Chitra Pournami 2026 Date: பக்தர்களே! சித்ரா பெளர்ணமி எப்போது? எப்படி சாமி கும்பிட வேண்டும்?
Chitra Pournami 2026 Date and Time: புகழ்பெற்ற சித்ரா பெளர்ணமி எப்போது கொண்டாடப்படுகிறது? அந்த நாளில் எப்படி பூஜை செய்ய வேண்டும்? என்று கீழே விரிவாக காணலாம்.

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஆன்மீகத்தில் சிறப்பு வாய்ந்த மாதமாகவே உள்ளது. தமிழ் புத்தாண்டு மாதமான சித்திரை மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக உள்ளது.இந்த மாதத்தில் மிகவும் முக்கியமான நாளாக திகழ்வது சித்ரா பெளர்ணமி ஆகும். சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமியே சித்ரா பெளர்ணமி என்று கொண்டாடப்படுகிறது.
சித்ரா பெளர்ணமி எப்போது?
நடப்பாண்டிற்கான சித்ரா பெளர்ணமி வரும் மே 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்தாண்டிற்கான சித்ரா பெளர்ணமி வெள்ளிக்கிழமையில் வருவதால் இது மேலும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சித்ரா பெளர்ணமி ஏன் கொண்டாடப்படுகிறது?
இந்து புராணங்களின்படி எமதர்மராஜனின் கணக்காளர் சித்திரகுப்தன். ஒவ்வொரு மனிதனின் பிறப்பு, இறப்பு, பாவ புண்ணியங்களை எழுதுபவர் இந்த சித்திரகுப்தர். சித்திரை மாத பெளர்ணமியிலே அவர் அவதரித்ததால் இந்த சித்ரா பெளர்ணமி மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இந்த சித்திர குப்தன் பார்வதி தேவியால் பூமியில் ஓவியமாக வரையப்பெற்று பின்னர் அவர் உயிர் பெற்றதாகவும் புராணங்களில் கூறப்படுகிறது.
மனிதர்களின் பாவ, புண்ணிய கணக்குகளை எழுதும் சித்திர குப்தனை இந்த நாளில் வழிபடுவதன் மூலமாக மனிதர்கள் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கோருவதாகவும் இது கருதப்படுகிறது. மேலும், சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமி நன்னாள் பூமிக்கு மிகவும் அருகில் நிலவு வரும் நாள் என்பதால் இந்த நாளில் நிலவின் பிரகாசம் மற்ற பெளர்ணமி நாட்களைக் காட்டிலும் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. இந்த நன்னாளில்தான் உலகப்புகழ்பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபோகமும் அரங்கேறுகிறது.
எப்படி வழிபட வேண்டும்?
காலையிலே எழுந்து குளித்து சுத்தமாக வேண்டும். வீடுகளில் உள்ள சாமி படங்களின் முன்போ, அல்லது கோயிலுக்கோ சென்று தீபம் ஏற்றி மனதார வழிபட வேண்டும். சித்ரா பெளர்ணமி நன்னாளில் சிவாலயத்திற்கு செல்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
மேலும், விரதம் இருந்து வழிபடுவதும் மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். பக்தர்கள் தங்கள் உடல்நலத்திற்கு ஏற்ப விரதம் இருந்து வழிபடலாம். இந்த நாளில் சித்திர குப்தன் மட்டுமின்றி இந்திரனையும் வழிபடுவது சிறப்பாகும். இதனால், செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை ஆகும்.
கிரிவலம்:
பெளர்ணமி நன்னாளில் பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம் ஆகும். சித்திரை பெளர்ணமி நன்னாளில் பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல குவிவது வழக்கம். வழக்கமாகவே லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த நன்னாளில் கிரிவலம் செல்வார்கள். கடந்த இரு வருடங்களாக ஆந்திரா, தெலங்கானா பக்தர்கள் வருகையால் இந்தாண்டு சித்திரை பெளர்ணமி நன்னாளில் கிரிவலத்திற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் கருதப்படுகிறது.
இளையனார் வேலூர் திருக்கோயில் சித்திரை பிரம்மோற்சவம்: திருத்தேரில் பவனி வந்த சண்முகன்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்





















