பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு: சுதந்திர தினத்திலும் தொடரும் போராட்டம்! 14வது முறையாக தீர்மானம்!
"பரந்தூர் பசுமைவெளி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம சபை கூட்டத்தில் 14வது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது"

பரந்தூர் பகுதியில் விமான நிலையம் வேண்டாம் என, ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் கிராம மக்கள் ஒரு மனதாக நிறைவேற்றினார்கள்.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார கிராமப்புறங்களை உள்ளடக்கி பரந்தூர் பசுமை வெளி விமான நிலைய திட்டம் அமைய உள்ளது என மத்திய மாநில அரசுகள் அறிவித்த நாட்களில் இருந்தே குடியிருப்புகள், விலை நிலங்கள், நீர் நிலைகள் உள்ளிட்டவை பாதிக்கப்படுவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என ஏகனாபுரம் கிராம மக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
சுதந்திர தினத்திலும் நடைபெறும் போராட்டம்
1100 நாட்களாக விமான நிலையம் வேண்டாம் என பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களை ஏகனாபுரம் கிராம மக்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏகனாபுரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபை கூட்டம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி சரவணன் தலைமையில் நடைபெற்றது.
கிராம சபை கூட்டத்தில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க வேண்டாம் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஏகனாபுரம் கிராமத்தில் 14 ஆவது முறையாக கிராம சபை கூட்டத்தில் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பரந்தூர் விமான நிலையம் - Parandur Greenfield Airport
சென்னைக்கு இரண்டாவது விமான நிலையம், அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில், சென்னையில் புதிய விமான நிலையம் அமைப்பது குறித்து சாத்திய கூறுகள் ஆராயப்பட்டன.
காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிவித்தன. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பரந்தூர் விமான நிலைய திட்ட மதிப்பு என்ன? Parandur Airport Project Value?
பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைப்பதற்கு திட்ட செலவு 29,150 கோடி ரூபாய் என கணிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அரசின் 'டிட்கோ' (தொழில் வளர்ச்சி நிறுவனம்) நிறுவனம் மூலமாக இந்த விமான நிலையம் அமைக்கப்பட உள்ளது.
பரந்தூர் விமான நிலையம் பரந்தூர் மற்றும் சுற்றியுள்ள 13 கிராமங்களில் 5,300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. ஏகனாபுரம், நாகப்பட்டு உள்ளிட்ட கிராமங்கள் மொத்தமாக இந்த திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட உள்ளன. சுமார் 3,700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான பணிகளில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில், கையகப்படுத்த திட்டமிட்டுள்ள நிலங்களுக்கான இழப்பீடு தொகை நிர்ணயம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் ஒரு ஏக்கருக்கு 35 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சமாக 2.57 கோடி ரூபாய் இழப்பீடு தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரம் நாட்களுக்கு மேலாக தொடர்ந்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அவர்களை சமாளிக்கும் வகையில் இழப்பீடு தொகை வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.






















