Ambassador Car: அம்பாசிடர் ஆண்டது தெரியும்..! ஆணவத்தில் அழிந்தது எப்படி என தெரியுமா? அவ்ளோ பெஸ்ட் காரா?
Ambassador Car: இந்திய சாலைகளில் கார் பிரிவின் மன்னனாக வலம் வந்த அம்பாசிடர் கார் மாடல், ஆணவத்தில் அழிந்தது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

Ambassador car: இந்திய சாலைகளில் கார் பிரிவின் மன்னனாக வலம் வந்த அம்பாசிடர் கார் மாடல், விற்பனையில் இருந்தே ஒழிந்ததற்கான காரணங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
அம்பாசிடர் காரின் ஆதிக்கம்..
இந்திய வரலாற்றில் ஒரு காலத்தில் நடுத்தர மக்கள் தொடங்கி நாட்டின் பிரதமர் வரையில், அனைவருக்குமான ஒற்றுமையாக இருந்த கார் மாடல் தான் அம்பாசிடர். பெரிய அரசியல் தலைவர்கள், பணக்காரர்கள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் உயரதிகாரிகள் மட்டுமின்றி தனிநபர் பயன்பாடு மற்றும் வாடகை கார் என அனைத்து பிரிவிலும் அம்பாசிடர் கார் மாடல் ஆதிக்கம் செலுத்தியது. 1980-81 காலகட்டத்தில் நாட்டின் கார் சந்தையில் சுமார் 71 சதவிகிதத்தை இந்த ஒரே ஒரு கார் மாடல் மட்டுமே ஆக்கிரமித்து இருந்தது. ஆனால், 2014ல் இந்த சந்தை பங்களிப்பானது வெறும் 0.12 சதவிகிதமாக வீழ்ந்தது. இந்திய கார் சந்தையின் ராஜாவாக இருந்த அம்பாசிடர் உற்பத்தியையே நிறுத்தும் அளவிற்கு வீழ்ச்சி கண்டது எப்படி என உங்களுக்கு தெரியுமா?
இந்திய கார் சந்தைக்கான அஸ்திவாரம்
சுதந்திரத்திற்கு முன்பாகவே ஃபோர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள், உள்ளூரிலேயே அசெம்பிள் செய்து கார்களை விற்று வந்தாலும், அதிகப்படியான விலை காரணமாக அது அனைத்து தர்ப்பினருக்குமானதாக இல்லை. மலிவு விலையில் நடுத்தர மக்களுக்கானதாக ஒரு காரை சந்தைப்படுத்த வேண்டும் என தீரா ஆசை கொண்டிருந்த தொழிலதிபரான பி.எம். பிர்லா கடும் போராட்டங்களுக்குப் பிறகு, மோரீஸ் மோட்டார் நிறுவனத்துடன் சேர்ந்து, இந்தியாவின் முதல் கார் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் 1942ம் ஆண்டு தொடங்கப்பட்டது. குஜராத்தில் உள்ள ஓகா துறைமுகத்தில் பல கார் மாடல்கள் அசெம்ப்ளி செய்து விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், போதிய உட்கட்டமைப்புகள் இல்லாததால் பல உதிரி பாகங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. இதனால் ஹிந்துஸ்தான் நிறுவனத்தின் கார்கள் விலையுயர்ந்ததாக இருந்தன.

நடுத்தர மக்களுக்கான கார்
இருப்பினும் தொடர் முயற்சிகளின் விளைவாக தங்களது கார் உற்பத்தி ஆலையை மேற்குவங்கத்தில் உள்ள உத்தரபாராவில் அமைத்தார். ஹிந்துஸ்தானின் லேண்ட்மாஸ்டர் போன்ற கார்கள் பெரும் வரவேற்பை பெற்றன. ஆனாலும், மலிவு விலையில் நடுத்தர மக்களுக்கான கார்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற பிர்லாவின் ஆசை இழுபறியாகவே இருந்தது. லேண்ட்மாஸ்டர் கார் மாடல் அறிமுகமாகி 3 ஆண்டுகள் கழித்து ஹிந்துஸ்தான் நிறுவனம் ஒரு புதிய காரை வடிவமைத்தது. இது அடுத்த 50 ஆண்டுகளுக்கு இந்திய சாலையில் ஆதிக்கம் செலுத்தும் என யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். அதன்படி, 1957ம் ஆண்டு முதல்முறையாக அம்பாசிடர் காரின் மார்க் 1 எடிஷன் சந்தைப்படுத்தப்பட்டது. நாட்டின் முதல் டீசல் கார் மற்றும் முழுமையாக உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார் என்ற பெருமையும் இதற்கு உண்டு. தாராளமான இடவசதியுடன் விற்பனைக்கு வந்த அம்பாசிடர் காரின் விலை அப்போது வெறும் 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஆகும்.

