![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Chennai Custodial death: நடந்தது என்ன? உடலில் காயம் இருந்ததா? வெளியானது விசாரணைக் கைதி விக்னேஷின் உடற்கூராய்வு முடிவு!
விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
![Chennai Custodial death: நடந்தது என்ன? உடலில் காயம் இருந்ததா? வெளியானது விசாரணைக் கைதி விக்னேஷின் உடற்கூராய்வு முடிவு! Chennai custodial death: Vignesh post mortem report is out 13 injuries found on his body Chennai Custodial death: நடந்தது என்ன? உடலில் காயம் இருந்ததா? வெளியானது விசாரணைக் கைதி விக்னேஷின் உடற்கூராய்வு முடிவு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/05/04/6043147fe490af5a25e851ae49cfe8a8_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை விசாரணைக்கைதி மரணம் தொடர்பான உடற்கூராய்வு முடிவு வெளியாகியுள்ளது.
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷின் உடற்கூராய்வு முடிவு வெளியாகியுள்ளது. அதன்படி, அவருக்கு உடலில் 13 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தலை, கண் புருவம், தாடை பகுதிகளில் காயம் இருந்ததாகவும், வலது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரத்தக் கட்டுகள் காணப்படுவதாகவும், லத்தி போன்ற ஆயுதத்தால் தாக்கியதற்கான அடையாளங்களும் உடலில் காணப்படுகிறது என ஆய்வில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல்துறையினர் புரசைவாக்கம், கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஆட்டோவில் 2 நபர்கள் வந்தனர். அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். மேலும், அவர்கள் இருவரும் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளனர். அவர்களை பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் கத்தியை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சுரேஷ், 28, மற்றும் பட்டினம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 28 என்று தெரியவந்தது.
இந்த நிலையில், விக்னேஷிற்கு வலிப்பு ஏற்பட்டதாகவும் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றதாகவும், ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.
இதனால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் கூறினர். இதுதொடர்பாக, எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்னிலையில் விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டது.
இதற்கிடையே, விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த விசாரணைக் கைதி விக்னேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். விக்னேஷ் குறித்து பேசிய முதல்வர் ஸ்டாலின், "விசாரணைக்கைதி விக்னேஷுக்கு வலிப்பு மற்றும் வாந்தி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பை சந்தேக மரணமாக பதிவு செய்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது. மாஜிஸ்திரேட் முன்பு விக்னேஷின் உடல்கூராய்வு நடைபெற்றது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் காவல் மரணங்கள் எப்போது நிகழ்ந்தாலும் அது முறையாக விசாரிக்கப்பட்டு, உரிய நீதி வழங்கப்படும் என்ற நிலைப்பாட்டில் திமுக அரசு உறுதியாக உள்ளது" என்றார்.
மேலும், காவல்துறையினர் விக்னேஷின் உடலை அவர்களே புதைக்க முயற்சிப்பதாகவும் அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல்நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)