Thirumavalavan : திமுகவிற்கு டாடா காட்டும் திருமா.? கூட்டணி ஆட்சியை நோக்கி நகரும் விசிக- வெளியான முக்கிய அறிக்கை
தனிப் பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

தனிப்பெரும் கட்சியாக தவெக
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவடைந்து பல்வேறு திருப்பங்களை அரசியல் களத்தில் ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியான திமுக ஆட்சியை இழந்துள்ளதோடு முதலமைச்சர் ஸ்டாலினும் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் 108 தொகுதிகள் வென்று நடிகர் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அடுத்த இடத்தில் திமுக கூட்டணி 73 இடங்களிலும், அதிமுக கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. எனவே தவெக ஆட்சி அமைக்க 10 தொகுதிகள் தேவை என்ற நிலை உள்ளது. எனவே திமுக கூட்டணியில் வெற்றி பெற்ற காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை
இந்த பரபரப்பான சூழ்நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டப் பேரவை பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான பாஜகவின் சதி அரசியலை முறியடித்தோம் என்கிற மகிழ்வோடு தமிழக மக்கள் அளித்துள்ள தீர்ப்பை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மனப்பூர்வமாக வரவேற்கிறது. ஆட்சி அமைப்பதற்குத் தேவையான தனிப் பெரும்பான்மை யாருக்கும் கிட்டாதவகையில் மக்கள் அளித்துள்ள இத்தீர்ப்பு மிகவும் நுட்பமான அரசியலை நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் 'கூட்டணி ஆட்சி'யையே மக்கள் விரும்புகின்றனர் என்பதே ஆகும். 2016 ஆம் ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவும் அழுத்தமாக முன்மொழிந்ததை, பத்தாண்டுகளுக்குப் பின்னர் தற்போது வெகுமக்கள் வழிமொழிந்துள்ளனர் என்றே நம்புகிறோம்.
தொங்கு சட்டசபை உருவாகியுள்ளது
ஏற்கனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கணித்தபடியே தற்போது சட்டசபையில் 'தொங்குநிலை' உருவாகியுள்ளது. 'கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை' என்கிற வகையில், தவெக'வுக்குத் தனிப் பெரும்பான்மையை வழங்காமல், அது தனித்து ஆட்சி அமைக்கமுடியாத நெருக்கடியை உருவாக்கியுள்ளது. அத்துடன், அதிமுக -பாஜக கூட்டணிக்குப் பாடம்புகட்டியுள்ள அதே வேளையில், மதசார்பற்ற சக்திகளான எமது கூட்டணிக்கும் ஆட்சியமைக்கும் வாய்ப்பை அளிக்கவில்லை. இது எமக்கு அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தாலும், அதிமுக தலைமையிலான சாதிய- மதவாத சங் பரிவார் கூட்டணியை மக்கள் வெகுவாகப் புறக்கணித்துள்ளனர் என்பது திமுக கூட்டணிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி என்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
மதவழி சிறுபான்மையினருக்கும் இன்னபிற விளிம்புநிலை மக்களுக்கும் எதிரான சங் பரிவார் அரசியலைத் தமிழ் மண்ணில் வேரூன்றவிடக் கூடாது என்பதே எமது கூட்டணியின் முதன்மையான நோக்கமாக இருந்தது. அதனையே முழுமூச்சாக முன்னிறுத்தி மிகத் தீவிரமாகப் பரப்புரை மேற்கொண்டோம். அதனை ஏற்று பொதுமக்கள் அதிமுக -பாஜக கூட்டணியை வீழ்த்தி அவர்களின் சதி அரசியலை முறியடித்துள்ளனர். குறிப்பாக, 27 இடங்களில் போட்டியிட்ட பாஜகவை 26 இடங்களில் வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அதேபோல 'தாமரை' சின்னத்தில் போட்டியிட்ட மற்ற கட்சியினர் அனைவருமே தோற்கடிக்கப்பட்டுள்ளனர்.
பாஜகவிற்கு மக்கள்ஆதரவு இல்லை
அத்துடன், கடந்த 2021 சட்டப் பேரவை தேர்தலில் 66 இடங்களில் வென்ற அதிமுக தற்போது 20 இடங்களை இழந்து நிற்கிறது. 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இது அதிமுக பாஜகவுடன் கை கோர்த்து நின்றதற்காக மக்கள் அளித்துள்ள படிப்பினை ஆகும். அதிமுக தலைமையிலான பாஜக அணியின் இந்த வீழ்ச்சி, எமது முயற்சியால் விளைந்தததேயாகும்.
இத்தேர்தலில் எமது இலக்கு தமிழ் மண்ணில் மதசார்பின்மையைப் பாதுகாப்பதே ஆகும். ஆகவே, தவெக'வை எமது எதிர்ப்பின் முதன்மை இலக்காக யாம் முன்னிறுத்தவில்லை. மாறாக, பாஜக,அதிமுக ஆகியவற்றை அம்பலப்படுத்துவதிலேயே தீவிரம் காட்டினோம். அதன்மூலம், அதிமுக -பாஜக எதிர்ப்பு வாக்குகள் திமுக கூட்டணிக்கு மட்டுமின்றி தவெகவுக்கும் இயல்பாய் பிரிந்துபோனதை அறியமுடிகிறது. அதாவது, திமுக அணிக்கும் தவெகவுக்கும் மக்கள் அளித்துள்ள வாக்குகள் மற்றும் வெற்றி பெற்ற இடங்களின் எண்ணிக்கை யாவும் அதிமுக தலைமையிலான சங் பரிவார் அரசியலுக்கு எதிரானவை என்பதை இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துகிறது. அதாவது, தமிழ்நாட்டில் பாஜகவுக்கும் அதன் வலதுசாரி அரசியலுக்குத் துணைபோகும் கும்பலுக்கும் இடமில்லை என்பதை மிகவும் வலுவாக மீள்உறுதி செய்துள்ளது.
சங் பரிவார்கள் வாலாட்ட இயலாது
எனவே, திமுக தலைமையிலான எமது கூட்டணி முன்னெடுத்த மதச்சார்பின்மையைப் பாதுகாப்பதற்கான அறப்போரில் யாம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளோம். பாஜகவின் வெறுப்பு அரசியல் வீழ்த்தப்பட்டுள்ளது. வலதுசாரி அரசியலின் முதுகெலும்பு முறிக்கப்பட்டுள்ளது. இனி எக்காலத்திலும் இம்மண்ணில் சங் பரிவார்கள் வாலாட்ட இயலாது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சாதியவாத, மதவாத, இனவாத கும்பலின் பிற்போக்குத்தனமான திரிபுவாத அரசியலுக்கு இங்கே இடமில்லை என்பதுவும் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