அம்பாசிடரின் அடுத்தடுத்த அப்க்ரேட்கள்.. வளர்ச்சி..
முதல் எடிஷனின் அதிரடி வெற்றியை தொடர்ந்து, 1962ம் ஆண்டு அம்பாசிடரின் மார்க் 2 எடிஷன் சந்தைப்படுத்தப்பட்டது. இதில் டெயில் லேம்ப், ப்ரேக் லேம்ப் மற்றும் உட்புறங்களில் சிறிய மேம்பாடுகள் ஆகியவை மேற்கொள்ளப்பட்டன. அதுவும் நல்ல வரவேற்பை பெற 1975ம் ஆண்டு மார்க் 3 எடிஷன் வெளியானது. நவீன தோற்றத்திற்காக வெளிப்புறம் மேம்படுத்தப்பட்டது. தொடர்ந்து 1979ம் ஆண்டு மார்க் 4 எடிஷன் அறிமுகமான நிலையில், பெட்ரோல் வண்டிகளை தனிநபர்கள் சொந்தமாக வைத்திருக்கக் கூடாது என அரசாங்கம் உத்தரவிட்டு இருந்தது. இதனால் ஆரம்பத்தில் இந்த வாகனம் அரசு அலுவலர்கள் மற்றும் வாடகை ஓட்டிகளுக்கு மட்டுமே கிடைத்தது. 1990ம் ஆண்டில் அம்பாசிடர் நோவா, 1992ம் ஆண்டு அம்பாசிடர் 1800 க்ளாசிக் போன்ற மாடல்கள் சந்தைப்படுத்தப்பட்டன.

அம்பாசிடர் காரை மக்கள் விரும்ப காரணம் என்ன?
நடுத்தர மக்கள் தொடங்கி பெரும் தலைவர்கள் மற்றும் பணக்காரர்கள் பலரும் இந்த காரை விரும்பி வாங்கினர். இதன் விலை மிகவும் குறைவாக இருந்ததும், இந்தியாவின் குண்டும் குழியுமான சாலைகளில் கூட மிருதுவான பயண அனுபவத்தை வழங்கியது முக்கிய காரணமாகும். ப்ரீமியம் டிசைன் காரணமாக பெரும் பணக்காரர்கள் கூட அம்பாசிடரில் பயணிப்பதை கவுரமாக கருதினர். பராமரிப்பு மிகவும் எளிதானதாக இருந்ததும், விற்பனைக்கு மிகப்பெரிய உந்துகோலாக இருந்தது. சாதாரண மெக்கானிக் கூட இதில் ஏற்படக்கூடிய பிரச்னையை சரி செய்ய முடியும் என்ற சூழல் இருந்தது. வெளிநாடுகளில் உள்ள ப்ரீமியம் கார்களை போன்ற டிசைனை கொண்டிருந்ததால், முதலமைச்சர்கள் தொடங்கி நேரு, வாஜ்பாய் போன்ற பல பிரதமர்களும் இந்த காரில் விரும்பி பயணித்தனர். இதனாலேயே விற்பனையான ஒட்டுமொத்த அம்பாசிடரில், சுமார் 16 சதவிகிதம் அரசு அதிகாரிகள் வசமே இருந்தன.
அம்பாசிடர் உண்மையில் அவ்ளோ வொர்த்தா?
போட்டியாளர்களை எல்லாம் தவிடுபொடியாக்கி ஆதிக்கம் செலுத்தும் அளவிற்கு அம்பாசிடர் அவ்வளவு தரமானதா? என கேட்டால் இல்லை என்பதே பதில். அரசாங்கத்தின் கொள்கைகள் ஹிந்துஸ்தான் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக அமைந்தது. 1952ம் ஆண்டு அரசு அமைத்த வரிக்குழு, இறக்குமதி செய்யபப்டும் கார்கள் மீது அதிகபப்டியான வரி விதிப்புக்கு பரிந்துரைத்தது. மேலும், உள்நாட்டில் கார் அசெம்ப்ளி மட்டுமே செய்யும் நிறுவனங்களின் இயக்கமும் நிறுத்தப்பட்டது. இதனால் ஃபோர்ட் மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற நிறுவனங்கள் நாட்டை விட்டே வெளியேற வேண்டியதாயிற்று. இதன் விளைவாக போட்டியே இல்லாமல், ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மிகப்பெரிய பயனாளர்கள் கூட்டத்தை வளைத்து போட்டது. இதனால் தான், இந்திய சாலைகளின் மன்னனாக 1980-81 காலகட்டத்தில் கார் சந்தையில் 71 சதவிகிதத்தை ஆக்கிரமித்து இருந்தது.

