புதுச்சேரியில் ஆன்லைன் மோசடி: 2.71 கோடி இழந்த ஆசிரம ஊழியர்! சைபர் கிரைம் விசாரணை தீவிரம்
புதுச்சேரியில் போலியாக உருவாக்கப்பட்ட பங்குச்சந்தையில் 2.71 கோடி ரூபாயை முதலீடு செய்த அரவிந்தர் ஆசிரம ஊழியர், பணத்தை இழந்தார்.

புதுச்சேரி: புதுச்சேரியில் போலியாக உருவாக்கப்பட்ட பங்குச்சந்தையில் 2.71 கோடி ரூபாயை முதலீடு செய்த அரவிந்தர் ஆசிரம ஊழியர், பணத்தை இழந்தார். இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
போலி பங்குச்சந்தையில் முதலீடு
புதுச்சேரி, குருசுக்குப்பத்தை சேர்ந்த 72 வயது நபர், ஆசிரமத்தில் பணியாற்றுகிறார். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது தொடர்பாக, ஆன்லைனில் அவரை தொடர்பு கொண்ட மர்ம நபர், முதலீடு செய்வதற்கான கம்ப்யூட்டர் இணைப்பு ஒன்றை அனுப்பினார்.
2.71 கோடி ரூபாய் மோசடி
அந்த இணைப்பு உண்மையானது தானா என யோசிக்காமல், பல தவணைகளாக, 2.71 கோடி ரூபாயை, அந்த நபர் முதலீடு செய்தார்.அதில், அவருக்கு பல கோடி ரூபாய் லாபம் வந்துள்ளதாக, போலியாக உருவாக்கப்பட்ட வங்கிக்கணக்கில் காட்டப்பட்டது. அந்த பணத்தை எடுக்க முயன்ற போது, முடியவில்லை. மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது குறித்து அவர் அளித்த புகாரில், புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
சைபர்கிரைம் புகார்
இதுகுறித்து சைபர்கிரைம் போலீசார் கூறுகையில், சமூக வலைதளங்களில் வரும் விளம்பரங்களின் உண்மை தன்மையை அறியாமல் பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். சைபர் குற்றம் சம்பந்தமாக 1930, 0413-2276144, 9489205246 எண்களில் புகார் அளிக்கலாம் என்றனர்.
விழிப்புணர்வு வேண்டும்... சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்
இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், ஆன்லைனில் பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது குறித்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். இருப்பினும் மக்கள் தொடர்ந்து ஏமாந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அறிமுகம் இல்லாத யாரிடமும் வங்கி கணக்கு எண்ணை தெரிவிப்பது, ஆதார் கார்டு எண்ணை கூறுவது போன்றவற்றை செய்ய வேண்டாம்.
அதேபோல் ஆன்லைனில் பணம் செலுத்தினால் உங்களுக்கு கடன் கிடைக்கும் என்று தெரிவித்து வரும் மெசேஜ்களை டெலிட் செய்து விடும்படியும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வாயிலாக தெரிவித்து வருகிறோம். இன்னும் மக்கள் முழுமையாக விழிப்புணர்வு அடையாமல் பணத்தை இழந்து வருகின்றனர்.
தங்களது வங்கி கணக்கில் இருந்த எந்த வகையிலும் மோசடி செய்யப்பட்டிருந்தால் 1930 என்ற எண்ணிற்கோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தின் மூலம் புகார் செய்வதன் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செல்போன் எண்ணுக்கு வரும் எவ்விதமான லிங்கையும் ஓப்பன் செய்யக்கூடாது.
வங்கி OTP எண் சொல்லாதீங்க
மேலும் வங்கி கணக்கு எண், ஓடிபி எண் போன்றவற்றையும் தெரிவிக்கக்கூடாது. மோசடி நடந்த உடன் சைபர் கிரைம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தால் மோசடியாக எடுக்கப்பட்ட பணத்தை முடக்க இயலும். மீட்கவும் இயலும். மேலும் ஆன்லைன் ஜாப், டாஸ்க் என்று பணம் கட்டும் எந்த செயல்களிலும் ஈடுபடக்கூடாது.
இதேபோல் ஆன்லைன் டிரேடிங் ஆப் என்று பல்வேறு வகையிலும் மோசடிகள் நடந்து வருகிறது. இதில் எந்த வகையிலும் மக்கள் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க மேற்கொள்ளப்படுகிறது. மக்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தனர்.





















