தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர், குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் கோயில்களின் குடமுழுக்கு விழா..! பரவசத்தில் பக்தர்கள்...!!
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைபெற்ற சிவன் மற்றும் பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் மற்றும் குத்தாலம் ஆதிகேசவ பெருமாள் கோயில்களில் வெகுவிமரிசையாக நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
தேரழுந்தூர் வேதபுரீஸ்வரர் கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூர் கிராமத்தில் அமைந்துள்ள பழமையும் பிரசித்திபெற்றதுமான இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சௌந்தரநாயகி சமேத வேதபுரீஸ்வரர் திருக்கோயில். அகத்திய மாமுனிவருக்கு பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி செய்த சிறப்புக்குரிய இத்தலத்தில், சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக முன்னோர்களுக்கு 16-ஆம் நாள் காரியம் செய்யத் தவறியவர்கள் சாந்தி ஹோமம் செய்து இக்கோயிலில் உள்ள சிவனையும் அம்பாளையும் தரிசித்து 16 முறை சுற்றிவர 21 தலைமுறை தோஷ நிவர்த்தி ஆகும் என்பது ஐதீகம்.

திருப்பணி
இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலில் குடமுழுக்கு செய்ய அக்கிராம மக்கள் முடிவெடுத்து இந்து சமய அறநிலையத் துறையினருடன் இணைந்து அதற்கான பூர்வாங்க பணிகளை மேற்கொண்டனர். அதனைத் அடுத்து கோயில் கட்டடங்கள் புதுப்பித்தல், புதிய கட்டங்கள் மற்றும் சிலை வடித்தல், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட கோயிலின் திருப்பணிகளை செய்யப்பட்டு, குடமுழுக்கான பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது. அதனை தொடர்ந்து கோயில் கும்பாபிஷேகத்திற்கான நாள் குறிக்கப்பட்டது.
யாகசாலை பூஜைகள்
தொடர்ந்து கும்பாபிஷேக தினமான இன்று கோயில் கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த புதன்கிழமை தொடங்கி நான்கு கால யாகசாலை பூஜை நடைபெற்றது. கும்பாபிஷேக தினமான இன்று காலை 4 -ஆம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து, மகா பூர்ண குதி மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் அடங்கிய கடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து, மேளதாள மங்கள வாத்தியங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து விமான கும்பத்தை அடைந்தனர்.

புனிதநீர் ஊற்றல்
தொடர்ந்து வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்தில் புனித நீர் வார்த்து மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மற்றும் இன்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக நிகழ்வை கண்டு தரிசனம் செய்தனர்.
திருத்துருத்தி செங்கமல தாயார் உடனாசிய ஆதிகேசவ பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம்.
இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் திருத்துருத்தி (எ) குத்தாலத்தில் மிக பழமையான பிரசித்தி பெற்ற செங்கமல தாயார் உடனாகிய ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் மகா கும்பாபிசேகத்தை முன்னிட்டு, புனித நீர் கடங்களை யாகசாலையில் வைத்து, பட்டாச்சாரியார்கள் யாக குண்டம் அமைத்து, வேத மந்திரங்கள் ஓதி நான்கு கால பூஜைகள் நடைபெற்றது. நான்காம் கால பூஜை முடிவில் பூர்ணா குதி செய்து மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.

கோயில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்
அதனைத் தொடர்ந்து யாகசாலை வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கடங்களை பட்டாச்சாரியார் தலையில் சுமந்து வேத மந்திரங்கள் முழங்க, மேல தாளங்கள் மல்லாரி வாசிக்க கடம்புறப்பாடு நடைபெற்று. புனிதநீர் அடங்கிய கடங்களை தலைமையில் சுமந்து கோயில் சுற்றி வலம் வந்து, கோயில் கோபுர கலசங்களை பட்டாச்சாரியார்கள்அடைந்தனர். அங்கு பட்டாச்சாரியார் நான்கு வேதங்களை ஓதி, கடங்களில் உள்ள புனித நீரை கோபுர கலசங்களில் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இந்த கும்பாபிஷேக நிகழ்வை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒருசேர கோவிந்தா கோவிந்தா முகங்க கும்பாபிஷேகத்தை கண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.






















