TVK VIJAY: மீண்டும் வீட்டை விட்டு வெளியே வரும் விஜய்.! தேதி குறித்த தவெக- எப்போ தெரியுமா.?
TVK anniversary function VIJAY: தமிழக அரசியல் களம் நாளுக்கு நாள் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இன்னும் சில வாரங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறவுள்ள தவெக ஆண்டு விழா நிகழ்வில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ளது. எனவே தேர்தல் பணியை தமிழக அரசியல் கட்சிகள் தொடங்கியுள்ளது. அதிலும் திமுக- அதிமுக போட்டி போட்டு களப்பணியை செய்து வருகிறது. அதிமுக சார்பாக மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு தொகுதியிலும் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி, அடுத்தாக வேட்பாளர் நேர்காணல், கூட்டணி, தொகுதி பங்கீடு என அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது. இதே போல ஆளுங்கட்சியான திமுகவும் தேர்தல் பணிகளை விரைவுப்படுத்தியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் தொகுதியில் உள்ள நிலவரம், தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு, பிரச்சார வியூகம் என பணிகளை தொடங்கியுள்ளது.
தேர்தல் பணியில் இறங்காத விஜய்
இந்த நிலையில் திமுக- அதிமுகவை வீழ்த்துவேன் என்ற சபதத்தோடு திரைத்துறையில் இருந்து அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் விஜய், கடந்த 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய விஜய், கடந்த 2 ஆண்டுகளில் குறைந்தது 15 முறை மட்டுமே வெளியுலகத்திற்கு வந்துள்ளார். 2 மாநில மாநாடு, பரந்தூர் விமான நிலையத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பு, கோவையில் தவெக நிர்வாகிகள் கருத்து கேட்பு கூட்டம், காவல்துறை தாக்குதலில் அஜித்குமார் உயிரிழப்பு போராட்டம், அடுத்தாக மக்களை சந்திக்கும் வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல், கரூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிராச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அடுத்தடுத்து சிக்கலில் விஜய்
அப்போது கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரழந்ததையடுத்து சுமார் 2 மாதம் தவெக என்ற கட்சியானது சைலண்ட் மோடிற்கு சென்றது. சுமார் 72 நாட்களுக்கு பிறகு புதுச்சேரி மற்றும் ஈரோட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மட்டுமே விஜய் கலந்து கொண்டார். இந்த நிலையில் தமிழகத்தில் அரசியல் பணிகளை மற்ற அரசியல் கட்சிகள் விரைவுப்படுத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கூட கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். நேற்று சென்னையில் நடைபெற்ற தவெக சென்னை மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் விஜய்யை தவிர மற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் தவெக நிர்வாகிகளால் கூட விஜய்யை சந்திக்க முடியாத நிலை உள்ளதாக கூறப்படுகிறது.
தவெக 3ஆம் ஆண்டு விழா
இந்த நிலையில் தான், தவெக தொடங்கிய 3ஆம் ஆண்டு விழாவில் விஜய் கலந்து கொள்ள இருப்பதாக அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், தமிழக வெற்றிக்கழகம் ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. தற்போது மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. இந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக மக்களுக்கான நம் தலைவர் அவர்களின் முன்னெடுப்புகள், மிக முக்கியமானவை. ஆனாலும் நாம் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். தன் மீது பேரன்பு கொண்ட மக்களுக்காக, நம் தலைவர் அவர்கள் அத்தனைத் தடைகளையும் எதிர்கொண்டு இன்னும் தீவிரமாகக் களமாடி வருகிறார். நம் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இலக்கை நோக்கிய வெற்றிப் பயணத்தில் மேலும் அதிக ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார்.
பிப்ரவரி 2ஆம் தேதி - தவெக ஆண்டுவிழாவில் விஜய்
தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தைக் கொண்டாட உள்ளோம். நம் வெற்றித் தலைவர் அவர்கள் தலைமையில் 'தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா, சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி, நமது கழகத் தலைமை நிலையச் செயலகத்தில். வரும் 2ஆம் தேதி (02.02.2026, திங்கள்கிழமை) காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது. இதைக் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வாக கூறப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், பிப்ரவரி 2ஆம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு பிறகாவது தவெக தலைவர் விஜய் மக்களை சந்திக்கும் வகையில் களம் இறங்குவாரா என தவெக தொண்டர்கள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.





















