Senthil Balaji: ஓட்டு போடுவதை விட இதுதான் முக்கியம்.. செந்தில் பாலாஜி சொன்ன விளக்கம்!
செந்தில் பாலாஜி கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் இம்முறை திமுக சார்பில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் தேர்தல் நாளில் அவர் தன் சொந்த தொகுதியில் வாக்களிக்கவில்லை.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தான் என்ன காரணத்தால் வாக்களிக்க செல்லவில்லை என்பதை முன்னாள் அமைச்சரும், கோவை தெற்கு தொகுதி வேட்பாளருமான செந்தில் பாலாஜி விளக்கியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்
234 தொகுதிகளைக் கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் 23ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. திமுக, அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனை போட்டி நிலவும் நிலையில் தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு 85.10 சதவிகிதம் வாக்கு பதிவானது. இந்த முறை எந்த கட்சி ஆட்சிக்கு வரும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
வாக்களிக்க செல்லாத செந்தில் பாலாஜி
இந்த நிலையில் திமுக சார்பில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் அம்மன் அர்ஜூனன் போட்டியிடுகிறார். செந்தில் பாலாஜி கடந்த முறை கரூர் தொகுதியில் போட்டியிட்ட நிலையில் இம்முறை தொகுதி மாறியது பெரும் பேசுபொருளானது. அதேபோல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதியிலும் திமுக 2021ம் ஆண்டு தேர்தலில் தோற்றது. அதனால் இம்முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் தேர்தல் பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நியமித்திருந்தார்.
ஆனால் செந்தில் பாலாஜி வாக்குப்பதிவு நாளில் தனது சொந்த ஊரான கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் புதுப்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்த மாலையில் வருவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கடைசி வரை அவர் வரவில்லை.
இதனிடையே கோவை மாவட்டத்தில் இன்று செய்தியாளர் சந்திப்பில் தான் ஏன் வாக்களிக்க வரவில்லை என்பதை செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.
அதில், “நான் தேர்தல் நாளில் வாக்களிக்க வேண்டும் என நினைத்தேன். கோவை மாவட்டத்தில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்று வாக்களிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என முடிவு செய்திருந்தேன். ஆனால் கோவை மாவட்டத்தில் நாங்கள் ஒவ்வொரு வாக்குச்சாவடியாக சென்று ஆய்வு செய்திருந்தோம். அப்போது சில வாக்குச்சாவடிகளில் அதிமுகவினர் வாக்களிக்கும் அறைக்குள் நின்று கொண்டிருந்தனர். பூத் ஏஜென்ட்டாக இல்லாதவர்களும் அங்கு இருந்தார்கள். அதை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஏஜென்ட்கள் சுட்டிக் காட்டியிருந்தனர்.
அவர்களை வெளியேற்ற முயற்சி செய்தாலும் அதிமுகவினர் பிரச்னையை உருவாக்கி சட்டம் ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்த முயன்றார்கள். தேர்தலை நிறுத்தக்கூடிய சூழலுக்கு போனார்கள். கடைசி 2,3 மணி நேரத்தில் நடைபெற்ற செயல்களால் நான் கோவை மாவட்டத்தில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அவசியம் ஏற்பட்டதால் வாக்களிக்க செல்ல முடியவில்லை. கடைசிக்கட்டத்தில் பரபரப்பான சூழல் உண்டானதால் மக்கள் வாக்களிப்பதை கவனிக்கக்கூடிய பணியை ஆற்ற வேண்டியிருந்தது. வாக்களிப்பது ஜனநாயக கடமை என்றாலும் நான் போட்டியிடும் தொகுதியில் சுமூகமாக நடைபெற வேண்டிய கடமை உள்ளது. அதனால் செல்லவில்லை” என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்





















