H Raja : ’ஹெச்.ராஜா மயங்கி விழுந்தபோது உதவியது யார்?’ குடும்பத்தினர் அறிவிப்பு..!
”நெருக்கடியான தருணத்தில் திரு.H.ராஜா ஜி அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்த அனைவருக்கும் நன்றி”

சில நாட்களுக்கு முன்னர் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றிருந்தபோது மயங்கி விழுந்தார். அவருக்கு பக்கவாத அறிகுறிகள் இருந்த நிலையில், அதிலிருந்து படிப்படியாக அவர் மீண்டு வந்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், ஹெச்.ராஜா மயங்கி விழுந்தபோது அவருக்கு உதவியது திமுக ஊடக பிரிவை சேர்ந்த மருத்துவர் ஹபீஷுல்லா என திமுகவினர் சமூக வலைதளத்தில் எழுதிக்கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிராக தான் மருத்துவ உதவி செய்ததாக பாஜக மூத்த தலைவர் தமிழிசை பதிவிட்டிருந்தார். இந்நிலையில், ஹெச்.ராஜாவிற்கு உதவியது யார் என்பது குறித்து அவருடைய சமூக வலைதள பக்கங்களில் எச்.ராஜா குடும்பத்தினர் ஒரு விளக்கத்தை பதிவு செய்துள்ளனர்.
ஹெச்.ராஜா குடும்பத்தினர் பதிவிட்டது என்ன ?
அதில், ”திரு.H.ராஜா ஜி அவர்கள் 30.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற NDTV விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அந்த அரங்கிலே இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் வழங்கி இரத்த சர்க்கரை அளவு குறைந்திருக்குமோ என்றெண்ணி சர்க்கரை அளித்துள்ளனர். அத்தொலைக்காட்சியின் அடுத்த விவாத நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக விவாத அரங்கில் இருந்த தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவரும், தெலங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் முன்னாள் ஆளுநருமான டாக்டர் திருமதி தமிழிசை அவர்கள், அவர்கள் மருத்துவர் என்பதால் சூழ்நிலையின் தீவிரத்தையும் திரு.H.ராஜா ஜி அவர்களுக்கு ஏற்பட்டிருந்த பாதிப்பின் அறிகுறியையும் உணர்ந்து விரைந்து செயல்பட்டு முதலுதவி சிகிச்சை அளித்து அருகிலுள்ள பாலாஜி மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடுகளை செய்துள்ளார். அந்த தருணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் திரு.ANS.பிரசாத் அவர்களும், ஆன்மீக மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் திரு.B.S.பெருமாள் அவர்களும், திரு.H.ராஜா ஜி அவர்களின் தனிச் செயலாளர் திரு.பாஸ்கரன் அவர்களும் பாலாஜி மருத்துவமனைக்கு திரு.H.ராஜா ஜி அவர்களை அழைத்துச் சென்று மருத்துவ சிகிச்சையின் போது உடனிருந்துள்ளனர்.
திரு.H.ராஜா ஜி அவர்கள் 30.01.2026 அன்று சென்னையில் நடைபெற்ற NDTV விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற போது திடீரென அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட போது அந்த அரங்கிலே இருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் வழங்கி இரத்த சர்க்கரை அளவு குறைந்திருக்குமோ என்றெண்ணி சர்க்கரை அளித்துள்ளனர்.…
— H Raja (@HRajaBJP) February 5, 2026
உடனடியாக சிகிச்சை அளித்த மருத்துவர்கள்
மருத்துவர் திரு.பாலசுப்ரமணியன் அவர்கள் உடனடி மருத்துவ சிகிச்சை அளித்து CT ஸ்கேன் எடுத்து உயர் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைத்து பாலாஜி மருத்துவமனை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் அப்பல்லோ மருத்துவமனை செல்ல உதவி புரிந்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் திரு. H ராஜா ஜி அவர்கள் அனுமதிக்கப்பட்ட தருணத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் திரு.கேசவவிநாயகம் அவர்கள், உடனிருந்து தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனையில் மருத்துவர் திரு.சீனிவாச பரமசிவம், மருத்துவர் திரு.செங்கோட்டுவேல் ஆகியோர் தலைமையில் மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்துள்ளனர். தகவலறிந்து பாஜக தேசிய செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான திரு. அரவிந்த் மேனன், தமிழக பாஜக மாநில தலைவர் திரு. நயினார் நாகேந்திரன், ன்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் திருமதி. உமா ஆனந்தன் ஆகியோர் மருத்துவ சிகிச்சை தொடங்கி திரு.H.ராஜா ஜி அவர்கள் அபாயகட்டத்தை கடந்துவிட்டார் அவருக்கு சிகிச்சை பலனிக்கத் தொடங்கிவிட்டது அவர் நிச்சயம் குணமாகி விடுவார் என்கிற செய்தியை மருத்துவர்கள் அளிக்கும் வரை மருத்துவமனையிலேயே இருந்துள்ளனர்.
அனைவருக்கும் நன்றி - குடும்பத்தினர்
நெருக்கடியான தருணத்தில் திரு.H.ராஜா ஜி அவர்களுக்கு முதலுதவி சிகிச்சையளித்த மருத்துவர்கள், உயர் மருத்துவ சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உடனிருந்து உதவியவர்கள், அந்த தருணத்தில் ஆறுதலாகவும், ஆதரவாகவும் மருத்துவமனையில் உடனிருந்த பாஜக தலைவர்கள் அனைவருக்கும் முதற்கண் எங்களது இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.























