PM Modi: "எதிர்க்காதீங்க.. கூட்டணி சேருங்க!" தெலங்கானா முதல்வருக்கு பிரதமர் மோடி வைத்த சுவாரசிய 'செக்'
நீங்கள் அடைய விரும்பும் இலக்கை உங்களால் அடைய முடியாது என்பதால், என்னுடன் இணைந்திருப்பதே உங்களுக்கு நல்லது என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

தெலங்கானா மாநிலத்தின் வளர்ச்சிக்கு மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படுவதுதான் அந்த மாநிலத்திற்குப் பலன் தரும் என்று பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ரேவந்த் ரெட்டியிடம் நகைச்சுவையாகவும் அதே சமயம் அரசியல் ரீதியாகவும் கருத்து தெரிவித்துள்ளார்.
என்னுடன் சேர்ந்துடுங்க
தெலங்கானாவஸில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்த பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ரேவந்த் ரெட்டியிடம் தான் ஒன்றைச் சொல்ல விரும்புவதாகக் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் குஜராத்திற்கு இந்திய அரசு என்னவெல்லாம் கொடுத்ததோ, அதைத் தெலங்கானாவிற்கும் வழங்கத் தான் தயாராக இருப்பதாகக் கூறிய அவர், ஆனால் அப்படிச் செய்தால் தற்போது அந்த மாநிலத்திற்கு கிடைத்து வரும் நிதி பாதியாகக் குறைந்துவிடும் என்று தனது அறிவிற்கு எட்டிய வரையில் தெரிவதாகக் குறிப்பிட்டார். நீங்கள் அடைய விரும்பும் இலக்கை உங்களால் அடைய முடியாது என்பதால், என்னுடன் இணைந்திருப்பதே உங்களுக்கு நல்லது என்று அவர் பேசினார்.
குஜராத் மாடல் VS தெலங்கானா மாடல்
முன்னதாக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசுகையில், மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்து ஒரு தசாப்த காலத்திற்கு மேலாக 'குஜராத் மாடலை' உருவாக்கியதைச் சுட்டிக்காட்டினார். அதேபோல் தனது தலைமையிலான தெலங்கானா அரசும் 2034-ஆம் ஆண்டிற்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு 'தெலங்கானா மாடலை' மக்கள் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்திருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே பிரதமரின் இந்த கருத்து அமைந்தது. தொடர்ந்து பேசிய பிரதமர், இந்தியாவின் ஜவுளித் தொழில் ஒரு காலத்தில் உலகப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்ததாகவும், அந்தப் பாரம்பரியத்தைப் புதுப்பித்து வலுப்படுத்த மத்திய அரசு தற்போது பணியாற்றி வருவதாகவும் உறுதிபடத் தெரிவித்தார். வாரங்கலில் அமையவுள்ள பிஎம் மித்ரா (PM MITRA) பூங்கா நாட்டில் புதிய ஜவுளிப் புரட்சியை வேகப்படுத்தும் என்றும் அவர் கூறினார்.
கட்டமைப்பு மற்றும் எரிசக்தி மேம்பாடு
உள்கட்டமைப்பு மேம்பாடு குறித்துப் பேசிய மோடி, கடந்த பத்தாண்டுகளில் நவீன இணைப்புகளை ஏற்படுத்துவதே மத்திய அரசின் முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாக இருந்து வருகிறது என்றார். இந்தியா முழுவதும் இணைப்பை வலுப்படுத்த சாலைகள், ரயில்வே, விமான நிலையங்கள் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் முதலீடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். கடந்த 11 ஆண்டுகளில் தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டமைப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். எரிசக்தி பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், இத்துறையில் அரசாங்கம் பெரும் முதலீடுகளைச் செய்து வருவதாகவும், சமீபத்திய ஆண்டுகளில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடுகளுள் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாகவும் கூறினார்.
ரூ. 50,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள்
ரயில்வே மேம்பாடு குறித்துக் குறிப்பிட்ட பிரதமர், ஒருங்கிணைந்த ஆந்திரப் பிரதேச காலத்தில் இப்பகுதிக்கான ரயில்வே வரவு செலவுத் திட்டம் ரூ. 1,000 கோடிக்கும் குறைவாகவே இருந்தது என்றும், ஆனால் இப்போது தெலங்கானாவிற்கு மட்டும் சுமார் ரூ. 5,500 கோடி ரயில்வே நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் சுமார் ரூ. 50,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் தற்போது மாநிலத்தில் நடைபெற்று வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் குறிப்பிட்டார்.
ட்ரெண்டிங் செய்திகள்