போட்டியாளர்களை வீழ்த்தியது எப்படி?
அரசாங்கத்தின் விதிகள் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நெருக்கடி தந்ததாலும், மஹிந்த்ரா மற்றும் டாடா நிறுவனங்களால் அந்த காலகட்டத்தில் ஏன் அம்பாசிடரை வீழ்த்த முடியவில்லை என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் கார் தயாரிப்பில் கவனம் செலுத்திய நேரத்தில் மற்ற இரண்டு நிறுவனங்களும், ட்ரக் மற்றும் ஜீப் போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தினர். இதுபோக அரசாங்கம் கொண்டு வந்த லைஜ்சென்ஸ் ராஜ் எனும் நடைமுறையின் மூலம், இந்தியாவில் ஒரு தொழிலை தொடங்கவே ஆயிரக்கணக்கான லைசென்ஸ் வாங்க வேண்டி இருந்தது. ஊழலும் கரைபுரண்டு ஓடிக்கொண்டு இருந்ததால், ஒரு பிரிவில் லைசென்ஸ் வாங்கவே பல ஆண்டுகள் ஓடிவிடும். ஆனால், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு நேரு அரசாங்கத்துடன் நல்ல நெருக்கம் இருந்ததால், அந்த பிரச்னைகளுக்கு மிக எளிதாகவே தீர்வு கிடைத்தது.
மாருதி சுசூகியின் என்ட்ரி..
1980-களில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு மெல்ல மெல்ல இந்திய சந்தைகள் திறந்துவிடப்படப்பட்டன. அப்போது ஜப்பானின் சுசூகி நிறுவனமும் இந்திய அரசாங்கத்துடன் கைகோர்த்து மாருதி சுசூகி உள்நாட்டில் உற்பத்தியை தொடங்கியது. 1983ம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி நிறுவனத்தின் முதல் காரான மாருதி 800 எனும் கார் சந்தைப்படுத்தப்பட்டது. அம்பாசிடரின் சாம்ராஜ்ஜியத்திற்கு விழுந்த முதல் அடியும் இதுவே ஆகும். அந்த நேரத்தில் டெல்லியில் அந்த காரின் விலை 52 ஆயிரத்து 500 ரூபாய் மட்டுமே. ஆனால், அம்பாசிடரின் விலை 70 ஆயிரம் ரூபாயாக உயர்ந்து, நடுத்தர மக்களுக்கான வாகனம் என்ற அடையாளத்தை இழந்துகொண்டிருந்தது. மாருதி தொடர்ந்து நடுத்தர மக்களை குறிவைத்து கார்களை இறக்கியது, அம்பாசிடருக்கு சறுக்கலாக மாறியது.
தூங்கி வழிந்த ஹிந்துஸ்தான் R&D
1990-களுக்குப் பிறகு நாட்டின் பொருளாதார கொள்கைகள் மாறியதால் ஹுண்டாய், ஃபோர்ட் மற்றும் டாடா போன்ற பல வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூரில் கால் பதித்தன. அவற்றின் புதிய கவர்ச்சிகரமான டிசைனை பார்த்த பிறகு பொதுமக்கள் அம்பாசிடரை பரிசீலனை பட்டியலில் இருந்து நீக்க தொடங்கினர். சந்தையில் தாங்கள் செலுத்தும் ஆதிக்கம் எப்போதும் தொடரும் என்ற நினைப்பில், காலத்திற்கேற்ப எந்தவொரு அப்டேட்களையும் மேற்கொள்ளாமல் இருந்தனர். உதாரணமாக, 1953ம் ஆண்டு வடிவமைக்கப்பட்ட அதே பழைய இன்ஜின் தான் 1990-களின் கடைசியில் கூட பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்துஸ்தான் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு குழுவில் சுமார் 250 பேர் இருந்தும், 25 ஆண்டுகாலமாக தூங்கிக் கொண்டே இருந்தார்களா? என பல விமர்சனங்களையும் ஊடகங்கள் வெளியிட்டன. இறுதியாக 2014ம் ஆண்டில் ஆட்குறைப்பு செய்யப்பட்டு, நிதி நெருக்கடி காரணமாக மேற்குவங்கத்தில் இருந்த ஆலையும் மூடப்பட்டது. தொடர்ந்து 2017ம் ஆண்டில் அம்பாசிடர் ப்ராண்டை வெறும் 80 கோடிக்கு, ப்யூஜியட் நிறுவனத்திற்கு விற்றது. இப்படியாக அம்பாசிடரின் ஆதிக்க பயணம் இந்தியாவில் முடிவுக்கு வந்தது.
புது எடிஷனில் அம்பாசிடர்..
அம்பாசிடர் காரின் மேம்படுத்தப்பட்ட எடிஷன் விரைவில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. இருப்பினும் காலத்திற்கேற்ப தங்களை மாற்றிக்கொள்ளாவிட்டால், எவ்வளவு பெரிய சாம்ராஜ்ஜியத்திற்கும் சரிவு என்பது தவிர்க்க முடியாதது என்பதையே அம்பாசிடரின் கதை நமக்கு உணர்த்துகிறது.
























