Coimbatore Accident : கோவையில் பரபரப்பு.. இரயில் மோதி காட்டு யானை உயிரிழப்பு.. தொடரும் சோகம்
இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை மற்றும் குட்டி யானை மீது ரயில் மோதியது. இதில் பெண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.

கோவை அருகே ரயில் மோதி 20 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உயிரிழந்தது. காயத்துடன் தப்பிய குட்டி யானைக்கு சிகிச்சை அளிக்க வனத்துறை முடிவு செய்துள்ளனர்.
தமிழ்நாட்டில் இருந்து கேரள மாநிலத்திற்கு கோவை வழியாக நாள்தோறும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் இருந்து கேரள மாநிலம் வாளையார் வரையிலான 12 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதி வழியாக ரயில் பாதை செல்கிறது. இப்பகுதியில் உள்ள தண்டவாளத்தை கடக்கும் காட்டு யானைகள் ரயில் மோதி உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. இதேபோல கேரள மாநிலத்திற்குள் வாளையார் முதல் பாலக்காடு வரையிலான இரயில் பாதையிலும் அவ்வப்போது இரயில் மோதி காட்டு யானைகள் உயிரிழப்பது நடந்து வருகிறது.

இதனைத் தடுக்க இரயில்வே நிர்வாகம் மற்றும் வனத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும், இரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து வருகிறது. வனப்பகுதிகளை ஒட்டியுள்ள இரயில் பாதையில் வேகமாக இரயிலை ஒட்டக்கூடாது என அறிவுறுத்தப்பட்டு இருந்தாலும், இரவு நேரங்களில் இரயில்களை வேகமாக இயக்கி வருவதால் இந்த விபத்துகள் தொடர்ந்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக எல்லையான வாளையாறு அருகே ரயில் மோதியதில் 3 காட்டு யானைகள் உயிரிழந்தது. இதனை அடுத்து யானைகளின் நடமாடத்தை கண்டறியும் வகையில் வனத்துறை மற்றும் ரயில்வே துறை சார்பில் ரயில் பாதைகளில் கண்காணிப்பு கேமரா பொறுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் வாளையார் கஞ்சிக்கோடு இடையே கொட்டாம்பட்டி என்ற இடத்தில் நேற்று இரவு 17 யானைகள் கொண்ட ஒரு காட்டு யானைக் கூட்டம் வந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று அதிகாலை 3.40 மணியளவில் இந்த யானை கூட்டம் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளது. அப்போது கன்னியாகுமரியில் இருந்து அசாமை நோக்கி சென்ற விவேக் எக்ஸ்பிரஸ் என்ற ரயில் வந்துள்ளது. அந்த இரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சுமார் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை மற்றும் குட்டி யானை மீது ரயில் மோதியது. இதில் பெண் யானை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து ரயில்வே துறையினருக்கும், வனத்துறையினருக்கும் ரயில் ஓட்டுனர்கள் தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானை மீது ரயில் மோதிய விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயத்துடன் வனப்பகுதிக்குள் சென்ற குட்டி யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். அந்த குட்டி யானை கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் அதற்கு சிகிச்சை அளிக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் ரயில்கள் மோதி யானைகள் உயிரிழந்து வருவது சூழல் ஆர்வலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Before You Go
Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
ட்ரெண்டிங் செய்திகள்






















