1 year of CM MK Stalin: ஆட்சியில் ஓராண்டு.. என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்தது? வெல்கிறாரா முதலமைச்சர் மு.க ஸ்டாலின்?
இந்த ஓராண்டில் சட்டப்பேரவையிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் ஏராளம். கடந்த காலங்களில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பிற்கு வந்து ஓராண்டாகிறது. ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததுமே முதலமைச்சர் பேசியது எங்களுக்கு ஓட்டுப் போடாதவர்களை, ஏன் ஓட்டுப்போடவில்லை என்று வருத்தப்பட வைக்கும் அளவிற்கு ஆட்சி இருக்கும் என்று கூறியிருந்தார். கிட்டத்தட்ட திமுக ஆட்சி அப்படி தான் இருந்திருக்கிறது இந்த ஓராண்டில். பெரும் எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ஆட்சியைப் பிடித்த முதலமைச்சர் ஸ்டாலின், மக்களுக்கு அதிருப்தி ஏற்படாத வகையில் வகையில் ஆட்சி செய்திருக்கிறார் என்றே சொல்லலாம். இந்த ஓராண்டில் சட்டப்பேரவையிலும் சரி, தனிப்பட்ட முறையிலும் சரி முதலமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் ஏராளம். கடந்த காலங்களில் 110 விதியின் கீழ் பல அறிவிப்புகள் வெளியாகியிருக்கிறது. ஆனால், இப்போது அறிவிப்புகளை வெளியிட்டதோடு அதை முடிந்த வரை செயல்படுத்தவும் மெனக்கெட்டிருக்கிறது முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு.
அதில் கொரோனா நிவாரண நிதியாக 4000 ரூபாய் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படும் என்று தேர்தலின் போதே அறிவித்திருந்தார் ஸ்டாலின். தேர்தலில் வெற்றிபெற்றதும் முதல் கையெழுத்தாக இரண்டு தவணைகளாக கொடுத்தார். பெண்களுக்கு அரசுப் பேருந்தில் இலவசப் பயணம் என்ற அறிவிப்பில் கையெழுத்திட்டது தான் பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த அறிவிப்பு தான் உள்ளாட்சித் தேர்தலில் திமுகவிற்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது என்றே சொல்லலாம். இந்தியாவில் மட்டுமல்ல வேறு எந்த நாட்டிலேயும் இல்லாத திட்டம் அது. அடுத்ததாக பல நூறு ஆண்டுகள் பழமையான சென்னை மாநகராட்சியின் மேயராக யார் வருவார் என்று பல யூகங்கள் வெளியான நிலையில் அதை தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினருக்கு ஒதுக்கி, அதில் ஒரு இளம்பெண்ணை அமர வைத்தது தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் ஒரு மைல்கல் என்றே தான் சொல்ல வேண்டும்.

பல சமூக நீதித் திட்டங்களை நாட்டுக்கு அறிமுகப்படுத்திய கலைஞர் கருணாநிதியலேயே செயல்படுத்த முடியாத அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டது மட்டுமல்லாமல், பயிற்சி முடித்த அரச்சகர்களுக்கு பணியை வழங்கினார். அதுமட்டுமல்லாமல் பெண் ஒருவரை ஓதுவாராக நியமித்ததெல்லாம் இந்தியா பார்க்காதது. நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு துறையின் சார்பில் வழங்கப்படும் வீடுகள் இனி குடும்ப தலைவிகளின் பெயரில்தான் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, 5 கிராமுக்கு மிகாமல் வைக்கப்பட்ட நகைக்கடன்களை தள்ளுபடி செய்தது எல்லாம் முக்கியமானவை.
கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக பள்ளியின் வாசலையே மிதிக்காமல் இருந்த மாணவர்களுக்கு எந்த அளவிலும் கற்றல் குறைபாடு வந்துவிடக்கூடாது என்பதற்காகவும், விடுபட்டதை நிரப்பும் விதமாக அறிவிக்கப்பட்ட இல்லம் தேடி கல்வித் திட்டம், மருத்துவமனைக்கு வரமுடியாத முதியவர்கள், கடும் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அறிவிக்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டங்கள் எல்லாம் மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரனமான திட்டங்கள்.
நீட் தேர்வுக்கு எதிராக இரண்டு முறை தீர்மானம் இயற்றி நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு கேட்பதில் உறுதியாக இருப்பது, சிஏஏவுக்கு எதிராக தீர்மானம், வேளாண்சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் இயற்றியது, துணைவேந்தர்களை முதலமைச்சரே நியமனம் செய்யலாம் என்று தீர்மானம் இயற்றியது மாநில அரசின் உரிமைக்காக தீர்மானம், மத்திய பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு தேசிய அளவிலான நுழைவுத் தேர்வினை எதிர்த்து தீர்மானம் இயற்றியது எல்லாம் கடந்த கால ஆட்சியாளர்கள் கூட செய்யத்துணியாதவை. கடந்த ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் போட்டதோடு அது திருப்பி அனுப்பப்பட்டதைக் கூட அரசு தெரிவிக்காத நிலையில், ஆளுநருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறது தற்போதைய அரசு.

