CPI Mutharasan : தவெகவுக்கு கொள்கை கோட்பாடு என ஒரு கத்திரிக்காயும், மண்ணாங்கட்டியும் இல்லை- வெளுத்தெடுத்த முத்தரசன்
CPI Mutharasan : த.வெ.கவுக்கு கொள்கை, கோட்பாடு ஒரு கத்திரிக்காயும் கிடையாது. ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. தொப்புள்கொடி கூட அறுபடாத ஒரு குழந்தை.. தேறுமா தேறாதானு போக போகதான் தெரியும்" என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

தமிழகத்தில் தவெக ஆட்சி
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியை இழந்துள்ள நிலையில், தமிழக வெற்றிக்கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஆனால் ஆட்சி அமைக்க போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இல்லாத காரணத்தால் குடியரசு தலைவர் ஆட்சி உருவாகும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து தற்போதைய சூழலில் மீண்டும் தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராக இல்லாத நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. இதனையடுத்து முதலமைச்சராக பொறுப்பேற்ற விஜய், தனது அமைச்சரவையில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கு இடமளித்தார்.
இந்தியா கூட்டணி-முத்தரசன் விமர்சனம்
அதே நேரம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருவதாக தெரிவித்தது. இதனால் திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் முதலமைச்சர் விஜய் ஆட்சி நடத்தி வருகிறார். இந்த நிலையில் தவெகவின் கொள்கை தொடர்பான கேள்விக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னாள் மாநில செயலாளரும், மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினருமான முத்தரசன் கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த வகையில் தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் செய்தியாளர்களை சந்திந்த அவரிடம், இந்தியா கூட்டணி கூட்டத்தை திமுக புறக்கணித்தது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், இந்தியா கூட்டணி உருவாவதற்கு காங்கிரஸ் தான் மிக முக்கியமானதாகும்.
தவெகவில் அதிமுக மாஜி அமைச்சர்கள்
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக மதவாதத்தில் இருக்கும் வகையில் இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. தற்போதுள்ள சூழலில் அவர்கள் வருவார்கள் இவர்கள் வருவார்கள் யாரை வேண்டுமானாலும் உள்ளே அழைத்துக் கொள்ளலாம் என்று கொள்கையை கைவிட்டு விட்டு இந்தியா கூட்டணியை பலப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தவெக தூய்மையான ஆட்சி பெறுவதாக கூறிய நிலையில், தற்போது முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மற்றும் பல்வேறு தொண்டர்கள் அதிமுகவில் இணைந்து வருவது தொடர்பான கேள்விக்கு,
ஊழல் வழக்குகளை காப்பாற்ற ஆளுங்கட்சியில் சேர்கிறார்கள்
பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சியில் உள்ள எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் மீது வழக்குகள் தொடுக்கப்பட்டு அவர்களை தன் வசம் இழுக்க முயற்சிப்பது நடைபெறக்கூடிய ஒன்றாகும். ஊழல் வழக்குகளில் உள்ள நபர்களும் தங்கள் வழக்குகளில் இருந்து தங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக ஆளுங்கட்சியின் ஆதரவை தேடி செல்வது தற்போது வாடிக்கையாக்கி வருது. அது தான் தற்போது தமிழகத்திலும் நடைபெற்று வருகிறது என விமர்சித்தார்.
தவெக ஆட்சி அமைத்து ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில்,ஆட்சி எப்படி உள்ளது என்று கேள்விக்கு பதில் அளித்த அவர், இன்னும் தொப்புள் கொடி அறுக்காத குழந்தை அது இனிமேல் வளர வளர தான் தெரியும் அதுவரை பொறுத்திருப்போம் என்று கூறினார்.
ஒரு கத்திரிக்காயும் கிடையாது. ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது.
தவெகவின் கொள்கை கம்யூனிச சிந்தாந்தத்தில் வருகிறதா.? என்ற கேள்விக்கு, த.வெ.கவுக்கு கொள்கை, கோட்பாடு ஒரு கத்திரிக்காயும் கிடையாது. ஒரு மண்ணாங்கட்டியும் கிடையாது. தொப்புள்கொடி கூட அறுபடாத ஒரு குழந்தை.. தேறுமா தேறாதானு போக போகதான் தெரியும்"
ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நேரத்தில் அவர்களுக்கு ஆதரவு தந்து தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி கவர்னர் மூலம் மறைமுகமாக பாரதிய ஜனதா ஆட்சியை கொண்டு வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சில கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு கொடுத்து வருகிறோம் என முத்தரசன் தெரிவித்தார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















