கோவையில் ரம்ஜான் தொழுகை: போர் நிறுத்தம் வேண்டி சிறப்பு பிரார்த்தனை
ரம்ஜான் முன்னிட்டு கோவையில் சிறப்பு தொழுகை – உலக அமைதிக்காக முஸ்லிம்கள் பிரார்த்தனை

கோவை மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில், உலக நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் நீங்கி அமைதி நிலவ வேண்டும் என இஸ்லாமியர்கள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் புனித மாதமாகக் கருதப்படும் ரம்ஜான் மாதத்தில், முஸ்லிம்கள் 30 நாட்கள் நோன்பு இருந்து இறை வழிபாட்டில் ஈடுபடுவது வழக்கம். இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், நன்மைகள் பல மடங்கு கிடைக்கும் காலமாகவும், சொர்க்க வாசல்கள் திறக்கப்படும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் நம்புகின்றனர். அதனால் ரம்ஜான் மாதம் முழுவதும் நோன்பு இருந்து, இறுதியில் ஈதுல் பித்ர் (ரம்ஜான் பெருநாள்) பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர்.
இந்த நிலையில், ஈகைத் திருநாள் எனப்படும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைபுதூர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இந்த தொழுகையில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு தொழுகை நடத்தினர். அப்போது உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் போர்கள் நிறுத்தப்பட்டு, உலக நாடுகளில் அமைதி நிலவ வேண்டும் என்றும், மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ வேண்டும் என்றும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது.
மேலும், தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் புத்தாடைகள் அணிந்து உற்சாகமாக கலந்து கொண்டனர். தொழுகை நிறைவடைந்த பிறகு, ஒருவருக்கொருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டு மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு கோவை நகரின் பல பகுதிகளிலும் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.























