஎஸ்கே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது.
11 வருட ரெக்கார்டை உடைத்த சிஎஸ்கே கேப்டன் தோனி
இந்த பேட்டியில், 11 பந்துகளில் 4 பவுண்டரிகள் 1 சிக்ஸருடன் அணியின் வெற்றிக்கு வழிவகுத்த சிஎஸ்கே கேப்டன் தோனி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில், அதிக வயதில் ஆட்ட நாயகன் விருது வென்ற வீரராக சாதனை படைத்தார் தோனி. அவருக்கு வயது தற்போது 43 ஆண்டுகள் 280 நாட்கள் ஆகிறது.
இதற்கு முன்னர், 2014-ம் ஆண்டு அகமதாபாத்தில், கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில், ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய பிரவீன் தாம்பே ஆட்ட நாயகன் விருது வென்றார். அப்போது அவருக்கு வயது, 42 ஆண்டுகள் 208 நாட்கள் ஆகும்.
தோனி கேப்டனாக வெல்லும் 16-வது ஆட்ட நாயகன் விருது இதுவாகும். கிட்டத்தட்ட 6 ஆண்டுகளுக்குப் பின் அவர் ஆட்ட நாயகன் விருதை வெல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன், 2019-ம் ஆண்டு டெல்லி அணிக்கு எதிராக சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில், அவர் ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். ஐபிஎல்லில் ஒரு கேப்டனாக அதிக ஆட்ட நாயகன் விருதுகளை வென்றதற்கான சாதனையும் தற்போது தோனியின் வசமே உள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

