G Pay Pocket Money: ஜிபேயில் பாக்கெட் மணி அம்சம் அறிமுகம்; டிஜிட்டல் பர்ஸ், பெற்றோருக்கு பெஸ்ட்- எப்படி?
பெற்றோர்கள் தங்களது கூகுள் பே செயலி மூலமாகவே, தங்கள் பிள்ளைகளுக்கென ஒரு பிரத்யேக கணக்கை உருவாக்கலாம். இதற்காக சிறுவர்களுக்கு தனியாக வங்கி கணக்கு எதுவும் தேவையில்லை.

Gpay-ன் புதிய அம்சமாக Pocket money அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது UPI CIRCLE-ன் ஐகான் ஆகும். UPI Circle என்பது உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து, உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் அல்லது பெரியவர்கள் பணம் செலவு செய்ய நீங்கள் தரும் ஒரு டிஜிட்டல் அனுமதி ஆகும். இதில் உங்களின் நேசத்துக்கு உரியவர்களுக்கும் பணம் அனுப்பலாம்.
பெற்றோர்களுக்கு பலன்
பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு தினசரி அல்லது வாராந்திர செலவுகளுக்கு பாக்கெட் மணி கொடுப்பது எல்லா வீடுகளிலும் வழக்கமான ஒன்றுதான். முன்பு நூறு, ஐம்பது என ரூபாய் நோட்டுகளாக கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால், டீக்கடை முதல் தியேட்டர் வரை எங்கும் க்யூஆர் கோடு வந்துவிட்ட இந்த டிஜிட்டல் யுகத்தில், டீனேஜ் சிறுவர்களுக்கும் யுபிஐ வசதி அவசியம் ஆகிவிட்டது.
இதைக் கருத்தில் கொண்டு கூகுள் பே நிறுவனம் அறிமுகப்படுத்திய பாதுகாப்பான வசதிதான் இந்த சிறுவர்களுக்கான டிஜிட்டல் பாக்கெட் மணி. இது குறித்து விரிவாகப் பார்ப்போம்.
இது என்ன வசதி?
பொதுவாக 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் சுயமாக வங்கிக் கணக்கு தொடங்கி, யுபிஐ ஆப்ஸ்களைப் பயன்படுத்துவதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. இந்த இடைவெளியை நிரப்பவே, பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் பிள்ளைகள் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வகையில் இந்த வசதி வடிவமைக்கப்பட்டுள்ளது.
எப்படிச் செயல்படுகிறது?
இதன் மிகப்பெரிய சிறப்பம்சமே இதன் கட்டுப்பாட' முழுவதும் பெற்றோர்கள் கையில் இருப்பதுதான்.
பெற்றோர்கள் தங்களது கூகுள் பே செயலி மூலமாகவே, தங்கள் பிள்ளைகளுக்கென ஒரு பிரத்யேக கணக்கை உருவாக்கலாம். இதற்காக சிறுவர்களுக்கு தனியாக வங்கி கணக்கு எதுவும் தேவையில்லை. பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்தே சிறுவர்களின் ஜிபே கணக்கிற்கு பாக்கெட் மணியை அனுப்ப முடியும்.
பெற்றோர்களுக்கு இதில் உள்ள நிம்மதி என்ன?
கையில் பணமாக கொடுக்கும்போது, பிள்ளைகள் அதை எதற்கு செலவு செய்தார்கள் என்பது பல நேரங்களில் பெற்றோருக்குத் தெரியாது. ஆனால், இந்த டிஜிட்டல் பாக்கெட் மணி முறையில் பல பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
- செலவு வரம்பு: குழந்தைகள் ஒரு நாளைக்கு அல்லது ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் இவ்வளவுதான் செலவு செய்ய முடியும் என பெற்றோர்களே ஒரு வரம்பை செட் செய்ய முடியும்.
- கண்காணிப்பு: உங்கள் பிள்ளை எந்த கடையில், எதற்காக, எவ்வளவு பணம் செலவு செய்கிறார் என்ற மெசேஜ் உடனுக்குடன் பெற்றோரின் மொபைலுக்கு வந்துவிடும்.
- பாதுகாப்பு: தேவையற்ற அல்லது சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் நடந்தால், உடனடியாக பெற்றோர்கள் தங்கள் மொபைல் மூலமாகவே பிள்ளைகளின் கணக்கை முடக்கிவிட முடியும்.
என்ன பயன்?
பிள்ளைகள் பணத்தை எங்கே தொலைத்துவிடுவார்களோ என்ற அச்சம் இனி பெற்றோருக்குத் தேவையில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சிறு வயதிலேயே பணத்தை எப்படி திட்டமிட்டுச் செலவு செய்ய வேண்டும் என்ற நிதி மேலாண்மையை பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்க இது ஒரு சிறந்த வழியாகும்.
சுருக்கமாகச் சொல்லப்போனால், பிள்ளைகளுக்குப் போதுமான டிஜிட்டல் சுதந்திரத்தைக் கொடுக்கும் அதே வேளையில், அவர்கள் தவறான வழியில் செலவு செய்துவிடக் கூடாது என்பதற்காக பெற்றோரின் கையில் லகானைக் கொடுக்கிறது இந்த ஜிபே பாக்கெட் மணி வசதி.
























