நீட் வினாத்தாள் கசிவு; ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும்- பிரதமர் மோடி பேச்சால் பரபரப்பு
நீட் வினாத்தாள் கசிவைத் தடுக்க ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியதாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாகப் பிழைகளைச் சரிசெய்து நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நிகழாமல் தடுக்க உறுதியான கட்டமைப்பு உருவாக்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதி அளித்துள்ளார்.
போராட்டக் குழுவுடன் மத்திய அரசு பேச்சு
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களுடன் ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்படி, போராட்டக் குழு பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டாவை நேரில் சந்தித்துப் பேசினார். இதற்கிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சந்தித்து தீவிர ஆலோசனை நடத்தினார்.
இதற்கிடையே இன்று நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்திற்கு (மங்கள் மிலன்) பின், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
குற்றவாளிகள் உடனடியாகக் கைது
"நீட் வினாத்தாள் கசிவு குறித்து தகவல் கிடைத்தவுடனேயே மத்திய அரசு விழிப்படைந்து உடனடியாகச் செயல்பட்டது. இந்த முறைகேட்டில் தொடர்புடைய 13 குற்றவாளிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். மேலும், பாதிக்கப்படக் கூடிய மாணவர்களுக்கான மறுதேர்வும் குறித்த நேரத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது என்பதை கூட்டத்தில் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
வினாத்தாள் கசிவு இல்லாத, மிகவும் வலுவான மற்றும் பாதுகாப்பான தேர்வு நடைமுறையை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தியுள்ளார். முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது ஈவிரக்கமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும்
இனிவரும் காலங்களில் எவ்வித வினாத்தாள் கசிவும் ஏற்படாது என நாட்டின் இளைஞர்களுக்கு முழு உத்தரவாதம் அளித்துள்ள பிரதமர், இந்திய இளைஞர்கள் உலக அரங்கில் தலைமைப் பொறுப்பை ஏற்கும் வகையில் அவர்களை வழிநடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். நீட் வினாத்தாள் லீக்கை தடுத்து, நம்பகத்தன்மையை உருவாக்க ஒட்டுமொத்த தேசமும் பொறுப்பேற்றுச் செயல்பட வேண்டும் என்பதே பிரதமரின் நிலைப்பாடாக உள்ளது.
வரவிருக்கும் மழைக்காலக் கூட்டத்தொடரில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆதரவளிக்கும். இளைஞர்கள் மற்றும் தேசம் சார்ந்த இதுபோன்ற முக்கியப் பிரச்சனைகளில் எதிர்க்கட்சிகள் அரசியலைக் கடந்து அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்" என்று கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
வினாத்தாள் கசிவைத் தடுக்க, மத்திய அரசுதானே பொறுப்பேற்க வேண்டும். ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் பொறுப்பாக்குவது ஏன் என்று விவாதங்கள் எழுந்து வருகின்றன.
Before You Go
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு
ட்ரெண்டிங் செய்திகள்























