அரியமங்கலம் குப்பைகளை கல் குவாரிகளுக்கு மாற்றும் திட்டம்: எம்.எல்.ஏ முன்மொழிவுக்கு கடும் எதிர்ப்பு!
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை, துவாக்குடி நகராட்சியில் கைவிடப்பட்டுக் கிடக்கும் கல் குவாரிகளுக்கு மாற்ற வேண்டும்

தஞ்சாவூர்: திருச்சி அரியமங்கலம் குப்பைக்கிடங்கில் உள்ள குப்பைகளை கைவிடப்பட்ட கல் குவாரிகள் கொண்டு சென்று கொட்ட வேண்டும் என்று தவெக எம்எல்ஏவின் முன் மொழிவுக்கு அனைத்து தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வருகிறது.
திருச்சி அரியமங்கலம் குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை, துவாக்குடி நகராட்சியில் கைவிடப்பட்டுக் கிடக்கும் கல் குவாரிகளுக்கு மாற்ற வேண்டும் என்ற திருவெறும்பூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் எம்எல்ஏ நவலப்பட்டு விஜியின் முன்மொழிவு திருச்சியில் புதிய புயலைக் கிளப்பியுள்ளது. இந்த யோசனைக்குச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் மத்தியில் கடுமையான விமர்சனங்களும் எதிர்ப்புகளும் எழுந்துள்ளன.
60 ஆண்டுகாலப் பிரச்சினை
திருச்சி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 47.7 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரியமங்கலம் குப்பை கிடங்கு, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாநகராட்சியின் ஒட்டுமொத்தக் கழிவுகளும் கொட்டப்படும் இடமாக இருந்து வருகிறது. இதனால் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள் காரணமாக, அரியமங்கலம் குப்பை கிடங்கை முழுமையாக மீட்பது அண்மையில் நடந்த சட்டமன்றத் தேர்தலின் போது உள்ளூர் மக்களின் முதன்மைக் கோரிக்கையாக இருந்தது.
பயோமைனிங் பணிகள் விறுவிறுப்பு
தற்போது இந்தக் குப்பைகளை அறிவியல் பூர்வமாக அகற்ற 'பயோமைனிங்' (Biomining) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டப் பணிகள் மூலம் ஏற்கனவே 38 ஏக்கர் நிலம் வெற்றிகரமாக மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது நிலத்தடிக்குக் கீழே பல ஆண்டுகளாகப் புதைந்து கிடக்கும் சுமார் 6.1 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளைச் சுத்திகரிக்கும் மூன்றாம் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
சர்ச்சையை ஏற்படுத்திய எம்.எல்.ஏ-வின் ஆய்வு
தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று, அரியமங்கலம் பகுதியில் தவெக எம்எல்ஏ., நவலப்பட்டு விஜி நேரில் ஆய்வு நடத்தினார். அப்போது, அங்கு தேங்கியுள்ள பழைய குப்பைகளை முழுமையாக அகற்றி, துவாக்குடி பகுதியில் பயன்பாடின்றி கைவிடப்பட்டுக் கிடக்கும் ஆழமான கல் குவாரிகளுக்குள் கொட்டி நிரப்பலாம் என்று அவர் அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்தார். இந்த யோசனைதான் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்படும்: ஆர்வலர்கள் எச்சரிக்கை
எம்.எல்.ஏ-வின் இந்த முன்மொழிவை முற்றிலும் அறிவியல் பற்றிய அறிந்து கொள்ளாத தன்மை என்று சுற்றுச்சூழல் அமைப்புகள் சாடியுள்ளன. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், "சுத்திகரிக்கப்படாத மற்றும் மக்காத திடக்கழிவுகளைக் கல் குவாரிகளில் கொட்டுவது மிகப்பெரிய சுற்றுச்சூழல் பேரழிவிற்கு வழிவகுக்கும். குப்பைகளிலிருந்து கசியும் 'லீச்சேட்' (Leachate) எனப்படும் நச்சுத் திரவம், பாறைகளின் இடுக்கில் இறங்கி ஒட்டுமொத்த நிலத்தடி நீர் ஆதாரங்களையும் (Groundwater aquifers) முற்றிலுமாகப் பாழாக்கிவிடும். கைவிடப்பட்ட கல் குவாரிகளை மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்ற வேண்டுமே தவிர, குப்பை தொட்டியாக்கக் கூடாது. குப்பைகளை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவது அடிப்படைப் பிரச்சினையைத் தீர்க்காது" என்று எச்சரித்துள்ளனர்.
மாநகராட்சி தயங்குவது ஏன்? ₹3 கோடி அபராதப் பின்னணி
திருச்சி மாநகராட்சி நிர்வாகமும் இந்த யோசனையைச் செயல்படுத்தத் தயக்கம் காட்டி வருகிறது. இதற்கு மிக முக்கியக் காரணம், கடந்த ஆண்டு திருப்பூர் மாநகராட்சி இதேபோலப் பயன்பாடற்ற கல் குவாரியில் நகராட்சித் திடக்கழிவுகளைக் கொட்டியதற்காக, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் (TNPCB) அதற்கு ₹3 கோடி அபராதம் விதித்ததுதான். எனவே, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினால் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) மற்றும் மாநில சுற்றுச்சூழல் கண்காணிப்பு அமைப்புகளின் கடுமையான சட்ட நடவடிக்கைகளையும், அபராதங்களையும் சந்திக்க நேரிடும் என்று அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.
எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி விளக்கம்
விமர்சனங்கள் எழுந்தபோதிலும் தனது முன்மொழிவை மாற்றிக்கொள்ளப் போவதில்லை என்று எம்.எல்.ஏ நவல்ப்பட்டு விஜி தெரிவித்துள்ளாராம். இந்தக் கல் குவாரிகளில் கொட்டப்படும் குப்பைகள் பெரும்பாலும் பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் ஏற்கனவே மக்கிப்போன நிலையில் உள்ளன. மேலும், இந்தக் குவாரிகள் அனைத்தும் தொழிற்பேட்டைப் பகுதிகளில் (Industrialized area) அமைந்துள்ளதால், குடியிருப்புப் பகுதிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது. தற்பொழுது அரியமங்கலத்தில் நடைபெறும் பயோமைனிங் செயல்முறைகள் மீது எனக்குச் சில சந்தேகங்கள் உள்ளன" என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அறிவியல் பூர்வமான தீர்வே அவசியம்
அரியமங்கலம் குப்பை கிடங்குப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண தற்போதைய பயோமைனிங் முறையே போதுமானது என்றும், அதை விடுத்துக் குவாரிகளில் குப்பைகளைக் கொட்டுவது தேவையற்ற சட்டரீதியான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான சிக்கல்களை மட்டுமே உருவாக்கும் என்றும் அதிகாரிகள் கருதுகின்றனர். மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும் இணைந்து மாசற்ற, அறிவியல் பூர்வமான முடிவை எடுப்பதே ஒட்டுமொத்த திருச்சி மாவட்ட மக்களின் ஆரோக்கியத்திற்கு உகந்ததாக இருக்கும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்





















