Nagercoil Sabarivarman :நாகர்கோவில் விசாரணை கைதி திடீர் மரணம்.! பிரேதப் பரிசோதனையில் வெளியான ஷாக் தகவல்- நடந்தது என்ன.?
Sabarivarman post-mortem report : சிறையில் மரணம் அடைந்த சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் தலையில் 2 இடங்களில், இடது நெஞ்சின் கீழ்ப்பகுதியில் 7 செ.மீட்டர் அளவில் காயம் உள்ளதாக பிரேதபரிசோதனை அறிக்கையில் கண்டறியப்பட்டது.

சிறையில் மாற்றுத்திறனாளி இளைஞர் மரணம்
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன், இவர் தனது வீட்டில் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். அப்போது கடையில் புகையிலை, குட்கா உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்து வந்ததாக கூறி தென் தாமரைக்குளம் காவலர்கள் சபரிவர்மனை விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டு கடந்த 9 ஆம் தேதி நாகர்கோவிலில் உள்ள கிளைச் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் கடந்த 13 ஆம் தேதி காலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த சபரிவர்மன் உயிரிழந்ததாக அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிறையில் இருந்த போது சபரிவர்மனுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதாகவும், இதனையடுத்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் போலீசார் சபரிவர்மனை அடித்து கொலை செய்துள்ளதாக அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சபரிவர்மன் உடலை பெற மாட்டோம் என தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
நீதிமன்றக்காவலில் மரணம்-உதயநிதி கேள்வி
இதனிடையே சபரிவர்மன் மரணம் தொடர்பாக எதிர்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வந்தது. எதிர்கட்சி தலைவர் உதயநிதி வெளியிட்ட பதிவில், நாகர்கோவிலைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞரான சபரிவர்மன் காவல்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்றக்காவலில் மரணம் அடைந்து இருப்பது அறிந்து அதிர்ச்சியுற்றேன். கைதானபோது நல்ல ஆரோக்கியத்துடன் இருந்த சபரிவர்மன், விசாரணை முடிந்து சிறையில் அடைக்கப்பட்ட போது, உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்படுகிறது.
ஆனால், மரணமடைந்த சபரிவர்மனின் உடல் முழுவதும் காயங்கள் இருந்ததாகவும், அவரை மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் காவல்துறையினர் அடித்தே கொலை செய்துள்ளதாகவும் சபரிவர்மனின் குடும்பத்தார் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதலமைச்சர் இதற்கு உரிய பதில் சொல்ல வேண்டும் என கேள்வி எழுப்பியிருந்தார்.
பிரதேப்பரிசோதனையில் ஷாக் தகவல்கள்
இந்த நிலையில் நேற்று சபரிவர்மனின் உடலை கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் பிரேதப் பரிசோதனை செய்தனர். இதன் முடிவில் ஷாக் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், மரணம் அடைந்த சபரிவர்மன் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தலையில் 2 இடங்களில் பலத்த காயமும், இடது நெஞ்சின் கீழ்ப்பகுதியில் 7 செ.மீட்டர் அளவில் காயம் உள்ளதும் கண்டறியப்பட்டது. அடுத்தாக பின்னந்தலை மற்றும் பின்னங்கழுத்து பகுதியிலும் காயங்கள் உள்ளதும் தெரியவந்துள்ளது. வலது கையில் 6 இடங்களிலும், இதே போல இரண்டு கால்களிலும் கடுமையான காயங்கள் இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.
3 போலீஸ் கைது
எனவே போலீசார் சபரிவர்மனை அடித்ததில் தான் உயிரழிந்த்தாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி வந்த நிலையில், நாகர்கோவில் சிறை தலைமை வார்டன் ஜெகன், வார்டன்கள் சிவகுமார் மற்றும் திருவிடைநம்பி ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















