வங்கிகளில் அதிகரிக்கும் மோசடி: அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள்! கடன் மோசடி உச்சம், உங்கள் பணம் பாதுகாப்பானதா?
ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி, 2024-25 நிதியாண்டில் மோசடிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு அதிகரித்துள்ளது.
சென்ற சில ஆண்டுகளாகவே இந்திய வங்கிகளில் பண மோசடிகள் அதிகரித்துள்ளன. 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் வங்கிகள் 5,092 மோசடிகளைப் புகாரளித்துள்ளன. இதன் மதிப்பு ரூ. 21,515 கோடியாகும். இதில் பெரும்பாலானவை கடன் மோசடிகள் ஆகும். இந்த விவரங்கள் ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலமாகத் தெரியவந்துள்ளது. கடந்த 2024-25 நிதியாண்டின் முதல் பாதியில் வங்கிகள் மொத்தம் 18,386 மோசடிகளைப் புகாரளித்தன. அதன் மதிப்பு ரூ. 16,569 கோடியாகும்.
ரிசர்வ் வங்கியின் அறிக்கைப்படி, 2024-25 நிதியாண்டில் மோசடிகளின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும், மோசடி செய்யப்பட்ட பணத்தின் அளவு அதிகரித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் 122 மோசடி வழக்குகளை மீண்டும் ஆய்வு செய்து ரூ. 18,336 கோடி மதிப்பிலான மோசடிகளைப் புதிதாகப் புகாரளித்ததுதான் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மோசடிகள் நடந்த தேதியின் அடிப்படையில் பார்த்தால், 2024-25 நிதியாண்டில் மொத்த மோசடிகளில் 66.8 சதவீத மோசடிகள் கார்டு மற்றும் இணையதள மோசடிகளாகும். மதிப்பு அடிப்படையில் பார்த்தால், கடன் தொடர்பான மோசடிகள் 33.1 சதவீதமாக இருக்கிறது. 2024-25 நிதியாண்டில் தனியார் துறை வங்கிகள் புகாரளிக்கப்பட்ட மொத்த மோசடிகளில் 59 சதவீத பங்களிப்பைக் கொண்டுள்ளன.
அதேநேரம், பொதுத்துறை வங்கிகள் மோசடி செய்யப்பட்ட பணத்தில் 70.7 சதவீத பங்குகளைக் கொண்டிருந்தன. தனியார் வங்கிகளில் கார்டு மற்றும் இணையதள மோசடிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தன. ஆனால், கடன் தொடர்பான மோசடிகள் பண மதிப்பில் அதிகமாக இருந்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் கடன் தொடர்பான மோசடிகள் எண்ணிக்கையிலும், பண அளவிலும் அதிகமாக இருந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.
2024-25 நிதியாண்டில் அனைத்து வங்கி குழுக்களிலும் கார்டு அல்லது இணையதள மோசடிகளின் பங்கு எண்ணிக்கை மற்றும் பண அளவு இரண்டிலும் குறைந்துள்ளது. கடன் தொடர்பான மோசடிகளின் பங்கு , எண்ணிக்கை மற்றும் பண அளவு இரண்டிலும் அனைத்து வங்கி குழுக்களிலும் அதிகரித்துள்ளது (பொதுத்துறை வங்கிகளின் பண அளவைத் தவிர). இதற்கு முக்கிய காரணம், மீண்டும் வகைப்படுத்தப்பட்ட மோசடிகளில் கணிசமான பகுதி கடன்களுடன் தொடர்புடையதாக இருந்ததாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
அதாவது, வங்கிகளில் நடக்கும் மோசடிகளின் எண்ணிக்கை குறைந்தாலும், மோசடி செய்யப்படும் பணத்தின் அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கடன் மோசடிகள் மற்றும் இணையதள மோசடிகள் அதிகமாக நடக்கின்றன. பொதுத்துறை வங்கிகளை விட தனியார் வங்கிகளில் மோசடிகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும், பொதுத்துறை வங்கிகளில் மோசடி செய்யப்படும் பணத்தின் அளவு அதிகமாக உள்ளது. ரிசர்வ் வங்கி இந்த மோசடிகளைக் கட்டுப்படுத்த தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்கள் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகமாக செய்து வருவதால் அதில் மோசடிகளும் அதிகமாக நடைபெறுகின்றன. மோசடிகள் குறித்து வங்கிகளும் ரிசர்வ் வங்கியும் மக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை செய்து வருகின்றன. ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் மோசடிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.





















