திருவண்ணாமலையில் திமுக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: கார் தீயில் சேதம்
திருவண்ணாமலையில் திமுக தொண்டர் அணி நகர துணை அமைப்பாளர் வீட்டில் இரண்டு இளைஞர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் தீயில் சேதமடைந்துள்ளது.

திருவண்ணாமலையில் திமுக தொண்டர் அணி நகர துணை அமைப்பாளர் வீட்டில் இரண்டு இளைஞர்கள் பெட்ரோல் குண்டு வீசியதில் கார் தீயில் சேதமடைந்துள்ளது.
திருவண்ணாமலை நகரில் உள்ள சாரோன் பகுதியில் உள்ள கரையான்செட்டி தெருவில் வசித்து வரும் தொழிலதிபர் சங்கர் வயது (45). இவர் திமுகவில் திருவண்ணாமலை நகர துணை அமைப்பாளராக பதவி வகித்து கொண்டு பைனான்ஸ் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இதில் சங்கர் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் நடத்தி வருவதால் இவருக்கு மறைமுகமாக எதிரிகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதில் திமுக பிரமுகர் சங்கர் மீது உள்ள முன் விரோதம் காரணமாக நள்ளிரவு ஒரு மணி அளவில் முகத்தில் மாஸ்க் அனிந்த மர்ம நபர்கள் சங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனால் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மளமளவென தீப்பற்றி எறிந்து கொண்டிருந்த சத்தம் கேட்டும் மற்றும் கரும்புகை ஆகியவை வெளியே வர துவங்கியதை அறிந்த வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் வெளியே வந்து பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் தீயை தண்ணீர் ஊற்றி அனைத்துள்ளனர். ஆனால் காரின் இருக்கைகள், கதவு பகுதிகள் எரிந்து கருகியது. அதன் பிறகு அக்கம் பக்கத்தில் இருந்த நபர்கள் ஓடிவந்து சங்கர் வீட்டில் பார்த்தனர்.

இதுகுறித்து அவர்களிடம் சங்கர் விசாரணை நடத்தினார். இது குறித்து சங்கர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வரவில்லை. அதனைத்தொடர்ந்து நள்ளிரவு சரியாக ஒரு மணி அளவில் இரண்டு நபர்கள் சங்கர் வீட்டின் முன்பு வந்து பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடும் சிசிடிவி வீடியோ பதிவு திமுக பிரமுகர் எதிர் வீட்டில் பொறுத்தி வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இந்த வீடியோவும் வெளியாகி உள்ளது. நள்ளிரவு ஒரு மணி அளவில் நடைபெற்ற பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வராமல் இருந்தனர். ஆனால் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியான தகவல் அறிந்து ஏழு மணி நேரம் கழித்து காவல்துறையினர் விசாரணைக்காக தற்போது வந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கடந்த 12 ஆம் தேதி நள்ளிரவு திருவண்ணாமலையில் நான்கு இடங்களில் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் ரூ.75 இலட்சம் பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது திமுக பிரமுகர் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் மேலும் பொதுமக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.





















