தமிழகத்தில் சொத்து பதிவு செய்பவர்களுக்கு நிம்மதி ! ஸ்டார் 3.0 மூலம் தானியங்கி மேல்முறையீடு வசதி
வழிகாட்டி மதிப்பு முரண்பாடுகள் தொடர்பாக மேல்முறையீடு செய்ய புதிய வசதி ஏற்பாடு - பதிவுத் துறை அதிகாரிகள்

பத்திரங்கள் வழிகாட்டி மதிப்பில் பதிவு
தமிழகத்தில் வீடு , மனை விற்பனையின் போது, சந்தை மதிப்பு அடிப்படையில், விலை பேசப்பட்டு, பணம் கைமாறினாலும், பத்திரங்கள் வழிகாட்டி மதிப்பு அடிப்படையிலேயே பதிவாகின்றன. இதற்காக, சர்வே எண் வாரியாகவும், தெரு அடிப்படையிலும், நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்புகள் நிர்ணயிக்கப்பட்டு உள்ளன.
இதில், பல இடங்களில் சந்தை நிலவரத்தை விட, வழிகாட்டி மதிப்பு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறது. இவ்வாறு வழிகாட்டி மதிப்பு அதிகமாக உள்ள நிலையில், அதை ஏற்று கூடுதல் தொகையை முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணமாக மக்கள் செலுத்தி வருகின்றனர்.
வழிகாட்டி மதிப்பு மேல்முறையீடு
இந்த கூடுதல் செலவு சில ஆயிரம் ரூபாய் வரை இருக்கும் போது, அதை யாரும் பெரிய பிரச்னையாக கொள்வதில்லை. ஆனால், லட்சம் ரூபாய்க்கு மேல் கூடுதல் தொகை செலுத்த வேண்டிய சூழல் ஏற்படும் போது மக்கள் மேல் முறையீடு செய்ய விரும்புகின்றனர்.
பதிவுச் சட்டப்படி , வழிகாட்டி மதிப்பை விட குறைந்த மதிப்பில் பத்திரங்கள் வந்தால், அதை மாவட்ட பதிவாளர் வாயிலாக, மேல்முறையீட்டுக்கு சார் - பதிவாளர்கள் அனுப்ப வேண்டும். ஆனால், கடந்த ஆட்சியில் இது போன்று மேல்முறையீட்டுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.
அப்போதைய அமைச்சரின் அலுவலகத்தில் தெரிவித்து, அனுமதி பெற்ற பின் தான், மேல்முறையீட்டுக்கு பத்திரம் அனுப்பப்படும். தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த விஷயத்தில் தெளிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது ;
வழிகாட்டி மதிப்பு முரண்பாடுகள் தொடர்பாக, மேல்முறையீட்டுக்கு தற்போது தடை எதுவும் இல்லை. குறிப்பாக, 'ஸ்டார் 3.0' மென்பொருள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், பதிவுக்கான அடிப்படை விபரங்களை உள்ளீடு செய்யும் போதே, வழிகாட்டி மதிப்பு வேறுபாடு தெரிந்து விடும். பதிவுத் துறையின் வழிகாட்டி மதிப்பை விட, பத்திர மதிப்பு குறைவாக இருந்தால், அந்த பத்திரத்தை தானியங்கி முறையில் மேல் முறையீட்டுக்கு அனுப்ப வசதி செய்யப்பட்டுள்ளது.
சார் - பதிவாளர்கள், இதற்கு ஒத்துழைத்தால் போதும். சம்பந்தப்பட்ட பத்திரப் பிரதி வருவதற்கு முன்பே, மேல்முறையீட்டு பணிகள் தொடங்கி விடும். இந்த புதிய வசதியை சார் - பதிவாளர்கள் அனுமதித்தால், மேல்முறையீடு தொடர்பாக பொது மக்களுக்கு அலைச்சல் தவிர்க்கப்படும் என இவ்வாறு அவர்கள் கூறினர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















