Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
"பொன்முடி இருக்கும் வழக்குகளும் அவரை நெருக்கி வருவதால் தற்போதைக்கு அமைதி காக்கும் உத்தியை அவர் பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது’

விழுப்புரம் மாவட்டத்தின் முடிசூடா மன்னர், குறுநில மன்னர் என்றெல்லாம் அழைக்கப்படும் அமைச்சர் பொன்முடிக்கான முக்கியத்துவத்தை திமுக படிப்படியாக குறைத்து வருவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
மாற்றப்பட்ட இலாக்கா, மஸ்தானுக்கு மாவட்ட பொறுப்பு – வருத்தத்தில் பொன்முடி ?
திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் நெருங்கிய நண்பராக அறியப்படும் பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித் துறை சமீபத்தில் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. அதற்கு பதிலாக அவருக்கு வனத்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டு, புதியவரான கோவி செழியனுக்கு பொன்முடி வகித்த உயர்கல்வித்துறை ஒதுக்கப்பட்டது. இதனால் அப்போதிலிருந்தே பொன்முடி அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மஸ்தானுக்கு மீண்டும் மாவட்ட பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டதில் அதிருப்தியின் உச்சத்திற்கே பொஞ்முடி சென்றுவிட்டார் என்று பதபதைக்கின்றார்கள் அவருடைய ஆதரவாளர்கள்.
மஸ்தானுக்கு மரியாதை தராத பொன்முடி
நிகழ்ச்சிகள், விழாக்களில் செஞ்சி மஸ்தானுக்கு பொன்முடி உரிய மரியாதையையும் அங்கீகாரத்தை பல நேரங்களில் தராதாது குறித்து புகைப்படங்களும் வீடியோக்களும் அவ்வப்போது ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் வெளியான நிலையில், இது குறித்து செஞ்சி மஸ்தான் திமுக தலைமைக்கு தன்னுடைய நிலையை எடுத்துக் கூறியதே, மீண்டும் அவருக்கு மாவட்ட பொறுப்பு தரப்பட காரணம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது.
ஓசி, SC – அடுத்தடுத்த சர்ச்சையில் சிக்கிய பொன்முடி
பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற திமுக அரசின் மிகப்பெரிய கொள்கை அறிவிப்பு திட்டத்தை ‘ஓசி பஸ்’ என்று கிண்டல் செய்தது, நிகழ்ச்சியில் பட்டியலின பெண்ணை ‘நீ SC தானே?’ என்று கேட்டது, ஆய்வு சென்றபோது, தக்காளி விலை ஏற்றம் பற்றி கேள்வி எழுப்பிய பெண்ணிடம், ‘அத மேல மோடிகிட்ட போய் கேளு’ என ஒருமையில் பேசியது என அடுத்தடுத்து அவர் பேசிய பேச்சுகள் திமுக தலைமைக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தின. பொன்முடியை மேடையில் வைத்துக்கொண்டே மறைமுகமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியபோதும் கூட, பொன்முடி தன்னுடைய பாணியை மாற்றிக்கொள்ளவில்லை என்ற கோபம் திமுக தலைமைக்கு இருந்ததாக கூறப்பட்டது.
அதே நேரத்தில் அவர் விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோரிடம் நடந்துக்கொள்ளும் முறையும் அவரது உடல்மொழியும் பல்வேறு நேரங்களில் விமர்சனத்திற்கு உட்பட்டவையாக மாறிப்போயிருந்தன.
ரிப்போர்ட் அடித்த நிர்வாகிகள் – நடவடிக்கையில் இறங்கிய திமுக தலைமை
இவற்றையெல்லாம் உளவுத்துறையும், மாவட்ட திமுகவினரும் திமுக தலைமைக்கு ரிப்போர்ட் அடிக்க, திமுக துணைப் பொதுச்செயலாளராக இருக்கும் பொன்முடியின் இலாக்காவையே எந்த சமரசமும் இன்றி மாற்றியடித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். என்ன நடந்தாலும் தன்னுடைய உயர்கல்வித் துறை என்ற இலாக்காவில் முதல்வர் கைவைக்கமாட்டார் என்ற குருட்டு நம்பிக்கையில் இருந்த பொன்முடிக்கு அந்த இலாக்கா மாற்றம் ஒரு எச்சரிக்கை மணியாக அமைந்தது. இருப்பினும், அவருடைய செயல்பாடுகளில் பெரிய மாற்றத்தை காணாத திமுக தலைமை அவருக்கு அவரது மாவட்டத்திலேயே செக் வைக்க நினைத்தது.
மஸ்தானுக்கு 3 தொகுதிகள் – பொன்முடி மகனுக்கு இரண்டே தொகுதி
அதன் வெளிப்பாடுதான், பொன்முடி ஆதிக்கத்தால் அமைச்சர் பொறுப்பு பறிக்கப்பட்டு, மாவட்ட செயலாளரும் பதவியும் பறிபோன செஞ்சி மஸ்தானுக்கே மீண்டும் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கியிருக்கிறது திமுக தலைமை.
விழுப்புரம் வடக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் செஞ்சி மஸ்தானுக்கு செஞ்சி, மயிலம், திண்டிவனம் என்ற மூன்று தொகுதிகளை ஒதுக்கியுள்ள திமுக தலைமை, அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம சிகாமணிக்கு திருக்கோவிலூர், விக்கிரவாண்டி ஆகிய இரண்டு தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளராக்கியிருக்கிறது. அதாவது, விழுப்புரத்தில் பொன்முடியின் கால் நூற்றாண்டு ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த நடவடிக்கையை திமுக தலைமை எடுத்திருக்கிறது.
வன்னியர் சமுதாயத்திற்கு முக்கியத்துவம்
அதோடு, அதிமுவில் இருந்து திமுகவிற்கு வந்த வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த லட்சுமணனுக்கு விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பும் கொடுத்து, விழுப்புரம் மாவட்டம் பொன்முடிக்கு மட்டுமே சொந்தமல்ல என்பதை ஆணித்தரமாக நிரூபணம் செய்யும் விதமாக அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது திமுக.
இப்படி தனக்கு அடிமேல் அடி விழும் என்பதை சற்றும் எதிர்பாராத அமைச்சர் பொன்முடி, ஆடிப்போயிருப்பதாகவும், அதோடு திமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. பொன்முடியின் அதிருப்தியை சரிக்கட்டும் விதமாக அமைச்சர் ராஜகண்ணப்பனிடமிருந்த காதி கிராம தொழில்கள் துறையை கூடுதலாக அவருக்கு கொடுக்கப்பட்டாலும், அதில் திருப்தி அடையாத பொன்முடி, பேராசிரியரான தன்னை மீண்டும் உயர்கல்வித்துறை அமைச்சராக்க வேண்டும் என்று அடம்பிடித்துக் கொண்டிருப்பதாக விழுப்புரம் மாவட்ட உடன்பிறப்புகள் பேசி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

