Pongal Festival: வெளிநாட்டவருடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பாரம்பரிய முறையில் பொங்கல் விழா கொண்டாட்டம்.
வெளிநாட்டினர் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டு மாட்டு வண்டியில் ஏறி பயணம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழர் திருநாளாம் தை முதல் நாளான இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது. இதில் அனைத்து மதத்தினர் இணைந்து சமத்துவ வழிபாடு நிகழ்ச்சி பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
நிகழ்ச்சியில் அனைத்து துறை அலுவலர்கள், காவல்துறையினர், மருத்துவத்துறையினர், மலைவாழ் மக்கள், இலங்கைத் தமிழர்கள், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள், வெளிநாட்டை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என பலரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் வைத்து பொங்கலை கொண்டாடினர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவருக்கும் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் பூ மாலை அணிவித்து வரவேற்றார். பொங்கல் விழாவிற்கு அனைத்து அலுவலர்களும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேஷ்டி, சேலை அணிந்து வந்து பொங்கல் விழாவில் பங்கேற்றனர். சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் வேஷ்டி சட்டையில் கலந்து கொண்டு மாட்டு வண்டியில் ஏறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை சுற்றி வந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் வெளிநாட்டினர் சமத்துவ பொங்கல் விழாவில் கலந்து கொண்டு மாட்டு வண்டியில் ஏறி பயணம் செய்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் நடத்தப்பட்டது. இதில் உரியடி போட்டியில் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டு உறியடித்தனர். பின்னர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தைகளின் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சிலம்பம் உள்ளிட்ட பல கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் சிறப்பாக நடனமாடிய குழந்தைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திருவிழா நடைபெறும் கிராமம் போல் காட்சியளித்தது.
இந்த நிகழ்ச்சியில் சேலம் மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், சேலம் மாநகர மேயர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதுகுறித்து பின்லாந்து நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் கூறுகையில், இந்தியாவில் பலதரப்பு மக்கள் வசித்து வருகின்றனர். ஒவ்வொரு பகுதிகளுக்கும் தனி கலாச்சாரம், பண்பாடு உள்ளது. அதில் சிறப்பான ஒன்றாக தமிழர்களின் கலாச்சாரம் உள்ளது. விவசாயிகள் அறுவடை செய்யும் நாளை திருவிழாவாக கொண்டாடி மகிழ்கின்றனர்.
காலங்காலமாக இந்த கலாச்சாரம் பின்பற்றி வருவது வியப்பாக உள்ளது. இந்த ஆண்டு நாங்களும் ஒருவராக பொங்கல் பண்டிகையை கொண்டாடியது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எங்களை அழைத்ததற்கு சேலம் மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அனைவருக்கும் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் என்று கூறினார்.
உங்கள் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. சேலம் டவுன் அருள்மிகு ராஜகணபதி திருக்கோவில் விநாயகருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டது. இதுபோன்று சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் மற்றும் கோட்டை அழகிரிநாதர் திருக்கோவில் உள்ளிட்ட வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets