கடலூரில் குவிந்த பக்தர்கள்! 2000 வருட பழமையான பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்: பிரமிக்க வைத்த நிகழ்வு!
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேக திருவிழா கோலாகலம்.

கடலூர் திருப்பாதிரிபுலியூர் பாடலீஸ்வரர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேக திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் கும்பாபிஷேகத்தை காண ஏராளமான சிவனடியார்கள், பக்தர்கள் கடலூரில் குவிந்தனர்.
பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அப்பர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் விளங்கும் கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பெரியநாயகி உடனுறை பாடலீஸ்வர் கோவில் குடமுழுக்கு நன்னீராற்று பெருவிழா கடந்த 18ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது.
கடந்த 6 நாட்களாக நவக்கிரக ஹோமம், நட்சத்திர ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோ பூஜை, தன பூஜை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் யாகசாலை பூஜைகள் துவங்கியது. யாகசாலை பூஜைக்காக 55 குண்டங்கள், 23 கலச மேடைகள் அமைக்கப்பட்டு, 101 சிவாச்சாரியார்கள், 37 ஓதுவார் மூர்த்திகள், 21 வேத விற்பன்னர்கள் பூஜைகளை நடத்தினர்.
இந்நிலையில், இன்று நன்னீராற்று பெருவிழா விமர்சையாக நடைபெற்றது. வேத மந்திரங்கள் முழங்க கலசங்களில் புனித நீர் தெளிக்கப்பட்டது. பாடலீஸ்வர் மற்றும் பெரியநாயகி அம்மனின் கும்பாபிஷேக விழாவை காண கடலூர், புதுச்சேரி சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூலவருக்கும் அம்மனுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கடலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.























