Trump Iran War: ”48 மணி நேரம் போரை ஸ்டாப் பண்ணிக்கலாம்” - அமெரிக்கா கோரிக்கை, ”நோ” சொன்ன ஈரான், ஏன்?
Trump Iran War: அமெரிக்கா முன்மொழிந்த 48 மணி நேர போர் நிறுத்த பரிந்துரையை, ஈரான் நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Trump Iran War: அமெரிக்காவின் போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர் தாக்கப்பட்ட சூழலில், போர் நிறுத்தம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
போர் நிறுத்தத்தை நிராகரித்த ஈரான்
அமெரிக்காவின் F-15 மற்றும் A-10 ஆகிய இரண்டு போர் விமானங்களை நேற்று அடுத்தடுத்து வெற்றிகரமாக ஈரான் தாக்கியுள்ளது. முன்னெச்சரிக்கையாக விமானத்தில் இருந்து பாராசூட் உதவியுடன் தப்பித்த இருவரில் ஒருவர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவரை தேடும் பணியில் ஈடுபட்ட இரண்டு ஹெலிகாப்டர்களும் தாக்குதலுக்கி ஆளாகியுள்ளன. இந்நிலையில், அமெரிக்கா முன்வைத்த 48 மணி நேர போர் நிறுத்த முன்மொழிவை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்த பிறகே, தாக்குதல்கள் தீவிரமடைந்ததாக மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், உரிய இழப்பீடுகள் பெறாமல் போரை நிறுத்தப்போவதில்லை என்ற முடிவில் ஈரான் விடாப்படியாக இருப்பதை உணர முடிகிறது. கடந்த புதன்கிழமை அன்று பெயர் வெளியாகாத குறிப்பிட்ட நாட்டின் மூலம், இடைக்கால போர் நிறுத்தத்திற்கான முன்மொழிவை அமெரிக்கா வழங்கியதாம்.
அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்க விமானங்கள்:
அமெரிக்கா - ஈரான் மோதலை முடிவுக்கு கொண்டு வர பாகிஸ்தான் மும்முரம் காட்டிய நிலையில், அவர்கள் முன்னெடுக்கும் பேச்சுவார்த்தைக்கு பிரதிநிதிகளை அனுப்பமாட்டோம் என தெஹ்ரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் தான் 48 மணி நேர போர் நிறுத்தம் தொடர்பான தகவலும் வெளியாகியுள்ளது. முன்னதாக நேற்று மாலை ஹார்மஸ் ஜலசந்தி அருகே, அமெரிக்காவின் A-10 தன்டர்போல்ட் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இந்த நிகழ்வுக்கு முன்னதாக அமெரிக்க ராணுவத்தின் F-15 ரக போர் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக உறுதிசெய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனை மீட்க சென்ற UH-60 ப்ளாக் ஹாவ்க் ரக ஹெலிகாப்டரும் தாக்கப்பட்டதாக ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட விமானி
ஒரே ஒரு நபர் மட்டுமே பயணிக்கக் கூடிய A-10 தன்டர்போல்ட் விமானம் தாக்கப்பட்டதுமே அதிலிருந்து விமானி பாராசூட் மூலம் உடனடியாக வெளியேறினர். அவர் பத்திரமாக மீட்கப்பட்டு அமெரிக்கா கட்டுப்பாட்டு தளத்தில் மருத்துவ சிகிச்சையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த A-10 தன்டர்போல்ட் விமானம் தாக்குதலுக்கு உள்ளானதும் குவைத் பகுதியில் விழுந்து நொறுங்கியதாக கூறப்படுகிறது.
தேடப்பட்டு வரும் விமானி
F-15 ரக விமானம் எங்கே விழுந்துள்ளது என்பது தொடர்பான விவரங்கள் இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில், தெஹ்ரானுக்குத் தெற்கே சுமார் 470 கி.மீ தொலைவில் உள்ள குசெஸ்தான் மாகாணத்தில், கரூன் ஆற்றின் மீதான ஒரு பாலத்தில் விழுந்து இருக்கலாமென கூறப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான மோதல் தொடங்கிய பிறகு, தெஹ்ரானின் வான்பரப்பில் ஒரு அமெரிக்க விமானம் சுட்டு வீழ்த்தப்படுவது இதுவே முதல் முறையாகும். அதேநேரம், பாராசூட் மூலம் அந்த விமானத்தில் இருந்து தப்பிய அமெரிக்க வீரரை உயிருடனோ அல்லது சடலாமாக ஒப்படைத்தால் உரிய சன்மானம் வழங்கப்படும் என ஈரான் அரசு அறிவித்துள்ளது. ஆனால், அவரை உயிருடன் பிடித்தால் எந்தவிதமான மரியாதைக்குறைவான செயல்களிலும் ஈடுபடக்கூடாது எனவும் பொதுமக்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். அவரை விரைந்து கண்டுபிடிக்க அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய ஈரான் ராணுவங்கள் தீவிரம் காட்டி வருகின்றன.
























