Anurag Thakur: மல்யுத்த சம்மேளன விவகாரம் : “சொல்றதுக்கு ஒன்னுமில்லை” - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பதிலால் அதிர்ச்சி
Anurag Thakur: மல்யுத்த வீராங்கனைகள் பிரச்னை தொடர்பான கேள்விக்கு மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் அளித்த பதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
![Anurag Thakur: மல்யுத்த சம்மேளன விவகாரம் : “சொல்றதுக்கு ஒன்னுமில்லை” - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பதிலால் அதிர்ச்சி I've Already Spoken Enough' Sports Minister Anurag Thakur comment Amid Wrestling Federation Row Anurag Thakur: மல்யுத்த சம்மேளன விவகாரம் : “சொல்றதுக்கு ஒன்னுமில்லை” - மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பதிலால் அதிர்ச்சி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/24/6f102b32b640193785d0c4de78ec5d0f1703384375366732_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Anurag Thakur: மல்யுத்த வீராங்கனைகள் பிரச்னை தொடர்பாக இனி பேசுவதற்கு ஒன்றுமில்லை என, மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பதில் அளித்துள்ளார்.
மல்யுத்த சம்மேளன பிரச்னை:
பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், மல்யுத்த சம்மேளன தலைவருமான ப்ரிஜ் பூஷன் சிங், வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக நடப்பாண்டு தொடக்கத்தில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், பிரிஜ் பூஷன் சிங் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் சாக்ஷி மாலிக் உள்ளிட்ட பல வீரர், வீராங்கனைகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மல்யுத்த சம்மேளனத்திற்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும், அதில் பிரிஜ் பூஷன் சிங் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் யாரும் போட்டியிடக்கூடாது எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பிரிஜ் பூஷன் சிங்கின் நெருங்கிய நண்பர், மல்யுத்த சம்மேளன தலைவராக தேர்வு செய்யப்பட்டார். இதன் காரணமாக மல்யுத்த போட்டிகளில் இருந்து விலகுவதாக ஆசிய போட்டிகளில் பதக்கம் வென்ற சாக்ஷி மாலிக் அறிவிக்க, மத்திய அரசு வழங்கிய பத்ம ஸ்ரீ விருதை திருப்பி அளிப்பதாக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற பஜ்ரங் பூனியாவும் அறிவித்தார். இது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
”சொல்வதற்கு ஒன்றுமில்லை” - அனுராக் தாகூர்:
இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மத்திய விளையாட்டு அமைச்சர் அனுராக் தாகூரிடம், மல்யுத்த சம்மேளன் பிரச்னை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “இந்த விவகாரம் தொடர்பாக நான் ஏற்கனவே பேசியது போதும். இதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நமது விளையாட்டு வீரர்கள் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் (ஹாங்சோ) மற்றும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளிலும் 100க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றுள்ளனர். இந்தக் கதைகள் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் புறப்படுவதற்கு முன் (ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கு) 100 பதக்கங்களை கடக்க முடியுமா என்று நான் அவர்களிடம் கேட்டேன், அவர்கள் கூட்டாக நம்பிக்கையை வெளிப்படுத்தினர், அவர்களும் அதைச் செய்தார்கள். நாங்கள் பல முக்கிய நிகழ்வுகளில் வெற்றி பெற்றுள்ளோம். நாங்கள் கடந்த ஆண்டு முதல் தாமஸ் கோப்பையை வென்றோம், மேலும் ஹாக்கி, தடகளம் மற்றும் பிற நிகழ்வுகளிலும் நாங்கள் நிறைய வெற்றிகளைக் கண்டோம். இப்போது, சாம்பியன்கள் அவர்கள் அறிவையும் அனுபவத்தையும் வரவிருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு வழங்குவதை உறுதிசெய்ய வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் இந்த முயற்சியை சிறப்பாகச் செய்ய முடியும்” என கூறினார்.
கடும் எதிர்ப்பு:
மத்திய அமைச்சரின் இந்த பதிலுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். வீரர், வீரங்கனைகளின் வெற்றிகளை மட்டும் பேச வேண்டும், ஆனால் அவர்களின் பிரச்னையை பற்றி பேசமாட்டேன் என்பது என்ன மாதிரியான மனநிலை என சமூக வலைதளங்களில் பலரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். விளையாட்டு வீரர்களால் கிடைக்கும் கவுரவத்தை தங்களது வெற்றிகளாக பேசிக்கொள்ளும் அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்களின் பாதுகாப்பில் ஆர்வம் செலுத்தாதது ஏன் எனவும் பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)