![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மயிலாடுதுறையில் இளம்பெண்ணை தாக்கியதாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு
மயிலாடுதுறையில் இளம்பெண்ணை தாக்கியதாக காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேர் மீது மயிலாடுதுறை போலீஸார் பெண்கள் வன்கொடுமை தடுப்புச்சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
![மயிலாடுதுறையில் இளம்பெண்ணை தாக்கியதாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு Mayiladuthurai: case has been registered against the police inspector under 6 sections including the Prevention of Violence against Women Act TNN மயிலாடுதுறையில் இளம்பெண்ணை தாக்கியதாக காவல் ஆய்வாளர் மீது வழக்குப் பதிவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/10/28/f4a561b7a7f71a2d44d19a546d345d6a1666938498359186_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே செருதியூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குமார் என்பவரின் மகள் 25 வயதான அபிராமி. இவர், மயிலாடுதுறை மூங்கில்தோட்டம் கன்னித்தோப்புத் தெருவைச் சேர்ந்த விஜயேந்திரன் - புஷ்பவல்லி தம்பதியினரின் மகன் வினோத்குமார் என்பவரை கடந்த 2017 -ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துள்ளார். அதன்பின்னர், கணவர் வினோத்குமார், மாமியார் புஷ்பவல்லி மற்றும் குடும்பத்தினர் அபிராமியை அடிக்கடி வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால், வினோத்குமாரை பிரிந்து, சென்னை சென்று அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்துவந்த அபிராமி, தீபாவளி பண்டிகைக்காக கடந்த வாரம் மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் குஞ்சிதபாதம் நகரில் உள்ள தனது தந்தையின் நண்பர் மணிவண்ணன் வீட்டுக்கு வந்து தங்கியிருந்துள்ளார். இதுகுறித்து, தகவலறிந்த வினோத்குமார் அபிராமியை வீட்டிற்கு அழைத்துள்ளார். அபிராமி மறுப்பு தெரிவித்ததால் கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து வினாத்குமார் அவரது தாயார் புஷ்பவல்லி, புஷ்பவல்லியின் நட்பில் உள்ள நாகை பிசிஆரில் (சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு) காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், புஷ்பவல்லியின் மருமகன் கார்த்திக், மகள் திவ்யா ஆகிய 5 பேர் குஞ்சிதபாதம் நகர் சென்று அபிராமியிடம் தகராறு செய்து வரதட்சனை கேட்டு தாக்கியதாக மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அபிராமி புகார் அளித்தார்.
அந்த புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல்துறையினர் வினோத்குமார் காவல் ஆய்வாளர் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட 5 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், 147, 294(டி), 323, 354, 498 (யு) உள்ளிட்ட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் விசாரணை மேற்கொண்டு வருகிறார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றிவரும் ராதாகிருஷ்ணன் மயிலாடுதுறை, மணல்மேடு காவல், நாகூர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் காவல் ஆய்வாளாராக பணியாற்றியவர் என்பதும், தற்போது மருத்துவ விடுப்பில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மணல்மேடு அருகே கஞ்சா மற்றும் கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபடுவதாக 6 இளைஞர்கள் மீது மணல்மேடு காவல்நிலையத்தில் கிராமமக்கள் புகார் மனு!
மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அருகே பட்டவர்த்தி காந்திநகர் பகுதியில் 6 இளைஞர்கள் கஞ்சா மற்றும் கள்ளச்சாரயாம் விற்பனை செய்வதும், இரவு நேரத்தில் சாலையில் அமர்ந்துகொண்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்வதும், காலிமதுபாட்டில்களை சாலையில் போட்டு உடைப்பதும் வாடிக்கையாக இருந்து வந்துள்ளது. இது தொடர்பாக கிராம தலைவர் உள்ளிட்டோர் கேட்டால் அவர்களை தனித்தனியாக மிரட்டுவதும், அவர்களுக்கு பல்வேறு வகையில் இடைஞ்சல்களை கொடுத்து வந்துள்ளனர்.
மேலும் இவர்கள் கிராமத்தில் ஆளும் சமுதாயக்கூடம் மற்றும் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை பயன்படுத்தி போதைப்பொருள் வியாபாரம் செய்துவருவதாகவும் இதனை எதிர்த்துக் கேட்கும் ஊர்மக்களை அரிவாளைக்காட்டி கொலை மிரட்டல் விடுத்துவந்துள்ளனர், இதனால் பாதிக்கப்பட்ட கிராமமக்கள் ஒன்று திரண்டு மணல்மேடு காவல்நிலையம் சென்று போதைப்பொருள் விற்பனை செய்யும் 6 இளைஞர்களைக் கைதுசெய்யது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர். புகாரை பெற்றுக்கொண்ட மணல்மேடு காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)