வெளியேறிய 100+ விஞ்ஞானிகள்... முடங்கும் முக்கிய திட்டங்கள்? பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
ISRO Crisis: "இஸ்ரோவில் தொடரும் விஞ்ஞானிகளின் விலகல், விண்வெளித் திட்டங்களை செயல்படுத்துவதில் முடக்கம்."

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோவில் பணியாற்றி வந்த முதன்மை விஞ்ஞானிகள் பலர் அடுத்தடுத்து தங்களது பணியை ராஜினாமா செய்து வெளியேறி வருவது பெருத்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட முக்கிய விஞ்ஞானிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். மேலும், சமீபகாலமாக கணக்கிடுகையில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட திறமைமிக்க பணியாளர்கள் வெளியேறியிருப்பதாகக் கூறப்படுகிறது. இது இஸ்ரோவின் மொத்தப் பணியாளர்களின் எண்ணிக்கையில் சுமார் 25 சதவீதமாகும். இந்த திடீர் இழப்பால், இஸ்ரோ திட்டமிட்டுள்ள பல்வேறு விண்வெளி ஆராய்ச்சிகளை குறித்த காலத்தில் செயல்படுத்த முடியாமல் பெரும் சிக்கல்கள் உருவாகியுள்ளன.
தனியார் துறையின் எழுச்சியும் ஈர்ப்பும்
கடந்த 2020-ஆம் ஆண்டில் மத்திய அரசு கொண்டுவந்த விண்வெளித் துறை விதிகளின் மாற்றங்கள், தனியார் நிறுவனங்களும் விண்வெளி ஆராய்ச்சியில் களமிறங்க வழிவகுத்தது. இதன் விளைவாக 'ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ்' உள்ளிட்ட 400-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் இத்துறையில் தீவிரமாக இறங்கியுள்ளன. ராக்கெட் வடிவமைப்பு, செயற்கைக்கோள் கட்டமைப்பு மற்றும் உந்துவிசைத் தொழில்நுட்பங்களில் வேகமான வளர்ச்சியை எட்டி வரும் இந்த நிறுவனங்களுக்கு, அனுபவமும் திறமையும் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் தேவைப்படுகின்றனர்.
பணிக்குச் சேர்ந்த உடனேயே பெரிய திட்டங்களுக்குத் தலைமை தாங்கும் வாய்ப்பு, பல மடங்கு அதிக ஊதியம் மற்றும் ஈர்க்கக்கூடிய சலுகைகளைத் தனியார் நிறுவனங்கள் வழங்குவதால், சுதந்திரமாகச் சாதிக்கத் துடிக்கும் இளம் விஞ்ஞானிகள் இஸ்ரோவை விட்டு விலகி தனியார் பக்கம் கவனம் செலுத்துகின்றனர். மேலும், ஓய்வுபெற்ற மூத்த விஞ்ஞானிகளும் இதுபோன்ற புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு ஆலோசகர்களாகவும் வழிகாட்டிகளாகவும் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
முடங்கும் திட்டங்களும் மத்திய அரசின் நடவடிக்கையும்
வல்லுநர்கள் மற்றும் ஊழியர்களின் இந்தத் தொடர் வெளியேற்றத்தால், இஸ்ரோவின் பல முக்கியத் திட்டங்கள் காலதாமதமாகி வருகின்றன. ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த 10-க்கும் மேற்பட்ட முக்கிய ஆராய்ச்சிகள் கைவிடப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், நடப்பு ஆண்டிற்குள் ஏழு விண்கலங்கள் மற்றும் ஆறு செயற்கைக்கோள்களை இறுதி செய்து விண்ணில் ஏவும் கட்டாயச் சூழலில் இஸ்ரோ இயங்கி வருகிறது. அதோடு, குலசேகரப்பட்டினத்தில் அமையவுள்ள புதிய விண்வெளி நிலையப் பணிகள் இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளதால், அங்கிருந்து சிறிய ரக ஏவுகணைகளை ஏவும் சோதனைகளும் நடைபெற வேண்டியுள்ளன. எனவே, இந்த அத்தியாவசியப் பணிகள் எவ்விதப் பாதிப்பும் இன்றி தொடர்வதற்காக, விஞ்ஞானிகளின் ராஜினாமாக்கள் மற்றும் விருப்ப ஓய்வு முடிவுகளுக்கு மத்திய அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















