விஜய்யை நேரில் கேள்வி கேட்க முடியுமா? ”அஜித் ரஜினிக்கு கூட தான் கூட்டம் வரும்!” சீமான் ஆவேசம்
ஜயின் பிரச்சாரத்திற்கு வந்த கூட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திரையில் பார்த்தவர்கள் தற்பொழுது வரும்பொழுது கூட்டம் வரத்தான் செய்யும் என்றார்

இளையராஜாவுக்கு பாரத ரத்னா – சீமான் பாராட்டு
இளையராஜா அப்பாவிற்கு பாரத ரத்னா விருது வழங்குவதில் எங்களுக்கும் பெருமை தான், விளையாட்டுத்துறையில் சச்சின் டெண்டுல்கருக்கு கொடுக்கிறார்கள் அப்படி இருக்கும் பொழுது இசைத்துறையில் இளையராஜாவை விட சாதனையாளர்கள் இதுவரை இல்லை என தெரிவித்தார்.
அதே சமயம் தனிப்பட்ட முறையில் வருத்தம் இருப்பதாக தெரிவித்த அவர், சச்சின் டெண்டுல்கருக்கு கொடுத்த மரியாதையை வ.உ. சிதம்பரனார், பாரதியார் ஆகியோருக்கு தரவில்லை என்றும் சச்சின் டெண்டுல்கரை விட பாரதியாரும் வ.உ. சிதம்பரனாரும் இழிவாகப் போய்விட்டார்களா? என கேள்வி எழுப்பினார்.
இளையராஜா – இசை இறைவன்
மேலும் இளையராஜாவை இசை அமைப்பாளராக பார்ப்பதை விட நாங்கள் அவரை இசை இறைவனாக தான் பார்க்கிறோம் என்றும், அவரது பெயரில் விருது வழங்குவது எனக்கு பெருமை தான் என தெரிவித்தார்.
முதலில் அவருக்கு நான் தான் பாராட்டு விழா எடுப்பதாக இருந்ததாகவும், இது குறித்து அவரிடமும் கேட்டதாகவும் தெரிவித்த சீமான், அரசு அதனை செய்யும் பொழுது இடையூறு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன் என தெரிவித்தார். மேலும் மாநில அரசு பாரதிராஜா போன்ற திரை கலைஞர்களையும் கௌரவப்படுத்தி இருக்க வேண்டும் என்றும் கூறினார்.
விஜய் பிரச்சாரம் – கூட்டம் குறித்து பதில்
திருச்சியில் விஜயின் பிரச்சாரத்திற்கு வந்த கூட்டம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், திரையில் பார்த்தவர்கள் தற்பொழுது வரும்பொழுது கூட்டம் வரத்தான் செய்யும் என்றும் நாங்களும் சிறு வயதில் எம்ஜிஆர் போன்றவர்களை காண்பதற்கு மணிக்கணக்கில் காத்துக் கிடந்தோம், பிறகு அவர் வராமல் நாங்கள் ஏமாந்தும் போனோம் என தெரிவித்தார்.
மேலும் என் சகோதரர் அஜித், ரஜினி, நயன்தாரா ஆகியோர் வந்தாலும் கூடத் தான் கூட்டம் வரும் என தெரிவித்தார். "கூட்டத்தைப் பார்க்காதீர்கள், கொள்கைகளை பாருங்கள்" என்று தெரிவித்தார்.
நாம் தமிழர் கட்சி மட்டுமே மக்களுக்காக
மக்களுக்காக பாடுபடுகின்ற ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி தான் என்றும், அதில் ஏதாவது சந்தேகம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார். மேலும் அடுத்தபடியாக மலைகளுக்காக போராட்டம் நடத்தப் போவதாகவும் கூறினார்.
"நான் பேசுவது போதிப்பது எல்லாம் தற்பொழுது புரியாது, பாதிக்கும்போது தான் புரியும்" என தெரிவித்த அவர், இலங்கை நேபால் ஆகியவற்றில் வந்த இயற்கை சீற்றங்கள் உங்களுக்கு வராது என்பதை உறுதியாக கூற முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார்.
கூட்டணி பற்றி சீமான் பதில்
"என்னை யாருடனும் கூட்டணி வைக்க வேண்டாம் என்று கட்சியின் தொண்டர்களும் பொதுமக்களும் கூறுகிறார்கள்" என்றும் தெரிவித்தார்.
மூன்றாவது உலகப்போரை நிகழ்த்தியவர் பிரபாகரன் என்றும், இனி ஏதேனும் நடந்தால் அது நான்காவது உலகப் போர் தான் என்றும் தெரிவித்தார்.
2026 அரசியல் – சீமான் சவால்
2026 இல் என் கையில்தான் ஆட்டம் இருக்கும் என்றும், இங்க இருக்கக்கூடியவர்கள் மக்களின் இதயத்தில் இருந்து மக்களின் பிரச்சினையை பேச மாட்டார்கள் என தெரிவித்தார்.
"எங்க இருக்க கூடிய அரசியல்வாதிகள் பேப்பரில் எழுதி வைத்து படிக்கிறார்கள்" என ஸ்டாலின், விஜய் ஆகியோரை பெயர் குறிப்பிடாமல் சுட்டிக்காட்டிய அவர், எடப்பாடி பழனிச்சாமியும் பேப்பரில் எழுதி வைத்து தான் படித்து வருவதாக தெரிவித்தார்.
"இவர்கள் பெரிய தாளை வைத்து படிக்கிறார்கள், ஸ்டாலின் சிறிய பேப்பரை வைத்து படிக்கிறார். மழை வந்தால் பேப்பரை வைத்து படிக்க முடியுமா?" என கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
விஜய்யை நேரில் கேள்வி கேட்க முடியுமா?
மேலும் விஜய்யை இவ்வாறு நிக்க வைத்து எத்தனை மணி நேரம் கேள்வி கேட்க முடியுமா என்று கேள்வி எழுப்பிய அவர், "செய்தியாளர் சந்திப்பிற்கு வரவில்லை என்று கூறுகிறார், அப்படி என்றால் நேரடியாக கோட்டைக்கு வருகிறேன் என்று மட்டும் கூறுகிறார்" என தெரிவித்தார்.
விஜய்க்கு கூடிய கூட்டம் ஒட்டாத மாறுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருவது குறித்தான கருத்திற்கு, "விஜய் கூறுவதைப் போலவே I am Waiting" என பதில் அளித்தார்."எதுவாக இருந்தாலும் மே மாதம் தெரிந்து விடும், அதுவரை பொறுத்திருப்போம்" என தெரிவித்தார்.






















