வெட்டி திண்ணை பேச்சா? புளித்து போன டயலாக் ஸ்டாலின்! – பக்கம் பக்கமாய் அறிக்கை விட்ட இபிஎஸ்!
திண்ணையில் உட்கார்ந்துகொண்டு வெட்டிப் பேச்சு பேசுவது போன்று, வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா?

என்னுடைய நேரடியான கேள்விகளை எதிர்கொண்டு பதில் அளிக்கத் திராணியற்று, அரசு விழாவில் பிதற்றியுள்ள விடியா திமுக-வின் பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அவலங்களை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் சுட்டிக் காட்டினால் முதலமைச்சரும், நிதி அமைச்சரும், அவர்களுக்கு ஏவல் புரியும் பல கட்சி தாவிய செந்தில்பாலாஜியும், என்மீது தேவையற்ற வன்மத்தைக் கக்குகிறார்கள்.
சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில், முதலமைச்சர் ஸ்டாலின் பேசும்போது, 'திண்ணையில் உட்கார்ந்துகொண்டு வெட்டிப் பேச்சு பேசுவது போன்று, வாய்க்கு வந்தபடி எதிர்க்கட்சித் தலைவர் பேசலாமா?" என்று பேசியுள்ளார்.
ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு ஊரிலும் திண்ணையில் அமர்ந்து போட்டோ ஷுட் நடத்தியதையும்; மனு கொடுப்பவர் ஆணா, பெண்ணா என்றுகூடப் பார்க்காமல், மனுதாரர் என்ன கூற முயல்கிறார் என்பதைக்கூட கேட்காமல், எழுதிக்கொடுத்த நாடக வசனத்தைப் பேசி மக்களிடையே ஜோக்கராக காட்சியளித்ததையும், பொதுமக்களிடம் புகார் பெட்டியில் மனுக்களைப் போடவைத்து, பிறகு புகார் பெட்டியைப் பூட்டி, திமுக ஆட்சிக்கு வந்ததும், குறைகளுக்கு தீர்வு காணப்படும் என்று கூறிவிட்டு, புகார் கொடுத்தவர்கள் எப்போது தலைமைச் செயலகம் வந்தாலும் முதலமைச்சர் அறையில் தன்னை நேரடியாகப் பார்க்கலாம் என்று நாடகமாடியதை தமிழக மக்கள் இன்னும் மறக்கவில்லை. புகார் பெட்டியில் போடப்பட்ட மனுக்களின் நிலை என்னவென்று இன்றுவரை தெரியவில்லை.
'திமுக தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நான் பேசியதாகவும், அது வெட்டிப் பேச்சு' என்றும் ஸ்டாலின் பேசியுள்ளார்.
திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று நான் பேசினால், அது வெட்டிப் பேச்சாம். நீட் தேர்வு ரத்து, குடும்ப அட்டைக்கு கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டுவரப்படும், தமிழக மாணவர்கள் பெற்ற கல்விக் கடன் ரத்து, 100 நாள் ஊரக வேலை நாட்கள் 150-ஆக அதிகரிக்கப்படும்; எரிவாயு T சிலிண்டர் ரூ. 100 மானியம்; பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, மாதந்தோறும் மின்கட்டண கணக்கீடு; பகுதிநேர ஆசிரியர் பணி நிரந்தரம் அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை, நெல், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை நிர்ணயம் அரசு பொதுத்துறை நிறுவனங்கள் குழு அமைத்து 3 மாதங்களுக்குள் சீரமைக்கப்படும்; மாநில நிர்வாகத் தீர்ப்பாயம் அமைக்கப்படும். முதியோர் உதவித் தொகை 1500 ஆக உயர்த்தப்படும். பாலியல் கொடுமை பாதிக்கப்பட்டோர் விவரம் ரகசியமாக வைக்கப்படும்; தனிப் பிரிவுகள் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும் என்று நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
திமுக-வின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், கர்நாடகாவில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், மகளிர் உரிமைத் தொகையை உடனே வழங்கினார்கள். இதை ஸ்டாலின் உணராதது ஏனோ?
தொடர்ந்து ஸ்டாலின் அரசு விழாவில் பேசும்போது, தமிழ் நாடு திவாலாகியிட்டது என்று புதுப் புரளியைக் கிளப்புகிறேன் என்றும், 2011-ல் திமுக உபரி வருவாயை விட்டுச்சென்றதாக மிகப் பெரிய பொய்யை பேசியுள்ளார்.
நான், ஸ்டாலினுக்கு சவால் விடுகிறன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் நடைபெற்ற நீர்வளப் பணிகள், சாலைப் பணிகள், உருவாக்கப்பட்ட புதிய மாவட்டப் பணிகள், மருத்துவக் கட்டமைப்பு, கல்வி கட்டமைப்பு என பட்டியலிடுகிறேன். இதுபோன்ற எத்தனை வளர்ச்சித் திட்டப் பணிகளை திமுக கொண்டுவந்தது என்று மக்களுக்கு விளக்கட்டும். மக்களே இதுகுறித்து முடிவு செய்யட்டும். இதில், இவர் பெரிய சாதனை படைத்துவிட்டதாகவும், நான் பொறாமைப்படுவதாகவும் கூறுகிறார். இதில் 'சொல்லாததையும் செய்தேன்' என்று அடிக்கடி புளித்துப்போன வசனம் வேறு.
அதேபோல், பதவிக்காக நாங்கள் முதுகு வளைந்து சேவை செய்தோம் என்று பொய் மேல் பொய் பேசியுள்ளார்” என சாடியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

