மேலும் அறிய
Advertisement
காயல்பட்டினத்தில் நடந்த கடையடைப்பு போராட்டம் - உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கபோவதாக அறிவிப்பு
ஒரே தெருவை மூன்று பகுதிகளாக பிரித்து வெவ்வேறு வார்டுகளுடன் இணைத்து வார்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
தமிழகத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சிகளிலும் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக அரசால் வார்டுகள் சீரமைக்கப்பட்டு மறுவரையறை செய்யப்பட்டன. அதில் பல்வேறு குழப்பங்களும், குளறுபடிகளும் இருந்ததையடுத்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் எதிர்ப்புகள் எழுந்தன. அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சியிலும் வார்டுகள் மறுவரையறை செய்யப்பட்டதில் பல்வேறு குளறுபடிகள், குழப்பங்கள் இருப்பதாக மக்கள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஒரே தெருவை மூன்று பகுதிகளாக பிரித்து வெவ்வேறு வார்டுகளுடன் இணைத்து வார்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
ஓரளவு சமமான மக்கள்தொகை அடிப்படையில் அனைத்து வார்டுகளையும் மறுசீரமைப்பு செய்யாமல், பெரும் ஏற்ற இறக்கத்துடன் வார்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன என பல்வேறு குறைகளை மக்கள் சுட்டிக் காட்டி, அவற்றை முறைப்படி சரி செய்ய வலியுறுத்தி மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு, நடப்பது என்ன குழு, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் சார்பில் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி வெகுவிரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், வார்டுகள் சீரமைப்பில் உள்ள குறைகள் இதுவரை நிவர்த்தி செய்யப்படாததால், குளறுபடியான வார்டுகள் அடிப்படையில் நடத்தப்படும் நகர்பபுற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், இதுகுறித்த மக்களின் எதிர்ப்பை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் காயல்பட்டினத்தில் முழு கடையடைப்பும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்படும் என்றும் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு, நடப்பது என்ன, காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கியப் பேரவை உள்ளிட்ட பொதுநல அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், அனைத்து ஜமாஅத்துகள், புறநகர் ஊர் அமைப்புகள் அறிவித்திருந்தன.
அதன்படி, காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் வியாபாரிகள் முழு கடையடைப்பு நடத்தினர். மருந்துக் கடைகளை தவிர அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன. இதனால் காயல்பட்டினம் நகரில் உள்ள அனைத்து சாலைகளும் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்களின் அவசரத் தேவைக்காக மட்டும் வாடகை ஆட்டோக்கள் இயங்கின. வங்கிகள், அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல இயங்கின. அதுபோல பேருந்து போக்குவரத்து தடையின்றி நடைபெற்றது. இந்நிலையில் வார்டு மறுசீரமைப்பில் உள்ள குளறுபடிகளை களைந்து மீண்டும் வார்டுகளை முறையாக சீரமைத்து அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி மாலையில் காயல்பட்டினம் வள்ளல் சீதக்காதி திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பொதுநல அமைப்புகளை சேர்ந்தவர்கள், வியாபாரிகள், வணிகர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து காயல்பட்டினத்தில் பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினர் ஈடுப்பட்டு இருந்தனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
ஐபிஎல்
இந்தியா
தேர்தல் 2024
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
for smartphones
and tablets
and tablets
வினய் லால்Columnist
Opinion