மேலும் அறிய
கடலூரை அடுத்தடுத்து தாக்கும் வெள்ளம் - நேற்று மட்டும் ஒரே நாளில் 17 செ.மீ மழை
’’கடலூரில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் கடலூரில் 17.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது’’

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள்
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதில் கடந்த 3 நாட்களாக மாவட்டம் முழுவதும் அடைமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைவெள்ளம் சூழ்ந்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் குமரிகடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடல் பகுதியில் நிலவும் வளி மண்டல சுழற்சி காரணமாக கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடலூரில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை இடைவிடாமல் 4-வது நாளாக அடைமழை கொட்டித்தீர்த்தது. அதன்பிறகு மதியம் 1 மணி வரை மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் மழை ஓய்ந்து லேசாக வெயில் தலைகாட்ட தொடங்கியது. கடலூரில் நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல் நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மட்டும் கடலூரில் 17.3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

இதனால் கடலூரில் திரும்பிய பக்கமெல்லாம் சாலைகளில் மழைநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இதில் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலை, பாரதி சாலை, ஜட்ஜ் பங்களா ரோடு, வண்ணாரபாளையம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மழை நீரில் தத்தளித்தபடி சென்றனர். இதேபோல் இடைவிடாது கொட்டிய மழையால் நகரில் மஞ்சக்குப்பம் பத்மாவதி நகர், மணலி எஸ்டேட், ராகவேந்திரா நகர், மரியசூசைநகர், சூரியா நகர், வெளிசெம்மண்டலம், வேல்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் கடலூர் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. குடியிருப்பு பகுதிகளில் நிறுத்தி வைத்திருந்த கார், லாரி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவை வெள்ளத்தில் மிதக்கின்றன. மேலும் நேற்று பகலில் கனமழை பெய்யாததால், வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை வெளியேற்றும் பணியில் பொதுமக்கள் ஈடுபட்டனர். இதேபோல் கடலூர் முதுநகர் பகுதியிலும் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்தது. மேலும் பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.இதுபற்றி அறிந்த கடலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் தலைமையிலான வீரர்கள், வீடுகளில் சிக்கிய 20-க்கும் மேற்பட்டவர்களை படகு மூலம் மீட்டு, அருகில் உள்ள முகாம்களில் தங்க வைத்தனர். இதுவரை கடலூர் மாவட்டத்தில் 22 முகாம்களில் 3 ஆயிரம் பேர் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கனமழையால் கடலூர், பண்ருட்டி,காட்டுமன்னார்கோவில் பகுதியில் உள்ள 7 கூரை வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. அந்த வீடுகளில் வசித்தவர்கள் ஏற்கனவே முகாம்களில் தங்க வைக்கப்பட்டதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பின்னர் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கடலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளிள் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மேலும் கடலூர் மாவட்டத்தில் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கைகள் குறித்து உயர் அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்கபட்டு உள்ளது கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