இத்தனைக்கும் திமுக அரசு பதவியேற்றபோது நிதி நிலமை சொல்லிக்கொள்ளும்படியான நிலையில் கூட இல்லை. ஆனால், தலைக்கு மேலே நிறைய பிரச்சனை இருந்தது.. குறிப்பாக கொரோனா. திமுக அரசு பதவியேற்றபோது கொரோனா தாக்கம் உச்சத்தில் இருந்தது. அதை சமாளிப்பதற்கே முதல் மூன்று மாதங்கள் பிடித்தது. இதற்கிடையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் அரசின் காப்பீட்டு அட்டை மூலம் சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியானது. அதற்கடுத்தது பெருமழை வெள்ளம். வரலாறு காணாத மழை சென்னையை புரட்டிப் போட மழை முடிந்ததுமே சென்னையில் இனி வெள்ளமே வராத அளவிற்கு ஒரு திட்டத்தை தயார் செய்ய வெ.திருப்புகழ் ஐஏஎஸ் தலைமையில் குழுவை அமைத்தார்.
பொருளாதார நிலமையை சரி செய்ய தமிழ்நாட்டுக்கு ஆலோசனை வழங்க ரகுராம் ராஜன், எஸ்தர் டஃப்லோ, ஷான் த்ரே, அரவிந்த் சுப்பிரமணியன் உள்ளிட்ட நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைத்தார். அதுமட்டுமல்லாமல் மாநில வளர்ச்சி குறித்து திட்டமிட தனது தலைமையின் கீழ், பொருளாதார நிபுணர் ஜெயரஞ்சன் உள்ளிட்டோரை இணைத்து மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை அமைத்தார். சமூகநீதி அளவுகோல் சட்டப்படி முழுமையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக சுப.வீரபாண்டியன் தலைமையில் சமூகநீதி கண்காணிப்புக் குழு, மத்திய அரசின் திட்டங்கள்மாவட்ட அளவில் நடைமுறைப்படுத்தப்படுவதைக் கண்காணிக்க முதல்வரை தலைவராக கொண்டு மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும்கண்காணிப்புக் குழு என்று எது எதெல்லாம் மாநில வளர்ச்சிக்கு முக்கியமோ அதற்கெல்லாம் குழு அமைத்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்த குழுக்களை கட்சியில் இருக்கும் பொறுப்பு போன்று கருதாமல் உண்மையாகவே அத்துறை நிபுணர்களை இணைத்து குழுக்களை உருவாக்கியிருக்கிறார்.

இந்த ஓராண்டு காலத்தில் திமுக அரசால் கொண்டுவரப்பட்டதாக இங்கு சொல்லியிருப்பவை கொஞ்சம், சொல்லாமல் விட்டவை அதிகம். அழாத பிள்ளைக்கும் பால் கொடுக்கும் தாயாய் இந்த அரசு இருக்கும் என்று சட்டப்பேரவையில் கூறினார் ஸ்டாலின். சொன்னதோடு மட்டுமல்லாமல் அப்படி தான் எல்லா தரப்பு மக்களுக்குமான ஆட்சியும் நடத்துகிறார் என்று கூறுகின்றனர் விமர்சகர்கள். குறிப்பாக நம்மிடம் என்ன பிரச்சனை இருக்கிறது என்பதையும் அதை எப்படி தீர்ப்பது என்பதையும் தெரிந்தே செயல்படுகிறார்.
தற்போதைய நிலையில் இந்தியாவில் பல்வேறு வகைகளில் முன்மாதிரி மாநிலமாக இருக்கிறது தமிழ்நாடு. இதே வேகத்தில் சென்றால் முதலமைச்சர் ஸ்டாலின் சொன்னது போல நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்பது நிதர்சனம்.






















