சேலத்தில் வருமுன் காப்போம் திட்டத்தை தொடக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்
’’10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வருமுன் காப்போம் திட்டம் மீண்டும் தொடக்கம்’’

தமிழகத்தில் வருமுன் காப்போம் திட்டத்தை சேலத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்கி வைத்தார். தமிழகத்தில் சாதாரண மக்களும் நோய் நொடியின்றி வாழ வேண்டும் என்பதற்காக வருமுன் காப்போம் என்கிற திட்டத்தை முதன் முதலில் கடந்த 2006 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதி பூந்தமல்லியில் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் சிறப்பு மருத்துவ முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடத்தப்பட்டது. ஏராளமான பொதுமக்கள் இதன் மூலம் பயன் அடைந்தார்கள்.

இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வருமுன் காப்போம் என்கிற பெயரில் மீண்டும் இந்த திட்டத்தை புதுபொலிவுடன் தொடங்கி உள்ளார். இதற்கான அறிவிப்பை அண்மையில் நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரின் போது சட்டசபையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அப்போது வருடத்திற்கு 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்றும் அவர் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த திட்டத்தை சேலம் மாவட்டம் வாழப்பாடியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள 385 வட்டாரங்களில் 1 வட்டாரத்துக்கு 3 முகாம்கள் வீதம் 1,155 முகாம்களும், 1 மாநகராட்சிக்கு 4 முகாம்கள் வீதம் 20 மாநகராட்சிகளில் 80 முகாம்களும், சென்னை பெருமாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களிலும் 15 முகாம்கள் என மொத்தம் 1,250 முகாம்கள் நடத்தபட உள்ளதாக சுகாராதத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பொது மருத்துவர், அறுவை சிகிச்சை மருத்துவர், குடல் நோய் மருத்துவர், குழந்தை மருத்துவர், மகப்பேறு மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், கண் மருத்துவர், பல் மருத்துவர், இருதய நோய் மருத்துவர், சிறுநீரக மருத்துவர், நரம்பியல் மருத்துவர், சித்த மருத்துவர் என 15 சிறப்பு மருத்துவர்கள் இருப்பார்கள். அவர்கள் பொதுமக்களை முழுமையாக பரிசோதித்து உடலில் என்ன பிரச்சனை இருந்தாலும் கண்டுபிடிக்கப்பட்டு தேவையான சிகிச்சை வழங்கப்படும்.
சர்க்கரை நோய், புற்றுநோய், ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் இந்த முகாமில் கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மக்களை தேடி மருத்துவத்தில் சேர்க்கப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்படும். குறிப்பாக தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மருத்துவ கட்டமைப்பை பலப்படுத்துவது, பொதுமக்கள் அனைவரையும் சுகாதார வளையத்துக்குள் கொண்டு வருவது போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் பொதுமக்கள் மருத்துவமனைகளை தேடி செல்லும் சூழ்நிலையை மாற்றி மக்களை தேடி மருத்துவம் என்கிற திட்டத்தை கொண்டு வந்தார்.
இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் நோய்களில் இருந்து மக்களை காக்க வேண்டும். நோய்கள், மக்களை தாக்காதவாறு தடுக்க வேண்டும் என்கிற நோக்கிலேயே தற்போது கலைஞரின் வருமுன் காப்போம் என்கிற இந்த திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் அமலுக்கு கொண்டு வந்துள்ளார். இதே நிகழ்ச்சியில் 2530 பயனாளிகளுக்கு 24 கோடியே 73 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். மேலும் சேலம் மாவட்டத்தில் 100 சதவிகிதம் தடுப்பூசி போடப்பட்டுள்ள அத்தனூர் பட்டி, முத்தம்பட்டி, மஞ்சகுட்டை, குறிச்சி, தலைவாசல் ஊராட்சிகளின் தலைவர்களை முதலமைச்சர் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.





















