தமிழ்நாட்டில் புதியதாக 4 கல்லூரிகள் - மொத்தம் 180, எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - அரசு அறிவிப்பு
TN Govt New Arts College: தமிழ்நாட்டில் புதியதாக 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

TN Govt New Arts College: தமிழ்நாட்டில் அண்மையில் தான் 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
4 புதிய கலை & அறிவியல் கல்லூரிகள்:
கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் தமிழ்நாட்டில் மேலும் 4 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நடப்பு 2025-26 கல்வியாண்டிலேயே இந்த கல்லூரிகள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் கூறப்படுகிறது. அதன்படி, வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம், திருச்சி மாவட்டம் துறையூரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளன. மேலும், கள்ள்க்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியிலும் புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அமைக்கப்பட உள்ளன. புதிய அரசு கல்லூரிகள் மூலம் ஒரு கல்வியாண்டில் ஆயிரத்து 120 பேர் உயர்கல்வி பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திறக்கப்பட்ட 11 கல்லூரிகள்:
பள்ளிப்படிப்பை முடித்தபிறகு உயர்கல்வியை தொடரும் மாணவர்களின் எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழ்நாடு முன்னோடியாக உள்ளது. இதனை மேலும் மேம்படுத்த தொடர்ந்து உட்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறது. நீண்ட பயணம் மற்றும் அணுகலில் உள்ள சிரமங்கள் காரணமாக சிலர் உயர்கல்வியை தொடர முடியாமல் கைவிடுகின்றனர். அதனை தவிர்க்கு நோக்கில் அண்மையில் கூட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் 11 புதிய அறிவியல் மற்றும் கலைக்கல்லூரிகள் திறக்கப்பட்டன.
- கடலூர் மாவட்டம் பண்ருட்டி
- நீலகிரி மாவட்டம் குன்னூர்
- திண்டுக்கல் மாவட்டம் நத்தம்
- சென்னை மாவட்டம் ஆலந்தூர்
- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி
- செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர்
- சிவகங்கை மாவட்டம் மானாமதுரை
- திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை
- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர்
- பெரம்பலூர் மாவட்டம் கொளக்காநத்தம்
- மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் ஆகிய இடங்களில் 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
200வது அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி:
புதிய கல்லூரிகள் ஒவ்வொன்றும் தலா 5 பாடப்பிரிவுகளுடன் இயங்க உள்ளன. ஒவ்வொரு கல்லூரிக்கும் 12 ஆசிரியர்கள் (உதவிப் பேராசிரியர்கள் பணியிடங்கள் முதலாம் ஆண்டுக்கு மட்டும்) மற்றும் 14 ஆசிரியரல்லாப் பணியிடங்கள் வீதம் 11 கல்லூரிகளுக்கு மொத்தம் 132 ஆசிரியர்கள் மற்றும் 154 ஆசிரியரல்லாப் பணியிடங்களைத் தோற்றுவித்து, 11 கல்லூரிகளுக்கு ஓராண்டுக்கான தொடர் மற்றும் தொடராச் செலவினத்துக்காக மொத்தம் 25 கோடியே 27 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கல்லூரிக்கும் 5 பாடப்பிரிவுகளில் ஓராண்டுக்கு 3050 மாணவர்கள் வீதம் 3 ஆண்டுகளுக்கு 9150 மாணவர்கள் பயன்பெறுவர். புதிய 11 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை சேர்த்து, தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 176 ஆக உயர்ந்தது. இந்நிலையில் புதியதாக தொடங்க உள்ள கல்லூரிகள் மூலம், மாநிலத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 180 ஆக உயர உள்ளது.




















