SETC Spl. Busses: மிலாடிநபி, வார விடுமுறை எதிரொலி; சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என SETC அறிவிப்பு - முழு விவரம்
வெள்ளிக்கிழமை மிலாடிநபி கொண்டாடப்படுவதையும், அதைத் தொடர்ந்து வார விடுமுறைகள் வருவதாலும், பல்வேறு ஊர்களுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என எஸ்இடிசி அறிவித்துள்ளது.

செப்டம்பர் 5-ம் தேதி, அதாவது வெள்ளிக்கிழமை, மிலாடிநபி கொண்டாடப்படும் என தலைமை ஹாஜி அறிவித்துள்ள நிலையில், அதனைத் தொடர்ந்து வார விடுமுறையும் வருவதால், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
SETC-ன் அறிக்கை கூறுவது என்ன.?
இது தொடர்பாக, தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் வெளியிடுள்ள அறிக்கையில், செப்டம்பர் 4-ம் தேதி(வியாழக்கிழமை முகூர்த்தம்), 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை மீலாடி நபி) மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 6-ம் தேதி (சனிக்கிழமை) மற்றும் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில், சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம். ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதி (புதன்கிழமை) அன்று 360 பேருந்துகளும், 4-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று 710 பேருந்துகளும், 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று 405 பேருந்துகளும் மற்றும் 7-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பல்வேறு ஊர்களிலிருந்து சென்னைக்கு 875 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3-ம் தேதி (புதன்கிழமை) அன்று 80 பேருந்துகளும், 4-ம் தேதி (வியாழக்கிழமை) மற்றும் 5-ம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய நாட்களில் 105 பேருந்துகளும், மாதாவரத்திலிருந்து 3-ம் தேதி மற்றும் 4-ம் தேதி ஆகிய நாட்களில் 25 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 350 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக, பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்திலையில், 3-ம் தேதி அன்று 17,832 பயணிகளும், 4-ம் தேதி அன்று 23,032 பயணிகளும் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 10,271 பயணிகளும் சனிக்கிழமை அன்று 7,317 பயணிகளும் ஞாயிறு அன்று 20,740 பயணிகளும், பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள், கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, தங்களது பயணத்திற்கு www.trstein மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





















