DMK ELECTION PLAN: ஆட்டம் காட்டும் காங்கிரஸ்...எல்லாத்துக்கும் முடிவு கட்ட இன்று பக்கா பிளானோடு களமிறங்கும் திமுக
DMK ELECTION PLAN: கூட்டணி தொடர்பாக திமுக- காங்கிரஸ் இடையே மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை திமுக தரப்பில் இன்று அமைக்கப்படவுள்ளது.

நெருங்கும் தேர்தல்- திமுக காங்கிரஸ் மோதல்
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்க இன்னும் சில வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் தேர்தல் பணிகளை அரசியல் கட்சிகள் தீவிரப்படுதியுள்ளது. அந்த வகையில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை, வேட்பாளர் தேர்வு, தேர்தல் அறிக்கை ஆகிய பணிகளை தொடங்கியுள்ளது. இதில் முதல் ஆளாக அதிமுக தனது கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்தாக வேட்பாளர் நேர்காணலையும் நடத்தி இரண்டு கட்ட தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளது. அதே நேரம் திமுக சார்பாக இன்னும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை குழுவும் அமைக்கவில்லை, வேட்பாளர் விண்ணப்பம், நேர்காணல் தொடர்பாக எந்தவித முடிவும் அறிவிக்காமல் உள்ளது.
நிபந்தனை விதித்த காங்கிரஸ்
இதற்கு முக்கிய காரணம் காங்கிரஸ் கட்சி திடீரென கூட்டணி ஆட்சி, கூடுதல் தொகுதி என அடுத்தடுத்து நிபந்தனைகள் விதித்தது தான். அந்த வகையில் காங்கிரஸ் கட்சி சார்பாக கடந்த நவம்பர் மாதம் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலினை சந்தித்து பேசினர். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தது 60 தொகுதிகள் மற்றும் ஆட்சியில் பங்கு என கோரிக்கை விடுத்தனர். ஆனால் இதனை திமுக தலைமை ரசிக்கவில்லை. இதன் காரணமாகவே காங்கிரஸ் கட்சியுடன் எந்தவித பேச்சுவார்த்தையும் நடத்த அழைக்கவில்லை.
காங்கிரஸ் நிபந்தனையை தூக்கி போட்ட திமுக
மேலும் காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி அமைக்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர். இதற்கு ஏற்ப காங்கிரஸ் கட்சிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் குறைந்தது 70 தொகுதிகள், அமைச்சரவை என ஆசைவார்த்தை காட்டியது. ஆனால் காங்கிரஸ் மேலிடம் திமுகவுடன் கூட்டணி அமைப்பதை உறுதி செய்துள்ளது. இந்த நிலையில் திமுக சார்பில் எப்போது கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்படும் என கேள்வி எழுந்த நிலையில், இன்று திமுக தலைமை கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த குழுவை அமைக்கவுள்ளது.
திமுக தொகுதி பேச்சுவார்த்தை குழு
அந்த வகையில் ஏற்கனவே நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச அமைக்கப்பட்ட அதே குழுவே சட்டமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு தொடர்பாக பேச அமைக்கப்படும் என தெரிகிறது. அந்த வகையில் இந்த குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, திண்டுக்கல் ஐ பெரியசாமி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் தி.மு.க. எம்.பி. ஆ.ராசா இடம்பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
எனவே திமுக கூட்டணியில் தற்போது வரை காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட், மமக, மநீம, முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த முறை திமுக கூட்டணியில் தேமுதிக மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு உருவாகியுள்ளது. எனவே கடந்த முறை ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட மற்ற கட்சிகளுக்கு குறைவான இடங்களே ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.























