(Source: Poll of Polls)
நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி துவக்கம்! விவசாயிகளின் கனவு நனவாகுமா? ஆட்சியரின் அதிரடி திட்டம்!
நந்தன் கால்வாய் மூலம் விழுப்புரம் வட்டத்தில் 3 ஏரிகள் மூலம் 792 12 ஏக்கர் என மொத்தம் 36 ஏரிகள் மூலம் 6597.64 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், நந்தன் கால்வாய் தூர்வாரும் பணியினை துவக்கி வைத்தார்.
நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி துவக்கம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், சோ.குப்பம் பகுதியில், நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், நந்தன் கால்வாய் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் இன்று துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சியர் தெரிவிக்கையில்,
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்தபொழுது, மாவட்டத்திற்கு 10 அறிவிப்புகளை வெளியிட்டார்கள். இதில் ஒன்றாக நந்தன் கால்வாய் மூலம் சாத்தனூர் அணையிலிருந்து உபரி நீரை கொண்டு வருவதற்கான திட்டத்தினை அறிவித்தார்கள். இத்திட்டமானது ரூ.350 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தினைச் செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
நந்தன் கால்வாய் திருவண்ணாமலை மாவட்டம் துறிஞ்சலாற்றின் குறுக்கே உள்ள கிரனூர் அணைக்கட்டில் இடதுபுறம் உள்ள தலைப்பு மதகிலிருந்து ஆரம்பமாகிறது. நந்தன் கால்வாய் திருவண்ணாமலை மாவட்டத்தில் தொலைக்கல் 0 கி.மீ முதல் 12.400 கி.மீ வரையிலும், விழுப்புரம் மாவட்டத்தில் தொலைக்கல் 12.400 கி.மீ 37.880 கி.மீ வரையிலும் அமைந்துள்ளது. இத்தொலைகல்லிற்கு பிறகு விக்கிரவாண்டி மற்றும் விழுப்புரம் வட்டங்களில் சங்கிலி தொடர் ஏரி (Chain of Tanks) மூலம் ஏரிகளுக்கு நீர் வழங்கப்படுகிறது.
6597.64 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி
நந்தன் கால்வாய் மூலம், திருவண்ணாமலை மாவட்டத்தில், கீழ்பென்னாத்தூர் வட்டத்தில், 14 ஏரிகள் மூலம் 1566.20 ஏக்கரும், விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி வட்டத்தில், 10 ஏரிகள் மூலம் 1650.20 ஏக்கரும், விக்கிரவாண்டி வட்டத்தில், 9 ஏரிகள் மூலம், 2589.12 ஏக்கரும், விழுப்புரம் வட்டத்தில் 3 ஏரிகள் மூலம் 792 12 ஏக்கர் என மொத்தம் 36 ஏரிகள் மூலம் 6597.64 ஏக்கர் பரப்பளவில் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
கடந்த வருடம் ஏற்பட்ட பெஞ்சல் புயல் தாக்கத்தினால் நந்தன் கால்வாய் கரையோரப்பகுதிகள் சேதமடைந்தது. இதனை சீர் செய்திட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதனால் நிரந்தரமாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் விதமாக ரூ.75.00 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்றைய தினம், எதிர்வரும் வடகிழுக்கு பருவமழையினை எதிர்கொள்ளும் விதமாக நந்தன் கால்வாய் பாதுகாப்பு இயக்கம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், நந்தன் கால்வாய் தூர்வாரும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தன்னார்வ நிறுவனங்கள் மூலம் ரூ.19 இலட்சம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து ரூ.1 இலட்சம் என மொத்தம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
இப்பணியில் எக்ஸ்னோரா இன்டர்நேஷனல், என்டிஎஸ்ஓ, நம்மால் முடியும், எம்.என் காயத்ரி சார்டிஸ் ஆகிய தன்னார்வ நிறுவனத்துடன் மாவட்ட நிர்வாகம் இணைந்து தூர்வாரும் பணிகளை மேற்கொள்கிறது. இதன் மூலம், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 22 ஏரிகள் மூலம், விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு, இப்பகுதியினைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் நிலை உருவாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, செஞ்சியில், என்.ஆர்.பேட்டை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில், நீண்ட காலமாக குடியிருந்து வரும் நபர்களின் குடியிருப்பு வீடுகளை வரன்முறைப்படுத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.





















