கஞ்சா வழக்கில் பிடிபட்ட கைதி டியூப்லைட் சாப்பிட்டு தற்கொலை முயற்சி!
சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கிருந்த டியூப் லைட்டை உடைத்து சாப்பிட்டு, கையில் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் டியூப் லைட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த வாலிபரால் பரபரப்பு நிலவியது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் காவல்துறையினர் கஞ்சா விற்பதை முழுமையாக ஒழிப்பதற்கு "கஞ்சா 2.0" என்ற ஆபரேஷன் நடத்தி வருகிறது. சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து கஞ்சா ரயில்கள் மூலமாகவும், வாகனங்களின் மூலமாகவும் அதிக அளவு வந்து கொண்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்பவர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வருகின்றனர். சமீபத்தில் சேலம் வந்தார் தமிழகம் டிஜிபி சைலேந்திர பாபு சேலம் மாவட்டத்தில் கஞ்சா அதிகளவில் புழக்கத்தில் உள்ளதை காவல்துறையினர் கட்டுப்படுத்த வேண்டும் என்று கூறினார். கஞ்சா விற்பனையை தடுக்க தமிழக காவல்துறை சிறப்புக்குழு அமைத்துள்ளது.

அதன்படி சேலம் மாவட்டம் அம்மாபேட்டை நாம மலை பகுதியை சேர்ந்த ரவுடியான அருண் (30) என்பவரை சந்தேகத்தின் பெயரில் அம்மாபேட்டை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியுள்ளனர். விசாரணையில் முடிவில் அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக அவரை அம்மாபேட்டை காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து சேலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தயார் நிலையில் இருந்தபோது, சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கிருந்த டியூப் லைட்டை உடைத்து சாப்பிட்டு, கையில் குத்திக் கொண்டதாகத் தெரிகிறது. இதைப் பார்த்த அம்மாபேட்டை காவல்துறையினர் உடனடியாக அருணை மீட்டு சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர், அவசரப் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த அருணை சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையின் மருத்துவர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்வது குறித்து பரிசோதனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் இவருக்கு எப்படி கஞ்சா கிடைத்தது, யாருடன் தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் நிலையத்தில் கைதி டியூப் லைட் சாப்பிட்டு தற்கொலை செய்வதற்கு முயன்ற சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண் ; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050 , +91 44 2464 0060)























