Crime: கணவன் கண்முன்னே மனைவிக்கு பாலியல் வன்கொடுமை! திருப்பூரில் அநியாயம்!
திருப்பூரில் கணவனை கட்டிப்போட்டு மனைவியை 3 பேர் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக அரங்கேறும் பாலியல் குற்றச்சம்பவங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில், திருப்பூரில் நடந்த சம்பவம் மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஒடிசாவைச் சேர்ந்த பெண்:
தமிழ்நாட்டில் அதிகளவு வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஒடிசாவில் இருந்து கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் ஒரு குடும்பத்தினர் தமிழ்நாட்டிற்கு வேலைக்காக வந்துள்ளனர்.
நடந்தது என்ன?
அவர்கள் திருப்பூரில் இருந்து கோவைக்கு வேலைக்குச் சென்றுள்ளனர். கோவையில் வேலை பார்த்த அவர்கள் வேலை பிடிக்காத காரணத்தால் ஒடிசாவிற்கு மீண்டும் சென்று விடலாம் என்று முடிவு செய்துள்ளனர். இதற்காக திருப்பூரில் அவர்கள் காத்திருந்துள்ளனர். இந்த நிலையில், திருப்பூரில் அவர்களுக்கு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நதீம், டானிஸ், முர்ஷீக் ஆகிய 3 பேர் அறிமுகமாகியுள்ளனர்.
அவர்கள் தாங்கள் வேலை வாங்கித் தருவதாக அந்த குடும்பத்தினருக்கு உத்தரவாதம் அளித்துள்ளனர். அவர்களது வார்த்தையை நம்பிய அந்த குடும்பத்தினர் அவர்களுடன் சென்றுள்ளனர். அப்போது, பீகாரைச் சேர்ந்த அவர்கள் 3 பேரும் அந்த குடும்பத்தினருக்கு தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்துள்ளனர்.
கணவன் கண்முன் நடந்த கொடூரம்:
இந்த நிலையில், இரவில் நதீம், டானிஸ், முர்ஷீக் 3 பேரும் இணைந்து கத்தியை காட்டி அந்த குடும்பத்தினரை மிரட்டியுள்ளனர். பின்னர், அந்த பெண்ணின் கணவரை கட்டிப்போட்டு அவரது முன்னே அவர்கள் 3 பேரும் இணைந்து அவரது மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த விவகாரம் தற்போது வெளியில் வந்துள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பீகாரைச் சேர்ந்த நதீம், டானிஸ், முர்ஷீக் ஆகிய 3 பேரையும் கைது செய்துள்ளனர். திருப்பூரில் வட மாநில பெண்ணுக்கு வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களாலே பாலியல் வன்கொடுமை அரங்கேறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து அரங்கேறும் அவலம்:
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாவே பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக அரங்கேறும் பாலியல் சம்பவங்கள் மக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி வருகிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை, இசிஆர் சாலையில் இளம்பெண்களை இளைஞர்கள் காரில் துரத்திய விவகாரம், பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் என அடுத்தடுத்து அச்சுறுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலில் தற்போது திருப்பூரில் மற்றொரு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடைபெறாத வகையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

