ரஃபேலை சுடவே இல்லையாம்! பாகிஸ்தானின் பொய்களை அம்பலப்படுத்திய அமெரிக்க முன்னாள் விமானி
ரஃபேல் போர் விமானத்தைப் புகழ்ந்து பேசிய ரையன், "ரஃபேல் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிநவீன போர் விமானமாகும். எனது ஆய்வில், பாகிஸ்தான் ஒரு ரஃபேல் விமானத்தைச் சுட்டு வீழ்த்தவில்லை என்றார்.

கடந்த ஆண்டு இந்தியா மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை, பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அதற்குத் துணைநிற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராகவும் ஒரு வலுவான செய்தியைப் பதிவு செய்தது. இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியாவின் தற்காப்புத் திறன் உலக நாடுகளால் பெரிதும் பாராட்டப்பட்டது.
இந்தப் போரில் இந்திய ராணுவத்திடம் தோல்வியடைந்த பிறகு, பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் மற்றும் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் தங்கள் நாட்டு மக்களின் கோபத்தைத் தணிக்க, "இந்தியாவின் ரஃபேல் போர் விமானத்தை நாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டோம்" என்று பொய்ப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். ஆனால், பாகிஸ்தானின் இந்த ஆதாரமற்ற குற்றச்சாட்டை இந்தியா திட்டவட்டமாக மறுத்தது.
இந்திய விமானப்படையின் 'டிகோய்' தொழில்நுட்பம்!
இந்நிலையில், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி இந்திய விமானப்படை எவ்வாறு அதிரடியாகத் தாக்குதல் நடத்தியது என்பது குறித்த உண்மைகளை அமெரிக்காவின் முன்னாள் எஃப்-15இ (F-15E) போர் விமானி ரையன் போடன்கெய்மர் தற்போது வெளிப்படுத்தியுள்ளார். ஏஎன்ஐ (ANI) செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
"இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியது. பாகிஸ்தான் தரப்பில் தாங்கள் இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்திவிட்டதாகக் காட்டப்பட்ட புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை போர் விமானங்கள் அல்ல, மாறாக போர் விமானங்கள் எரிபொருள் தீர்ந்ததும் கழற்றி எறியும் 'டிராப் டேங்க்' (Drop tanks) என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. வான்வழிப் போரின்போது இத்தகைய உத்திகளைப் பயன்படுத்துவது வழக்கம். இந்த 'டிகோய்' தொழில்நுட்பத்தை இந்தியா மிகவும் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்தி பாகிஸ்தானை ஏமாற்றியுள்ளது," என்று தெரிவித்தார்.
ரஃபேல் வீழ்த்தப்படவில்லை !
பிரான்ஸ் தயாரிப்பான ரஃபேல் போர் விமானத்தைப் புகழ்ந்து பேசிய ரையன், "ரஃபேல் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் அதிநவீன போர் விமானமாகும். எனது ஆய்வில், பாகிஸ்தான் ஒரு ரஃபேல் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக நம்பினாலும், உண்மையில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது உறுதியாகிறது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தியா பெரும் பலனைப் பெற்றுள்ளது," என்று கூறினார்.
'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்குப் பிறகு, பாகிஸ்தான் முன்வைத்த எந்தக் குற்றச்சாட்டையும் உலக நாடுகள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரிப் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப் ஆகியோரின் கூற்றுகள் அனைத்தும் பொய்யானவை என்பது நிரூபணமானது. பாகிஸ்தான் இழந்த விமானங்களின் எண்ணிக்கையை மறைத்து, வீழ்த்தியதாகப் பொய் கணக்கு காட்டியது உலக அளவில் அம்பலமானது. அதேவேளையில், இந்தியா பாகிஸ்தானின் பல போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியதாக இந்திய விமானப்படைத் தளபதி உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
























